புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக பொறியுட லிறந்து போன ...... தளவேதுன் புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி பொருளென நினைந்து நாயெ ...... னிடர்தீர மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு மணிகிரி யிடங்கொள் பாநு ...... வெயிலாசை வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில்மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும் பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல பரிவுகொ டுகந்து வேத ...... மதுகூறப் பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படைகட லிறந்து போக ...... விடும்வேலா அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல அமளியில் களங்க ளோசை ...... வளர்மாது அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே.
புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது
உன் புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர
மணம் உணர் மடந்தைமாரொடு திரு முகங்கள் ஆறு மணி கிரியிடம் கொள் பாநு வெயில் ஆசை வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வர வேணும்
பணை முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற
பறை முரசு அநந்த பேரி முறை முறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது அரி மகள் மணம் கொ(ண்)டு ஏகி
எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே.
நெருங்கிச் சேர்ந்து அணையப்படும் மார்பகங்களை உடைய பெண்களின் வலையில் அலைபட்டு, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளைக் கொண்ட உடல் மாய்ந்து போனவைகளுக்கு ஏதேனும் கணக்கு உண்டோ? உனது புகழைச் சொல்லும் வேதாகம நூல்களைக் கற்றறிந்து, இனிமேல் என்னுடைய உள்ளம், பொருள், உயிர் ஆகிய இம் மூன்றையும் ஒரு பொருட்டாகக் கருதும் அடியேனுடைய வருத்தங்கள் ஒழிய, உன்னைக் கூடுதலையே தமது உணர்ச்சியாகக் கொண்ட தேவயானை, வள்ளியுடன், விளங்குகின்ற ஆறு திரு முகங்களும், ரத்தின மணி கிரீடங்களும் தம்முள் கொண்ட சூரிய ஒளி திக்குகளில் எல்லாம் கிரணங்களைப் பரவி வீச, கணக்கில்லாத கோடி முநிவர்கள் புகழ்ந்து வர மயிலின் மேல் மகிழ்ச்சியுடன் என்னை விரும்பி நீ வர வேண்டும். பருத்த மார்பகங்களை உடைய தேவ மாதர்கள் குயில், கிளி இவைகளின் கூட்டங்கள் போல அன்புடன் மகிழ்ந்து வேதங்களைக் கூறவும், பறையும், முரசும், கணக்கற்ற பேரிகை வகைகளும் முறைப்படி பேரொலி எழுப்பவும், இழிந்தவர்களாகிய அசுரர்களுடைய சேனைக்கடல் மடிந்து போகவும் செலுத்திய வேலாயுதனே, அழகிய கிளி, நரம்புள்ள வீணை, குயில், புறாக் கூட்டங்கள் போல படுக்கையில் கண்டத்து ஓசையை (புட்குரல் ஒலியை) எழுப்பும் மாது ஆகிய திருமாலின் மகளை (வள்ளியை) திருமணம் செய்து சென்று, என்னுடைய துன்பங்கள் எரிந்து அழிய திருஅருணை நகரில் உள்ள மலையில் (வள்ளியுடன்) வீற்றிருக்கும் பெருமாளே.
புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது ... நெருங்கிச் சேர்ந்து அணையப்படும் மார்பகங்களை உடைய பெண்களின் வலையில் அலைபட்டு, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளைக் கொண்ட உடல் மாய்ந்து போனவைகளுக்கு ஏதேனும் கணக்கு உண்டோ? உன் புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர ... உனது புகழைச் சொல்லும் வேதாகம நூல்களைக் கற்றறிந்து, இனிமேல் என்னுடைய உள்ளம், பொருள், உயிர் ஆகிய இம் மூன்றையும் ஒரு பொருட்டாகக் கருதும் அடியேனுடைய வருத்தங்கள் ஒழிய, மணம் உணர் மடந்தைமாரொடு திரு முகங்கள் ஆறு மணி கிரியிடம் கொள் பாநு வெயில் ஆசை வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வர வேணும் ... உன்னைக் கூடுதலையே தமது உணர்ச்சியாகக் கொண்ட தேவயானை, வள்ளியுடன், விளங்குகின்ற ஆறு திரு முகங்களும், ரத்தின மணி கிரீடங்களும் தம்முள் கொண்ட சூரிய ஒளி திக்குகளில் எல்லாம் கிரணங்களைப் பரவி வீச, கணக்கில்லாத கோடி முநிவர்கள் புகழ்ந்து வர மயிலின் மேல் மகிழ்ச்சியுடன் என்னை விரும்பி நீ வர வேண்டும். பணை முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற ... பருத்த மார்பகங்களை உடைய தேவ மாதர்கள் குயில், கிளி இவைகளின் கூட்டங்கள் போல அன்புடன் மகிழ்ந்து வேதங்களைக் கூறவும், பறை முரசு அநந்த பேரி முறை முறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா ... பறையும், முரசும், கணக்கற்ற பேரிகை வகைகளும் முறைப்படி பேரொலி எழுப்பவும், இழிந்தவர்களாகிய அசுரர்களுடைய சேனைக்கடல் மடிந்து போகவும் செலுத்திய வேலாயுதனே, அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது அரி மகள் மணம் கொ(ண்)டு ஏகி ... அழகிய கிளி, நரம்புள்ள வீணை, குயில், புறாக் கூட்டங்கள் போல படுக்கையில் கண்டத்து ஓசையை (புட்குரல் ஒலியை) எழுப்பும் மாது ஆகிய திருமாலின் மகளை (வள்ளியை) திருமணம் செய்து சென்று, எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே. ... என்னுடைய துன்பங்கள் எரிந்து அழிய திருஅருணை நகரில் உள்ள மலையில் (வள்ளியுடன்) வீற்றிருக்கும் பெருமாளே.