திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார்
சிலைக்கு நேர் புருவப் பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள் சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள்
மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் விளக்கியே குழை இட்ட புரட்டிகள்
தமக்கு மால் கொடு நிற்கும் மருள் தனை விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ
தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் தடக் கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க
நடித்து ஒளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம் அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்ந மா முடியைக் கொ(ண்)டு உகக் கழல் அடக் கையாடி நிணத்தை எடுத்து உ(ண்)ண
அறவே தான் அரக்கர் சேனைகள் பட்டு விழச் செறி திருக்கை வேல் தனை விட்டு அருளிப் பொரும் அருள் குகா அருணைப் பதி உற்று அருள் பெருமாளே.
வியாபாரம் செய்வதில் சாமர்த்தியம் கொண்ட துஷ்டைகள். ஆணவ சொரூபம் உடையவர்கள். தீய தன்மை கொண்ட பொது மகளிர். இவ்வுலகில் மிக்க தந்திரவாதிகள். கெட்டுப் போன வேசியர்கள். மிகவும் நாணம் அற்றவர்கள். வில்லைப் போன்ற புருவத்தையும் சிறந்த நெற்றியையும் முன்னுக்கு விளங்கும் மார்பையும் உடையவர்கள். எச்சில் நிறைந்த உதட்டை உடையவர்கள். சிரிப்பினாலேயே மனிதர்களுடைய மனதை உருக்குபவர்கள். கண்களாலே விரட்டி, மேலே விழுகின்ற கூத்தாடும் பயனிலிகள். மிக்க பாபம் செய்தவர்கள். வட்டமான முகத்தை மினுக்கி காதோலைகளாயுள்ள பித்தளையில் செய்யப்பட்ட ஆபரணங்களை அதிகமான சாம்பலிட்டு விளக்கம் பெறச் செய்து குண்டலங்களை அணிந்தவர்கள். மாறுபட்ட பேச்சை உடையவர்கள். இத்தகையோர்கள் மீது காதல் கொண்டு நிற்கும் மயக்கத்தை விட்டு, நான் மனம் ஒருமைப்பட்டு உனது அழகிய திருவடிகளைப் பணிவேனோ? தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு இந்த வகையான இசைத் தாளங்களில் பெரிய கைகளால் தாளமும் இட்டு, பொருந்திய மத்தளம், இடக்கை, தாளம் இவை எல்லாம் ஒருங்கே ஒலிக்க, அதற்குத் தகுந்தவாறு நடனம் செய்து ஒளி கொண்ட பேய்கள், தத்திமி தித்தெனக் கூட்டமான பூதங்கள் சூரியனுடைய ஒளி போல பிரகாசிக்கும் ரத்தினத்தால் ஆன கிரீடங்களைக் கொண்டு (அவை சிந்தும்படியாக) கழற்சிக் காய்களாகக் கொண்டு விளையாடி மாமிசங்களை எடுத்து உண்ணும்படி, அடியோடு அற்றுப் போய் அரக்கருடைய சேனைகள் அழிந்து விழ திருக்கையில் கொண்டுள்ள வோலாயுதத்தைச் செலுத்தி அருளி, சண்டை செய்தருளிய குகனே, திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார் ... வியாபாரம் செய்வதில் சாமர்த்தியம் கொண்ட துஷ்டைகள். ஆணவ சொரூபம் உடையவர்கள். தீய தன்மை கொண்ட பொது மகளிர். இவ்வுலகில் மிக்க தந்திரவாதிகள். கெட்டுப் போன வேசியர்கள். மிகவும் நாணம் அற்றவர்கள். சிலைக்கு நேர் புருவப் பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள் சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் ... வில்லைப் போன்ற புருவத்தையும் சிறந்த நெற்றியையும் முன்னுக்கு விளங்கும் மார்பையும் உடையவர்கள். எச்சில் நிறைந்த உதட்டை உடையவர்கள். சிரிப்பினாலேயே மனிதர்களுடைய மனதை உருக்குபவர்கள். கண்களாலே விரட்டி, மேலே விழுகின்ற கூத்தாடும் பயனிலிகள். மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் விளக்கியே குழை இட்ட புரட்டிகள் ... மிக்க பாபம் செய்தவர்கள். வட்டமான முகத்தை மினுக்கி காதோலைகளாயுள்ள பித்தளையில் செய்யப்பட்ட ஆபரணங்களை அதிகமான சாம்பலிட்டு விளக்கம் பெறச் செய்து குண்டலங்களை அணிந்தவர்கள். மாறுபட்ட பேச்சை உடையவர்கள். தமக்கு மால் கொடு நிற்கும் மருள் தனை விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ ... இத்தகையோர்கள் மீது காதல் கொண்டு நிற்கும் மயக்கத்தை விட்டு, நான் மனம் ஒருமைப்பட்டு உனது அழகிய திருவடிகளைப் பணிவேனோ? தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் தடக் கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க ... தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு இந்த வகையான இசைத் தாளங்களில் பெரிய கைகளால் தாளமும் இட்டு, பொருந்திய மத்தளம், இடக்கை, தாளம் இவை எல்லாம் ஒருங்கே ஒலிக்க, நடித்து ஒளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம் அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்ந மா முடியைக் கொ(ண்)டு உகக் கழல் அடக் கையாடி நிணத்தை எடுத்து உ(ண்)ண ... அதற்குத் தகுந்தவாறு நடனம் செய்து ஒளி கொண்ட பேய்கள், தத்திமி தித்தெனக் கூட்டமான பூதங்கள் சூரியனுடைய ஒளி போல பிரகாசிக்கும் ரத்தினத்தால் ஆன கிரீடங்களைக் கொண்டு (அவை சிந்தும்படியாக) கழற்சிக் காய்களாகக் கொண்டு விளையாடி மாமிசங்களை எடுத்து உண்ணும்படி, அறவே தான் அரக்கர் சேனைகள் பட்டு விழச் செறி திருக்கை வேல் தனை விட்டு அருளிப் பொரும் அருள் குகா அருணைப் பதி உற்று அருள் பெருமாளே. ... அடியோடு அற்றுப் போய் அரக்கருடைய சேனைகள் அழிந்து விழ திருக்கையில் கொண்டுள்ள வோலாயுதத்தைச் செலுத்தி அருளி, சண்டை செய்தருளிய குகனே, திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.