அன்னம் மிசை செம் நளிநம் சென்மி கணக்கு அந் நியமத்து
அன்ன மயப் புலால் யாக்கை துஞ்சிடாது என்ற அந் நினைவு உற்று
அல் நினைவு உற்று அன்னியரில் தன்னெறி புக்கு
அன்னிய சற்று உலா மூச்சு அடங்க
யோகம் என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு
இன்னணம் எய்த்து அடா மார்க்கம் இன்புறாது என்று
இன்னது எனக்கு என்னும் மதப் புன்மை கெடுத்து இன்னல் விடுத்து
இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ
கன்னல் மொழி பின் அளகம் அத்து அன்ன நடை பன்ன உடை
அச் சுறா வீட்டு கண் அவிர் கெண்டையாளை
கன்னமிடப் பின் இரவில் துன்னு புரைக் கல் முழையில்
கல் நிலையில் புகா வேர்த்து நின்ற வாழ்வே
பொன் அசலப் பின் அசலச் சென்னியில் நல் கன்ன புர
பொன்னி நதிக் கரா நீர்ப் புயங்க நாதா
பொன் மலையில் பொன்னின் நகர்ப் புண்ணியர்
பொற் பொன் மவுலிப் பொன் உலகத்து இராசாக்கள் தம்பிரானே.
அன்னப் பறவையின் மேல் அமர்பவனும், (திருமாலின் உந்தியிலுள்ள) செந்தாமரையில் உதித்தவனுமாகிய பிரமன் விதித்த கணக்கில் உள்ள அந்தக் கெடுகாலம் வரை நியமிக்கப்பட்டு இருந்ததின்படி, சோற்றின் மயமான, மாமிசத்தோடு கூடிய இந்த உடல் அழிந்து போகாது என்ற அந்த நினைவின் காரணமாக பல மயக்க எண்ணங்களைக் கொண்டு, அயலார் மீது ஐம்புலன்களின் வழியே சென்று ஈடுபட்டு, பின்னும் சிறிது சிறிதாக உலாவுகின்ற மூச்சு அடங்கும்படி, யோகம் என்ற மயக்கத்தைத் தரும், துன்பத்தைக் கொடுக்கும், பல விதமான குற்றத்துக்கு இடமான நூல்களைக் கற்று, பின் அங்ஙனம் கற்ற இன் பிற பாடங்களையும் விடுத்து, இவ்வாறாக இளைப்புற்றுச் செல்லும் தகாத வழிகள் இன்பத்தைத் தராது என்று உணர்ந்து, இவ்வழிதான் எனக்குத் தகுந்தது என்கின்ற கொள்கையின் இழிவுத் தன்மையை ஒழித்து, துன்பங்கள் யாவையும் ஓட்டி விலக்கி, இத் தன்மையது என்று விளக்க முடியாத பேரின்ப வாழ்க்கையை உனது திருவருள் தராதோ? கற்கண்டு போன்ற பேச்சையும், பின்னப்பட்ட கூந்தலையும், அன்னம் போன்ற நடையையும், வாழை இலைகளால் ஆகிய ஆடையையும் கொண்டவளாய், அந்தச் சுறா மீனையும் அடக்க வல்ல விளக்கம் கொண்டுள்ள கெண்டை மீன் போன்ற கண்களை உடையவளாகிய வள்ளியை களவு கொண்டு போவதற்காக, பொழுது விடிவதற்கு முன், பொருத்தமான இடமாகிய கல் குகையில், கற்சிலை போல் அசைவற்ற நிலையில் புகுந்து வேர்வையுறக் காத்திருந்த செல்வனே, பொன் மலையாகிய மேருவுக்குப் பின்பு அசைவற்றதான (எதற்கும் கலங்காத) சோழ அரசனின் ஆட்சியில் உள்ள அழகிய கன்னபுரம் என்னும் தலத்தில் வீற்றிருந்து, முதலைகள் வாழும் காவேரி நதிக்கரையில் உள்ள, பாம்பினைச் சடையில் தரித்த சிவபெருமானுக்குத் தலைவனே, கயிலாய மலையிலும், லக்ஷ்மி வாழும் திரு வைகுண்டத்திலும் உள்ள புண்ணியர்களுக்கும், அழகிய பொன் மகுடங்களை அணிந்த, விண்ணுலகத்தில் உள்ள இந்திரர்களுக்கும் தம்பிரானே.
