வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம
வேடுவச்சி பாத பத்ம மீது செச்சை முடிதோய
ஆதரித்து வேளை புக்க ஆறிரட்டி புயநேய
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே
காதும் உக்ர வீர பத்ர காளி வெட்க மகுடம்
ஆகாச முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை
ஓது வித்த நாதர் கற்க ஓது வித்த முநிநாண
ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓது வித்த பெருமாளே.
வேதகிரியாகிய திருக்கழுக்குன்றத்திலும், வள்ளிமலையில் உள்ள தினைப்புனத்திலும் விரும்பி இருக்கும் பேரழகு உடையவனே, வேடுவச்சி வள்ளியின் பாதத் தாமரையின் மீது வெட்சி மாலை அணிந்த உன் திருமுடி படும்படியாக காதலித்து, ஆட்கொள்ளும் வேளை இது என்று சமயத்தில் தினைப்புனத்துக்குள் புகுந்த பன்னிரு தோள்களை உடைய நண்பனே, ஆர்வத்துடன் நான் உன்னை அன்பு வழிபாடு செய்ய உரிய புத்தியை உபதேச மொழியாகச் சொல்லி அருள்வாயாக. வெகுண்டு வந்த வீரபத்திரரின் துணைவியான காளி நாணம் அடையும்படி தமது கிரீடத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய பாதத்தை உடைய பரமசிவன், பக்தியுள்ள தேவர்களுக்கு கற்பித்த நாதராகிய சிவபெருமான், உன்னிடம் பாடம் கேட்கவும், சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன் வெட்கமடையவும், ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார ப்ரணவத்தில், ஆறெழுத்தாகிய ஓம்நமசிவாய அல்லது சரவணபவ மந்திரமே அடங்கியுள்ள தன்மையை விளக்கி அந்தச் சிவனுக்கே உபதேசித்த பெருமாளே.