துஞ்சு கோட்டிச் சுழல் கண் காட்டிக் கொங்கை நோக்கப் பலர்க்கும் காட்டிக் கொண்டு அணாப்பித் துலக்கம் சீர்த்துத் திரிமானார்
தொண்டை வாய்ப் பொன் கருப்பன் சாற்றைத் தந்து சேர்த்துக் கலக்கும் தூர்த்தத் துன்ப வாழ்க்கைத் தொழில் பண்டு ஆட்டத்து உழலாதே
கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டிக் கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றைக் கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்றக் கிடையா நீ
கண்டு வேட்டுப் பொருள் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து எனக்கும் கேட்கத் தந்து காத்துத் திருக் கண் சாத்தப் பெறுவேனோ
வஞ்சமாய்ப் புக்கு ஒளிக்கும் சூல் கைத் துன்று சூர்ப் பொட்டு எழச் சென்று ஓட்டிப் பண்டு வாட்குள் களிக்கும் தோள் கொத்து உடையோனே
வண்டு பாட்டு உற்று இசைக்கும் தோட்டத் தண் குராப் பொன்பு உரக் கும்பு ஏற்றித் தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே
கொஞ்சு வார்த்தைக் கிளித் தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியைக் கண் காட்டிக் கொண்டு வேட்டுப் புனம் பைம் காட்டில் புணர்வோனே
கொங்கு உலாத்தித் தழைக்கும் காப் பொன் கொண்டல் ஆர்த்துச் சிறக்கும் காட்சிக் கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப் பெருமாளே.
சோர்வு உற்றது போலக் கண்ணைச் சிமிட்டிக் காட்டி, மார்பகங்கள் தெரியும்படி பலருக்கும் காட்டி, அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றி, தங்கள் கீர்த்தி விளக்கமாக சிறப்புடன் ஓங்குமாறு திரிகின்ற விலைமாதர்களின் கொவ்வைக் கனி போன்ற அழகிய வாயிதழின் கரும்பு போல் இனிக்கும் ஊறலைப் பருகச் செய்து, அணைத்துச் சேர்ந்து மயக்கத்தைத் தரும் காம ஆசையால் வருகின்ற துன்ப வாழ்க்கைத் தொழிலாகிய பழைய ஆட்டங்களில் சுழன்று திரியாமல், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும், கன்றுகளை ஒன்று சேர்த்து மேய்த்திட்ட கண்ணனாகிய திருமாலுக்கும், யமனை வாட்டமுற்று மாயும்படி செய்த சிவ பெருமானுக்கும் காண்பதற்குக் கிட்டாத நீ, என்னைப் பார்த்து, என் மீது விருப்பம் கொண்டு, கொண்டாடத் தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வார்த்தையை அடியேனாகிய நானும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து, உனது திருக் கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ? வஞ்சகமாகப் புகுந்து (கடலில்) ஒளிந்து கொண்டவனும், சூலம் ஏந்திய கையோடு நெருங்கியவனுமான சூரன் அழிந்து போகும்படி அவனைத் தேடிச் சென்று ஓட வைத்து, முன்பு, வாளாயுதத்தைச் செலுத்தி இன்புறும் பன்னிரு தோள் கொத்தை உடையவனே, வண்டுகள் பாடல் பாடி இசை எழுப்பும் தோட்டத்தில், குளிர்ந்த குரா மலர் சூடிய அழகிய மார்புடன், உன் திருப்புகழைப் போற்றும் அடியார் கூட்டத்திலிருந்து, அவர்களுக்குக் காட்சி அளிக்கும் இளையவனே, கொஞ்சும் சொற்களை உடைய கிளி போன்றவளை, குளிர்ந்த மலையில் வாழ்கின்ற சேல் மீனைப் போல் கண்கள் கொண்ட வேடப் பெண்ணாகிய வள்ளியைக் கண் கொண்டு ஜாடை காட்டி அழைத்துச் சென்று, அவளை விரும்பி, தினைப் புனத்துப் பசுஞ்சோலையில் தழுவியவனே, வாசனையை வீசி உலவச் செய்து தழைத்திருக்கும் சோலைகளில், அழகிய மேகங்கள் நிறைந்து சிறந்து நிற்கும் காட்சியைக் கொண்ட கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோட்டில் உறையும் பெருமாளே.
