சிலை நுதல் வைத்துச் சிறந்த குங்கும திலதமும் இட்டுக் குளிர்ந்த பங்கய திருமுக வட்டத்து அமர்ந்த மென் குமிழ் தனில் ஏறி செழு மணி ரத்நத்து இலங்கு பைங்குழை தனை முனிவுற்றுச் சிவந்து நஞ்சு அணி செயலினை ஒத்துத் தயங்கு வஞ்சக விழி சீறி புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி புரி வளை கைக்குள் கலின் கல் என்றிட அநுராகம் புகழ் நல(ம்) மெத்தப் புரிந்து கொங்கையில் உருகி அணைத்துப் பெரும் ப்ரியம் கொ(ண்)டு புணரினும் நின் பொன் பதங்கள் நெஞ்சினுள் மறவேனே கலை மதி வைத்துப் புனைந்து செம் சடை மலை மகள் பக்கத்து அமர்ந்து இருந்திட கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும் கருணையன் உற்றத் த்ரியம்பகன் தரு முருக புனத்தில் திரிந்த மென் கொடி கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா அலை கடல் புக்குப் பொரும் பெரும் படை அவுணரை வெட்டிக் களைந்து வென்று உயர் அமரர் தொழப் பொன் சதங்கை கொஞ்சிட வருவோனே அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர் தனை ஒழிவித்துப் ப்ரியங்கள் தந்திடும் அருண கிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே.
வில்லைப் போன்று வளைந்த நெற்றியில் நல்ல குங்குமப் பொட்டை இட்டு, குளிர்ந்த தாமரை போன்ற அழகிய முக வட்டத்தில் உள்ள மெல்லிய பூப் போன்ற மூக்கின் மேல் சார்ந்து செழுமையுள்ள ரத்ன மணி விளங்க, அழகிய குண்டலங்கள் உள்ள காதைக் கோபித்து, சிவந்து, விஷம் உண்ட தன் செயலுக்கு ஒப்ப வஞ்சகம் கொண்டு விளங்கும் கண்களால் சீறிக் கோபித்து, ஊடல் குணம் அதிகமாகி இருந்த விலைமாதர்களின் பாத மலரில் பணிந்து, அவர்கள் அணிந்துள்ள அணி கலன்களாய் விளங்கும் வளையல் கையில் கலின் கலென்று ஒலிக்க, காமப் பற்றான புகழ் நலச் செயல்களை அதிகமாகச் செய்து, அவர்களுடைய மார்பில் உருகித் தழுவி மிக்க ஆசையுடன் கலவி செய்தாலும், உனது அழகிய திருவடியை மனதில் மறக்க மாட்டேன். கலை கொண்ட பிறையை வைத்து அலங்கரித்த செந்நிறச் சடையுடன் ஹிமவான் மகளாகிய பார்வதி (இடது) பாகத்தில் அமர்ந்து விளங்க, கணகண கட்கட் கணின்கண் என்ற ஒலி செய்ய நடனம் செய்கின்ற கருணைப் பிரான், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகப்) பொருந்திய முக்கண்ணன் பெற்ற முருகனே, தினைப் புனத்தில் திரிந்த மெல்லிய கொடி போன்ற வள்ளியின் பருத்த மார்பாம் மலைகளில் சேர்ந்து அணைந்தருளிய புயங்கள் கொண்ட வீரனே, அலை கொண்ட கடலில் புகுந்து சண்டை செய்த பெரிய சேனையைக் கொண்ட அசுரர்களை வெட்டித் தொலைத்து வெற்றி கொண்டு, உயர்ந்த தேவர்கள் தொழும்படி அழகிய சதங்கை ஒலி செய்ய வருபவனே, அடியார்கள் பயத்தால் துன்புற்று ஒடுங்கும் வருத்தத்தை நீக்கி, அன்பு தரும் திருவண்ணாமலையில் சிறப்பாக வீற்றிருந்து அருளும் பெருமாளே.
