சொருபப் பிரகாச விசுவருப பிரமாக நிச சுக விப்பிர தேச ரச.....சுப மாயா துலியப் பிரகாச மத சொலியற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர்.....வயிறிடையூறு கருவிற் பிறவாதபடி உருவிற்பிர மோத அடி களையெத்திடு இராகவகை.....யதின்மீறி கருணைப்பிரகாச உன தருளுற்றிட ஆசில்சிவ கதிபெற்று இடரானவையை.....யொழிவேனோ குரு குக்குட வார கொடி செரு வுக்கிர ஆதப அயில் பிடிகைத்தல ஆதி அரி.....மருகோனே குமரப்பிரதாப குக சிவசுப்பிர மாமணிய குணமுட்டர் அவாவசுரர்.....குலகாலா திருவொற்றி யுறாமருவு நகரொற்றியுர் வாரிதிரை யருகுற்றிடும் ஆதிசிவ.....னருள்பாலா திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்கள் இதயத்திட மேமருவு.....பெருமாளே.
பிரகாசமான உருவத்தை உடையவனே, சராசரம் யாவையும் கொண்ட பேருருவனே, பிரம்மப் பொருளாக நின்று, உண்மையான சுகத்தைத் தருபவனே, அந்தணரின் தேஜை
உடையவனே, இன்ப சுபப் பொருளே, அழியாத சுத்தப் பிரகாசனே, மதங்களின் தொந்தரவைக் கடந்த இன்பம் கூடியவனே, பலவகையான பராக்கிரமத்தை உடையவனே, மாதரின் வயிற்றிடையே ஊறும் கருவில் பிறவாதபடி, உன் திருவுருவில் விரும்பத்தக்க திருவடிகளைப் போற்றும் கீத வகைகளில் மேம்பட்டவனாய் யான் ஆகி, கருணை ஒளிப்பிழம்பே, உன் திருவருள் கூடுவதால் குற்றமற்ற சிவகதியை யான் பெற்று, துன்பங்கள் யாவையும் கடக்க மாட்டேனோ? நிறமுள்ள சேவல் நிறைந்து விளங்கும் கொடியை உடையவனே, போரில் உக்கிரமாக, வெயில் ஒளி வீசும் வேலினை பிடித்துள்ள திருக்கரங்களை உடைய ஆதியே, திருமாலின் மருகனே, குமரனே, கீர்த்தி உள்ளவனே, குகனே, மிகத் தூய்மையான பேரொளியோனே, குணக் குறைவுள்ளவரும் ஆசை மிகுந்தவருமான அசுரர்களின் குலத்துக்கே யமனாக நின்றவனே, லக்ஷ்மி சேர்ந்து பொருந்தி இருக்கும் நகரமான திருவொற்றியூரில் கடல் அலைக்குச் சமீபத்தில் இருக்கும் ஆதிசிவன் அருளிய குழந்தையே, விளக்கம் கொண்ட யோகத்திலும், தவத்திலும் மிக்க சிறப்பு அடைந்த மகா தவசிகளின் நெஞ்சம் என்னும் இடத்திலே வீற்றிருக்கும் பெருமாளே.