துஞ்சு கோட்டிச் சுழல் கண் காட்டிக் கொங்கை நோக்கப் பலர்க்கும் காட்டிக் கொண்டு அணாப்பித் துலக்கம் சீர்த்துத் திரிமானார் ... சோர்வு உற்றது போலக் கண்ணைச் சிமிட்டிக் காட்டி, மார்பகங்கள் தெரியும்படி பலருக்கும் காட்டி, அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றி, தங்கள் கீர்த்தி விளக்கமாக சிறப்புடன் ஓங்குமாறு திரிகின்ற விலைமாதர்களின் தொண்டை வாய்ப் பொன் கருப்பன் சாற்றைத் தந்து சேர்த்துக் கலக்கும் தூர்த்தத் துன்ப வாழ்க்கைத் தொழில் பண்டு ஆட்டத்து உழலாதே ... கொவ்வைக் கனி போன்ற அழகிய வாயிதழின் கரும்பு போல் இனிக்கும் ஊறலைப் பருகச் செய்து, அணைத்துச் சேர்ந்து மயக்கத்தைத் தரும் காம ஆசையால் வருகின்ற துன்ப வாழ்க்கைத் தொழிலாகிய பழைய ஆட்டங்களில் சுழன்று திரியாமல், கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டிக் கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றைக் கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்றக் கிடையா நீ ... தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும், கன்றுகளை ஒன்று சேர்த்து மேய்த்திட்ட கண்ணனாகிய திருமாலுக்கும், யமனை வாட்டமுற்று மாயும்படி செய்த சிவ பெருமானுக்கும் காண்பதற்குக் கிட்டாத நீ, கண்டு வேட்டுப் பொருள் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து எனக்கும் கேட்கத் தந்து காத்துத் திருக் கண் சாத்தப் பெறுவேனோ ... என்னைப் பார்த்து, என் மீது விருப்பம் கொண்டு, கொண்டாடத் தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வார்த்தையை அடியேனாகிய நானும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து, உனது திருக் கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ? வஞ்சமாய்ப் புக்கு ஒளிக்கும் சூல் கைத் துன்று சூர்ப் பொட்டு எழச் சென்று ஓட்டிப் பண்டு வாட்குள் களிக்கும் தோள் கொத்து உடையோனே ... வஞ்சகமாகப் புகுந்து (கடலில்) ஒளிந்து கொண்டவனும், சூலம் ஏந்திய கையோடு நெருங்கியவனுமான சூரன் அழிந்து போகும்படி அவனைத் தேடிச் சென்று ஓட வைத்து, முன்பு, வாளாயுதத்தைச் செலுத்தி இன்புறும் பன்னிரு தோள் கொத்தை உடையவனே, வண்டு பாட்டு உற்று இசைக்கும் தோட்டத் தண் குராப் பொன்பு உரக் கும்பு ஏற்றித் தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே ... வண்டுகள் பாடல் பாடி இசை எழுப்பும் தோட்டத்தில், குளிர்ந்த குரா மலர் சூடிய அழகிய மார்புடன், உன் திருப்புகழைப் போற்றும் அடியார் கூட்டத்திலிருந்து, அவர்களுக்குக் காட்சி அளிக்கும் இளையவனே, கொஞ்சு வார்த்தைக் கிளித் தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியைக் கண் காட்டிக் கொண்டு வேட்டுப் புனம் பைம் காட்டில் புணர்வோனே ... கொஞ்சும் சொற்களை உடைய கிளி போன்றவளை, குளிர்ந்த மலையில் வாழ்கின்ற சேல் மீனைப் போல் கண்கள் கொண்ட வேடப் பெண்ணாகிய வள்ளியைக் கண் கொண்டு ஜாடை காட்டி அழைத்துச் சென்று, அவளை விரும்பி, தினைப் புனத்துப் பசுஞ்சோலையில் தழுவியவனே, கொங்கு உலாத்தித் தழைக்கும் காப் பொன் கொண்டல் ஆர்த்துச் சிறக்கும் காட்சிக் கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப் பெருமாளே. ... வாசனையை வீசி உலவச் செய்து தழைத்திருக்கும் சோலைகளில், அழகிய மேகங்கள் நிறைந்து சிறந்து நிற்கும் காட்சியைக் கொண்ட கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோட்டில் உறையும் பெருமாளே.