சிலை நுதல் வைத்துச் சிறந்த குங்கும திலதமும் இட்டுக் குளிர்ந்த பங்கய திருமுக வட்டத்து அமர்ந்த மென் குமிழ் தனில் ஏறி செழு மணி ரத்நத்து இலங்கு ... வில்லைப் போன்று வளைந்த நெற்றியில் நல்ல குங்குமப் பொட்டை இட்டு, குளிர்ந்த தாமரை போன்ற அழகிய முக வட்டத்தில் உள்ள மெல்லிய பூப் போன்ற மூக்கின் மேல் சார்ந்து செழுமையுள்ள ரத்ன மணி விளங்க, பைங்குழை தனை முனிவுற்றுச் சிவந்து நஞ்சு அணி செயலினை ஒத்துத் தயங்கு வஞ்சக விழி சீறி ... அழகிய குண்டலங்கள் உள்ள காதைக் கோபித்து, சிவந்து, விஷம் உண்ட தன் செயலுக்கு ஒப்ப வஞ்சகம் கொண்டு விளங்கும் கண்களால் சீறிக் கோபித்து, புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி புரி வளை கைக்குள் கலின் கல் என்றிட ... ஊடல் குணம் அதிகமாகி இருந்த விலைமாதர்களின் பாத மலரில் பணிந்து, அவர்கள் அணிந்துள்ள அணி கலன்களாய் விளங்கும் வளையல் கையில் கலின் கலென்று ஒலிக்க, அநுராகம் புகழ் நல(ம்) மெத்தப் புரிந்து கொங்கையில் உருகி அணைத்துப் பெரும் ப்ரியம் கொ(ண்)டு புணரினும் நின் பொன் பதங்கள் நெஞ்சினுள் மறவேனே ... காமப் பற்றான புகழ் நலச் செயல்களை அதிகமாகச் செய்து, அவர்களுடைய மார்பில் உருகித் தழுவி மிக்க ஆசையுடன் கலவி செய்தாலும், உனது அழகிய திருவடியை மனதில் மறக்க மாட்டேன். கலை மதி வைத்துப் புனைந்து செம் சடை மலை மகள் பக்கத்து அமர்ந்து இருந்திட ... கலை கொண்ட பிறையை வைத்து அலங்கரித்த செந்நிறச் சடையுடன் ஹிமவான் மகளாகிய பார்வதி (இடது) பாகத்தில் அமர்ந்து விளங்க, கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும் கருணையன் உற்றத் த்ரியம்பகன் தரு முருக ... கணகண கட்கட் கணின்கண் என்ற ஒலி செய்ய நடனம் செய்கின்ற கருணைப் பிரான், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகப்) பொருந்திய முக்கண்ணன் பெற்ற முருகனே, புனத்தில் திரிந்த மென் கொடி கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா ... தினைப் புனத்தில் திரிந்த மெல்லிய கொடி போன்ற வள்ளியின் பருத்த மார்பாம் மலைகளில் சேர்ந்து அணைந்தருளிய புயங்கள் கொண்ட வீரனே, அலை கடல் புக்குப் பொரும் பெரும் படை அவுணரை வெட்டிக் களைந்து வென்று உயர் அமரர் தொழப் பொன் சதங்கை கொஞ்சிட வருவோனே ... அலை கொண்ட கடலில் புகுந்து சண்டை செய்த பெரிய சேனையைக் கொண்ட அசுரர்களை வெட்டித் தொலைத்து வெற்றி கொண்டு, உயர்ந்த தேவர்கள் தொழும்படி அழகிய சதங்கை ஒலி செய்ய வருபவனே, அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர் தனை ஒழிவித்துப் ப்ரியங்கள் தந்திடும் அருண கிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே. ... அடியார்கள் பயத்தால் துன்புற்று ஒடுங்கும் வருத்தத்தை நீக்கி, அன்பு தரும் திருவண்ணாமலையில் சிறப்பாக வீற்றிருந்து அருளும் பெருமாளே.