வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து
வீதி தோறும் நின்ற மடவார் பால் வேளை என வந்து தாளினில் விழுந்து
வேடை கெட நண்பு பல பேசித் தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு
சீதள தனங்களினில் மூழ்கித் தேடிய தனங்கள் பாழ் பட முயன்று
சேர் கதி அது இன்றி உழல்வேனோ
ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன்
ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த ஆரண முகுந்தன் மருகோனே
வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா
மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த பெருமாளே.
வேனில் பருவத்துக்கு உரிய மன்மதன் தனது ஐந்து மலர் அம்புகளைச் செலுத்த, மனம் வேதனை அடைந்து, தெரு மூலைகள் தோறும் நின்றுள்ள மாதர்களிடத்தே இதுவே சமயம் என்று வந்து அவர்கள் காலில் விழுந்து, ஆசை தீர நட்பான பல பேச்சுக்களைப் பேசி, தேனைக் காட்டிலும் அதிக நறு மணம் கொண்ட வாயிதழ் ஊறலை உண்டு, (அம்மாதர்களின்) குளிர்ந்த மார்பகங்களில் முழுகி, தேடி வைத்திருந்த செல்வம் எல்லாம் அழிக்க முயற்சி செய்து, அடைய வேண்டிய கதியை (வீட்டுப் பேற்றை) அடைதல் இல்லாமல் அலைந்து திரிவேனோ? பசுக் கூட்டங்களை மேய்த்து ஓட்டிச் செலுத்தியும், பெரிய பூமியை (ஓர் திருவடி கொண்டு) அளந்தும், ஓர் ஆலிலையில் ஊழி அன்று துயில் கொண்ட மாயன், இடையர் வீடுகளில் போய் பாலையும், தயிரையும் கலந்து உவகையுடன் பருகியவனும், வேதம் போற்றும் முகுந்தனுமாகிய திருமாலின் மருகனே, தேவர்கள் புகழ்ந்து போற்றிய தேவயானையுடனும், வேடர்கள் மகளாகிய மான் போன்ற வள்ளியுடனும் விளங்கும் அழகிய மார்பனே, பெருமை வாய்ந்த வேதங்கள் ஒலிக்கின்ற ஸ்ரீபுருட மங்கை (நாங்குநேரி) என்னும் பெரிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.
வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து ... வேனில் பருவத்துக்கு உரிய மன்மதன் தனது ஐந்து மலர் அம்புகளைச் செலுத்த, மனம் வேதனை அடைந்து, வீதி தோறும் நின்ற மடவார் பால் வேளை என வந்து தாளினில் விழுந்து ... தெரு மூலைகள் தோறும் நின்றுள்ள மாதர்களிடத்தே இதுவே சமயம் என்று வந்து அவர்கள் காலில் விழுந்து, வேடை கெட நண்பு பல பேசித் தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு ... ஆசை தீர நட்பான பல பேச்சுக்களைப் பேசி, தேனைக் காட்டிலும் அதிக நறு மணம் கொண்ட வாயிதழ் ஊறலை உண்டு, சீதள தனங்களினில் மூழ்கித் தேடிய தனங்கள் பாழ் பட முயன்று ... (அம்மாதர்களின்) குளிர்ந்த மார்பகங்களில் முழுகி, தேடி வைத்திருந்த செல்வம் எல்லாம் அழிக்க முயற்சி செய்து, சேர் கதி அது இன்றி உழல்வேனோ ... அடைய வேண்டிய கதியை (வீட்டுப் பேற்றை) அடைதல் இல்லாமல் அலைந்து திரிவேனோ? ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன் ... பசுக் கூட்டங்களை மேய்த்து ஓட்டிச் செலுத்தியும், பெரிய பூமியை (ஓர் திருவடி கொண்டு) அளந்தும், ஓர் ஆலிலையில் ஊழி அன்று துயில் கொண்ட மாயன், ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த ஆரண முகுந்தன் மருகோனே ... இடையர் வீடுகளில் போய் பாலையும், தயிரையும் கலந்து உவகையுடன் பருகியவனும், வேதம் போற்றும் முகுந்தனுமாகிய திருமாலின் மருகனே, வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா ... தேவர்கள் புகழ்ந்து போற்றிய தேவயானையுடனும், வேடர்கள் மகளாகிய மான் போன்ற வள்ளியுடனும் விளங்கும் அழகிய மார்பனே, மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த பெருமாளே. ... பெருமை வாய்ந்த வேதங்கள் ஒலிக்கின்ற ஸ்ரீபுருட மங்கை (நாங்குநேரி) என்னும் பெரிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.