அன்னம் மிசை செம் நளிநம் சென்மி கணக்கு அந் நியமத்து ... அன்னப் பறவையின் மேல் அமர்பவனும், (திருமாலின் உந்தியிலுள்ள) செந்தாமரையில் உதித்தவனுமாகிய பிரமன் விதித்த கணக்கில் உள்ள அந்தக் கெடுகாலம் வரை நியமிக்கப்பட்டு இருந்ததின்படி, அன்ன மயப் புலால் யாக்கை துஞ்சிடாது என்ற அந் நினைவு உற்று ... சோற்றின் மயமான, மாமிசத்தோடு கூடிய இந்த உடல் அழிந்து போகாது என்ற அந்த நினைவின் காரணமாக அல் நினைவு உற்று அன்னியரில் தன்னெறி புக்கு ... பல மயக்க எண்ணங்களைக் கொண்டு, அயலார் மீது ஐம்புலன்களின் வழியே சென்று ஈடுபட்டு, அன்னிய சற்று உலா மூச்சு அடங்க ... பின்னும் சிறிது சிறிதாக உலாவுகின்ற மூச்சு அடங்கும்படி, யோகம் என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு ... யோகம் என்ற மயக்கத்தைத் தரும், துன்பத்தைக் கொடுக்கும், பல விதமான குற்றத்துக்கு இடமான நூல்களைக் கற்று, பின் அங்ஙனம் கற்ற இன் பிற பாடங்களையும் விடுத்து, இன்னணம் எய்த்து அடா மார்க்கம் இன்புறாது என்று ... இவ்வாறாக இளைப்புற்றுச் செல்லும் தகாத வழிகள் இன்பத்தைத் தராது என்று உணர்ந்து, இன்னது எனக்கு என்னும் மதப் புன்மை கெடுத்து இன்னல் விடுத்து ... இவ்வழிதான் எனக்குத் தகுந்தது என்கின்ற கொள்கையின் இழிவுத் தன்மையை ஒழித்து, துன்பங்கள் யாவையும் ஓட்டி விலக்கி, இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ ... இத் தன்மையது என்று விளக்க முடியாத பேரின்ப வாழ்க்கையை உனது திருவருள் தராதோ? கன்னல் மொழி பின் அளகம் அத்து அன்ன நடை பன்ன உடை ... கற்கண்டு போன்ற பேச்சையும், பின்னப்பட்ட கூந்தலையும், அன்னம் போன்ற நடையையும், வாழை இலைகளால் ஆகிய ஆடையையும் கொண்டவளாய், அச் சுறா வீட்டு கண் அவிர் கெண்டையாளை ... அந்தச் சுறா மீனையும் அடக்க வல்ல விளக்கம் கொண்டுள்ள கெண்டை மீன் போன்ற கண்களை உடையவளாகிய வள்ளியை கன்னமிடப் பின் இரவில் துன்னு புரைக் கல் முழையில் ... களவு கொண்டு போவதற்காக, பொழுது விடிவதற்கு முன், பொருத்தமான இடமாகிய கல் குகையில், கல் நிலையில் புகா வேர்த்து நின்ற வாழ்வே ... கற்சிலை போல் அசைவற்ற நிலையில் புகுந்து வேர்வையுறக் காத்திருந்த செல்வனே, பொன் அசலப் பின் அசலச் சென்னியில் நல் கன்ன புர ... பொன் மலையாகிய மேருவுக்குப் பின்பு அசைவற்றதான (எதற்கும் கலங்காத) சோழ அரசனின் ஆட்சியில் உள்ள அழகிய கன்னபுரம் என்னும் தலத்தில் வீற்றிருந்து, பொன்னி நதிக் கரா நீர்ப் புயங்க நாதா ... முதலைகள் வாழும் காவேரி நதிக்கரையில் உள்ள, பாம்பினைச் சடையில் தரித்த சிவபெருமானுக்குத் தலைவனே, பொன் மலையில் பொன்னின் நகர்ப் புண்ணியர் ... கயிலாய மலையிலும், லக்ஷ்மி வாழும் திரு வைகுண்டத்திலும் உள்ள புண்ணியர்களுக்கும், பொற் பொன் மவுலிப் பொன் உலகத்து இராசாக்கள் தம்பிரானே. ... அழகிய பொன் மகுடங்களை அணிந்த, விண்ணுலகத்தில் உள்ள இந்திரர்களுக்கும் தம்பிரானே.