சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என
வானில் தங்கு கார் பைங்குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து
உலகோரை துங்க வேள் செம் கை பொன் கொண்டல் நீ என்று சொல் கொண்டு தாய் நின்று உரைத்து உழலாதே
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே
வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வே(கு)ம் என்று எடுத்து உண்டு
மேல் அண்டருக்கு அமுதாக விண்ட நாதன் திருக் கொண்டல் பாகன்
செருக்கு உண்டு பேர் அம்பலத்தினில் ஆடி
செம் கண் மால் பங்கயக் கண் பெறாது அந்தரத்தின் கண் ஆடும் திறல்
கதிர் ஆழித் திங்கள் வாழும் சடைத் தம்பிரான்
அன்புறச் செந்தில் வாழ் செம் தமிழ்ப் பெருமாளே.
சங்கைப் போன்ற மெல்லிய கழுத்து, அந்த வாயிலுள்ள பற்கள் மோக இன்பத்தைத் தரும் முத்துக்கள் என்றும், ஆகாயத்தில் தங்கியுள்ள கார்மேகம் கருங்குழல் என்றும், மார்பகங்கள் நீண்ட குளிர்ந்த மலை என்றும் (மாதர்களைப் பற்றி உவமை கூறி) வெட்கம் என்பதையே விட்டு சொல்லித் திரியாமலும், உலகில் பொருள் உள்ளவர்களிடம் போய் சிறந்த வேந்தன் நீ என்றும், செங்கைக் கொடைத் திறத்தில் அழகிய மேகத்தை ஒப்பாய் நீ என்றும் புகழ்ந்து பேசி, அவர்களிடம் தாவி வேகத்துடன் போய்த் திரியாமலும், (எனது) துன்ப நோய் ஒழிய, நல்ல கந்த வேளே என்று உன்னை, தொண்டு செய்யும் வழியில் நின்று பொருந்தி துதி ஒன்றைக் கூற அருள்வாயாக கொடிய கண்களை உடைய (வாசுகி என்ற) பாம்பு மனம் கொதித்து (விஷத்தை உமிழ), அது எங்கும் வேகச் செய்யும் என்று கருதி அந்த விஷத்தை எடுத்து அருந்தி, பின்னும் தேவர்களுக்கு ஆகும்படி அமுதத்தை வெளிவரச் செய்தவன், அழகிய மேக வண்ணனாகிய திருமாலைத் தனது பாகத்தில் கொண்டவன், ஆனந்தம் கொண்டு பேரம்பலமாகிய சிதம்பரத்தில் கூத்தாடுபவன், சிவந்த கண்களை உடைய திருமால் தனது தாமரைக் கண்ணால் காணக் கூடாத வகையில் வெட்ட வெளியில் ஆடும் வல்லமை பெற்றவன், ஒளி பொருந்திய கடலில் பிறந்த சந்திரன் பொருந்தி வாழ்கின்ற சடையை உடைய தலைவன் ஆகிய சிவபெருமான், பேரன்பு கொள்ளும்படியாக திருச்செந்தூரில் வாழ்கின்ற செந்தமிழ்ப் பெருமாளே.
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என ... சங்கைப் போன்ற மெல்லிய கழுத்து, அந்த வாயிலுள்ள பற்கள் மோக இன்பத்தைத் தரும் முத்துக்கள் என்றும், வானில் தங்கு கார் பைங்குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து ... ஆகாயத்தில் தங்கியுள்ள கார்மேகம் கருங்குழல் என்றும், மார்பகங்கள் நீண்ட குளிர்ந்த மலை என்றும் (மாதர்களைப் பற்றி உவமை கூறி) வெட்கம் என்பதையே விட்டு சொல்லித் திரியாமலும், உலகோரை துங்க வேள் செம் கை பொன் கொண்டல் நீ என்று சொல் கொண்டு தாய் நின்று உரைத்து உழலாதே ... உலகில் பொருள் உள்ளவர்களிடம் போய் சிறந்த வேந்தன் நீ என்றும், செங்கைக் கொடைத் திறத்தில் அழகிய மேகத்தை ஒப்பாய் நீ என்றும் புகழ்ந்து பேசி, அவர்களிடம் தாவி வேகத்துடன் போய்த் திரியாமலும், துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே ... (எனது) துன்ப நோய் ஒழிய, நல்ல கந்த வேளே என்று உன்னை, தொண்டு செய்யும் வழியில் நின்று பொருந்தி துதி ஒன்றைக் கூற அருள்வாயாக வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வே(கு)ம் என்று எடுத்து உண்டு ... கொடிய கண்களை உடைய (வாசுகி என்ற) பாம்பு மனம் கொதித்து (விஷத்தை உமிழ), அது எங்கும் வேகச் செய்யும் என்று கருதி அந்த விஷத்தை எடுத்து அருந்தி, மேல் அண்டருக்கு அமுதாக விண்ட நாதன் திருக் கொண்டல் பாகன் ... பின்னும் தேவர்களுக்கு ஆகும்படி அமுதத்தை வெளிவரச் செய்தவன், அழகிய மேக வண்ணனாகிய திருமாலைத் தனது பாகத்தில் கொண்டவன், செருக்கு உண்டு பேர் அம்பலத்தினில் ஆடி ... ஆனந்தம் கொண்டு பேரம்பலமாகிய சிதம்பரத்தில் கூத்தாடுபவன், செம் கண் மால் பங்கயக் கண் பெறாது அந்தரத்தின் கண் ஆடும் திறல் ... சிவந்த கண்களை உடைய திருமால் தனது தாமரைக் கண்ணால் காணக் கூடாத வகையில் வெட்ட வெளியில் ஆடும் வல்லமை பெற்றவன், கதிர் ஆழித் திங்கள் வாழும் சடைத் தம்பிரான் ... ஒளி பொருந்திய கடலில் பிறந்த சந்திரன் பொருந்தி வாழ்கின்ற சடையை உடைய தலைவன் ஆகிய சிவபெருமான், அன்புறச் செந்தில் வாழ் செம் தமிழ்ப் பெருமாளே. ... பேரன்பு கொள்ளும்படியாக திருச்செந்தூரில் வாழ்கின்ற செந்தமிழ்ப் பெருமாளே.