முத்து ஓலை தனைக் கிழித்து அயிலைப் போர் இகலிச் சிவத்து முகத் தாமரையில் செருக்கிடும்.....விழி மானார் முற்றாது இளகிப் பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்து ஆரம் அழுத்து உகிர்க் குறி.....அதனாலே வித்தார கவித் திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும்.....உழல்வேனோ மெய்த் தேவர் துதித்திடத் தரு பொற்பு ஆர் கமலப் பதத்தினை மெய்ப்பாக வழுத்திட க்ருபை.....புரிவாயே பத்தான முடித் தலைக் குவடு உற்று ஆட அரக்கருக்கு இறை பட்டு ஆவி விடச் செயித்தவன்.....மருகோனே பற்பாசன் மிகைச் சிரத்தை அறுத்து ஆதவனைச் சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன்.....மகிழ்வோனே கொத்து ஆர் கதலிப் பழக் குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிரக் கதித்து எழு.....கயல் ஆரம் கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றாறு தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள்.....பெருமாளே.
முத்தால் ஆகிய கம்மலைத் தாக்கி, வேலாயுதத்தைப் போரில் மாறுபட்டுப் பகைத்து, செந்நிறம் கொண்டு, முகமாகிய தாமரை மலரில் கர்வித்து நிற்கும் கண்களை உடைய மாதர்களின் முற்றாமல் நெகிழ்ந்து பெருத்துள்ளதாய், அழகிய கச்சு மேலுள்ள மாலையை அற்றுப் போகும்படி செய்த, நல்ல முத்து மாலை அழுத்துவதால் உண்டாகும் நகக் குறியைக் கொண்டதும், வித்தார வகையைச் சேர்ந்த கவிகளைப் பாட வல்ல புலவர்களின் ஓலை நூல்களுக்கு ஒப்பானதாய் இணைந்துள்ளதாய் எழுந்துள்ள மலை போன்ற மார்பகத்தில் தினந்தோறும் அலைச்சல் உறுவேனோ? உண்மைத் தேவர்கள் போற்ற அவர்களுக்கு உதவும் அழகு நிறந்த தாமரைத் திருவடிகளை நானும் மெய்யான பக்தியுடன் வாழ்த்த அருள் புரிவாயாக. பத்துத் தலைகளான மலைகள் அறுபட்டு அசைந்து விழ, அசுரர்களுக்குத் தலைவனாகிய ராவணன் (போரில்) அழிந்து உயிர் விடும்படி வெற்றி கொண்டவனாகிய திருமாலின் மருகனே, பத்ம பீடத்தில் இருக்கும் பிரமனுடைய அதிகமாயிருந்த ஐந்தாவது தலையை அறுத்துத் தள்ளி, சூரியனைக் கோபித்து பற்கள் உதிரும்படி (தக்ஷயாகத்தில்) உடைத்தெறிந்த பரம்பொருளாகிய சிவ பெருமான் மகிழ்ச்சி கொள்ளும் பெருமானே, கொத்தாயுள்ள வாழைப் பழக் குலைகளும் விரிந்துள்ள பலாப்பழங்களின் குலைகளும் கொத்தாக அப்படியே உதிரும்படி குதித்துத் தாவுகின்ற கயல் மீன்கள் முத்துக்களைக் கொட்டி நீர்ச் சுழிகளில் தள்ளி ஒதுக்கி, சிறிய ஆற்றில் மகிழும் குற்றாலத்துச் சிவபெருமான் அருகே வீற்றிருந்து அருளுகின்ற பெருமாளே.
முத்து ஓலை தனைக் கிழித்து அயிலைப் போர் இகலிச் சிவத்து முகத் தாமரையில் செருக்கிடும் விழி மானார் ... முத்தால் ஆகிய கம்மலைத் தாக்கி, வேலாயுதத்தைப் போரில் மாறுபட்டுப் பகைத்து, செந்நிறம் கொண்டு, முகமாகிய தாமரை மலரில் கர்வித்து நிற்கும் கண்களை உடைய மாதர்களின் முற்றாது இளகிப் பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்து ஆரம் அழுத்து உகிர்க் குறி அதனாலே ... முற்றாமல் நெகிழ்ந்து பெருத்துள்ளதாய், அழகிய கச்சு மேலுள்ள மாலையை அற்றுப் போகும்படி செய்த, நல்ல முத்து மாலை அழுத்துவதால் உண்டாகும் நகக் குறியைக் கொண்டதும், வித்தார கவித் திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ ... வித்தார வகையைச் சேர்ந்த கவிகளைப் பாட வல்ல புலவர்களின் ஓலை நூல்களுக்கு ஒப்பானதாய் இணைந்துள்ளதாய் எழுந்துள்ள மலை போன்ற மார்பகத்தில் தினந்தோறும் அலைச்சல் உறுவேனோ? மெய்த் தேவர் துதித்திடத் தரு பொற்பு ஆர் கமலப் பதத்தினை மெய்ப்பாக வழுத்திட க்ருபை புரிவாயே ... உண்மைத் தேவர்கள் போற்ற அவர்களுக்கு உதவும் அழகு நிறந்த தாமரைத் திருவடிகளை நானும் மெய்யான பக்தியுடன் வாழ்த்த அருள் புரிவாயாக. பத்தான முடித் தலைக் குவடு உற்று ஆட அரக்கருக்கு இறை பட்டு ஆவி விடச் செயித்தவன் மருகோனே ... பத்துத் தலைகளான மலைகள் அறுபட்டு அசைந்து விழ, அசுரர்களுக்குத் தலைவனாகிய ராவணன் (போரில்) அழிந்து உயிர் விடும்படி வெற்றி கொண்டவனாகிய திருமாலின் மருகனே, பற்பாசன் மிகைச் சிரத்தை அறுத்து ஆதவனைச் சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே ... பத்ம பீடத்தில் இருக்கும் பிரமனுடைய அதிகமாயிருந்த ஐந்தாவது தலையை அறுத்துத் தள்ளி, சூரியனைக் கோபித்து பற்கள் உதிரும்படி (தக்ஷயாகத்தில்) உடைத்தெறிந்த பரம்பொருளாகிய சிவ பெருமான் மகிழ்ச்சி கொள்ளும் பெருமானே, கொத்து ஆர் கதலிப் பழக் குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிரக் கதித்து எழு கயல் ஆரம் கொட்டா சுழியில் கொழித்து எறி ... கொத்தாயுள்ள வாழைப் பழக் குலைகளும் விரிந்துள்ள பலாப்பழங்களின் குலைகளும் கொத்தாக அப்படியே உதிரும்படி குதித்துத் தாவுகின்ற கயல் மீன்கள் முத்துக்களைக் கொட்டி நீர்ச் சுழிகளில் தள்ளி ஒதுக்கி, சிற்றாறு தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே. ... சிறிய ஆற்றில் மகிழும் குற்றாலத்துச் சிவபெருமான் அருகே வீற்றிருந்து அருளுகின்ற பெருமாளே.