பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும்
புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே
உருகிட உள்ள விரகு உடை உள்ளம்
உலகு உயிர் உள்ள பொழுதே நின்று உமை தரு(ம்) செல்வன் என
மிகு கல்வி உணர்வொடு சொல்ல உணராதோ
மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா
வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா
அரு வரை விள்ள அயில்விடும் மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே
அடையலர் செல்வம் அளறு இடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே.
போர் செய்யவல்ல கள்ளத்தனம் உள்ள கயல் மீன் போல் இரண்டு கண்கள் வள்ளிக் கொடி போன்ற காதுகளைத் தாக்கி விளையாடுகின்ற புளகாங்கிதம் கொண்ட, கொடி போல் இடை வாய்ந்த, இளம் பெண்கள் புன்னகை புரியும் போது தெரியும் முல்லை அரும்பு போன்ற பற்களைக் கண்டு, உருகத் தக்க உற்சாகத்தை அடையும் என் மனம், இவ்வுலகில் உயிர் இருக்கும் பொழுதே நிலைத்து நின்று உமாதேவியார் பெற்றெடுத்த செல்வனே என்று உன்னை மிகுந்த கல்வி உணர்ச்சியோடு சொல்லுவதற்குத் தெரிந்து கொள்ளாதோ? வாசனை மலர்கள் உள்ள வள்ளிபுரத்தில் உள்ள வள்ளி மலையில் இருக்கும் குறப்பெண் வள்ளியின் கணவனே, பெரிதாக உள்ள பூமியின் முழு எல்லையையும் (பறந்தே) அளவிட்ட, பழைய மரகதப் பச்சை நிறமுள்ள அழகிய மயில் மீதேறும் வீரனே, அரிய கிரவுஞ்ச மலை உடைபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய போர் வீரனே, அழகிய வயல்கள் சூழ்ந்த வெள்ளி நகரில் வாழும் செல்வமே, பகைவர்களின் செல்வம் எல்லாம் சேற்றிடையே படிந்து அழியுமாறு போர் செய்ய வல்ல பெருமாளே.
பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும் ... போர் செய்யவல்ல கள்ளத்தனம் உள்ள கயல் மீன் போல் இரண்டு கண்கள் வள்ளிக் கொடி போன்ற காதுகளைத் தாக்கி விளையாடுகின்ற புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே ... புளகாங்கிதம் கொண்ட, கொடி போல் இடை வாய்ந்த, இளம் பெண்கள் புன்னகை புரியும் போது தெரியும் முல்லை அரும்பு போன்ற பற்களைக் கண்டு, உருகிட உள்ள விரகு உடை உள்ளம் ... உருகத் தக்க உற்சாகத்தை அடையும் என் மனம், உலகு உயிர் உள்ள பொழுதே நின்று உமை தரு(ம்) செல்வன் என ... இவ்வுலகில் உயிர் இருக்கும் பொழுதே நிலைத்து நின்று உமாதேவியார் பெற்றெடுத்த செல்வனே என்று உன்னை மிகு கல்வி உணர்வொடு சொல்ல உணராதோ ... மிகுந்த கல்வி உணர்ச்சியோடு சொல்லுவதற்குத் தெரிந்து கொள்ளாதோ? மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா ... வாசனை மலர்கள் உள்ள வள்ளிபுரத்தில் உள்ள வள்ளி மலையில் இருக்கும் குறப்பெண் வள்ளியின் கணவனே, வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா ... பெரிதாக உள்ள பூமியின் முழு எல்லையையும் (பறந்தே) அளவிட்ட, பழைய மரகதப் பச்சை நிறமுள்ள அழகிய மயில் மீதேறும் வீரனே, அரு வரை விள்ள அயில்விடும் மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே ... அரிய கிரவுஞ்ச மலை உடைபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய போர் வீரனே, அழகிய வயல்கள் சூழ்ந்த வெள்ளி நகரில் வாழும் செல்வமே, அடையலர் செல்வம் அளறு இடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே. ... பகைவர்களின் செல்வம் எல்லாம் சேற்றிடையே படிந்து அழியுமாறு போர் செய்ய வல்ல பெருமாளே.