மெய்ச் சார்வு அற்றே பொய்ச் சார்வு உற்றே
நிச்சார் துற்பப் பவ வேலை விட்டேறிப் போக ஒட்டாமல்
தே(ன்) மட்டே அத் தத்தையர் மேலே பிச்சாய் உச்சாகிப் போர் எய்த்தார்
பத்தார் விற்பொற் கழல்பேணிப் பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்முன்
பாலைக் கற்பகமே தான்
செச் சாலிச் சாலத் தேறிச் சேல் உற்று ஆணித்துப் பொழிலேறும்
செக்கோடைக் கோடுக்கே நிற்பாய் நித்தா
செக்கர்க் கதிர் ஏனல் முச்சாலிச் சாலித் தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சிப் புயவேளே
முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.
உண்மையான புகலிடத்தை விட்டுவிட்டு, பொய்யான துணையைப் பற்றிக்கொண்டு, நிச்சயமாக நிறைந்த துன்பமே உள்ள பிறப்பு என்னும் கடலைத் தாண்டி கரை ஏறிப் போக முடியாதபடி, தேன்கூட இவர்கள் சொல்லுக்கு இனிமை குறைந்தது என்று சொல்லத்தக்க அந்தக் கிளி போன்ற பொது மகளிரின் மீது காம வெறி முற்றிப்போய் கலவிப் போரில் இளைத்தவர்கள், பிற்பாடு, உனது பக்தர்களின் அழகிய, ஒளி பொருந்திய திருவடிகளைப் பணிந்து, அந்த நல்ல தொண்டால் தகுதியான நல்ல வழியில் நின்று நற் குணங்களைப் பெற்றவர்களாக மாறும் போது அவர்களுக்கு நீ பாலைவனத்தில் கிடைத்த தெய்வ விருட்சமாகிய கற்பகமாகத் திகழ்வாய். செம்மையான நெற்கதிர் கூட்டத்தில் ஏறிச் சேல் மீன்கள் அருகிலுள்ள சோலையில் போய்ச் சேரும் திருச்செங்கோட்டு மலை உச்சியில் நிற்பவனே, என்றும் அழியாது இருப்பவனே, சிவந்த கதிர் கொண்ட தினைப்பயிர் மூன்று போகம் விளையும் நெல்வயலின் அடித் தண்டுகள் கொண்ட வள்ளிமலைக்கு உரியவளாகிய வள்ளியின் முத்துமாலை நிறைந்துள்ளதும், வெட்சிமாலை அணிந்ததுமான புயங்களை உடைய செவ்வேளே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.
மெய்ச் சார்வு அற்றே பொய்ச் சார்வு உற்றே ... உண்மையான புகலிடத்தை விட்டுவிட்டு, பொய்யான துணையைப் பற்றிக்கொண்டு, நிச்சார் துற்பப் பவ வேலை விட்டேறிப் போக ஒட்டாமல் ... நிச்சயமாக நிறைந்த துன்பமே உள்ள பிறப்பு என்னும் கடலைத் தாண்டி கரை ஏறிப் போக முடியாதபடி, தே(ன்) மட்டே அத் தத்தையர் மேலே பிச்சாய் உச்சாகிப் போர் எய்த்தார் ... தேன்கூட இவர்கள் சொல்லுக்கு இனிமை குறைந்தது என்று சொல்லத்தக்க அந்தக் கிளி போன்ற பொது மகளிரின் மீது காம வெறி முற்றிப்போய் கலவிப் போரில் இளைத்தவர்கள், பத்தார் விற்பொற் கழல்பேணிப் பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்முன் ... பிற்பாடு, உனது பக்தர்களின் அழகிய, ஒளி பொருந்திய திருவடிகளைப் பணிந்து, அந்த நல்ல தொண்டால் தகுதியான நல்ல வழியில் நின்று நற் குணங்களைப் பெற்றவர்களாக மாறும் போது அவர்களுக்கு பாலைக் கற்பகமே தான் ... நீ பாலைவனத்தில் கிடைத்த தெய்வ விருட்சமாகிய கற்பகமாகத் திகழ்வாய். செச் சாலிச் சாலத் தேறிச் சேல் உற்று ஆணித்துப் பொழிலேறும் ... செம்மையான நெற்கதிர் கூட்டத்தில் ஏறிச் சேல் மீன்கள் அருகிலுள்ள சோலையில் போய்ச் சேரும் செக்கோடைக் கோடுக்கே நிற்பாய் நித்தா ... திருச்செங்கோட்டு மலை உச்சியில் நிற்பவனே, என்றும் அழியாது இருப்பவனே, செக்கர்க் கதிர் ஏனல் முச்சாலிச் சாலித் தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சிப் புயவேளே ... சிவந்த கதிர் கொண்ட தினைப்பயிர் மூன்று போகம் விளையும் நெல்வயலின் அடித் தண்டுகள் கொண்ட வள்ளிமலைக்கு உரியவளாகிய வள்ளியின் முத்துமாலை நிறைந்துள்ளதும், வெட்சிமாலை அணிந்ததுமான புயங்களை உடைய செவ்வேளே, முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ... முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.