தாமரையில் வீற்றிருக்கும் ஸரஸ்வதியும், லக்ஷ்மியும் இவர்களுக்கு ஒப்பு என்று சொல்ல ஒண்ணாத அழகான மாதர்களின் சந்தனக் கலவை பூசிக் குளிர்ந்த மார்பகங்களிலும், அழகிய கரங்களிலும், இரவு பகல் ஆகிய இரண்டு வேளைகளிலும் பொருந்தி, காம சாஸ்திரங்களைக் கற்றறிந்த, வஞ்சனை நிறைந்த மை தீட்டிய கண்களிலும், மோகத்தைத் தூண்டும் நறுமணச் சுகம் தரும் கரிய கூந்தலிலும், சந்திரனை ஒத்த முகத்திலும் மயக்கம் கொள்ளாமல், மாசு இல்லாத தூய சிந்தையை அடைந்து, பரந்துள்ளதும், அழிவற்றதும் ஆகிய அறம், பொருள், இன்பம் பற்றிய நூல்கள் முழுமையும் ஓதி உணர்ந்து, ஆசைகள் நீங்கி அடங்கியபின்னர், உன் திருவருளை தானாகவே அறியும் வழியை யான் அடையுமாறு, அன்புடனே, இனிமையான ஓசையுடன் சிலம்பு ஒலிப்பதும், செம்பொன்னால் ஆன சதங்கைகள் அணிந்துள்ளதுமான உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. என்றும் அகலாத இளமையுடைய கன்னியும், கரிய நிறக் காளியும், அடியவர் பயத்தை நீக்குபவளும், ஆன்மாக்களுக்கு சுகத்தைத் தருபவளும், பொன்னிறத்தாளும், நீல நிறத்தாளும், பெரும் பொருளுக்கெல்லாம் பெரியவளும், உலக மாதாவும், சுத்த மாயையும், யோக சொரூபமாக இருப்பவளும், பாவிகளுக்குக் கொடியவளும், குண்டலினி சக்தியும், எங்கள் தாயும், குறைவில்லாதவளும், உமாதேவியும், சுவர்க்கம் தருபவளும், முடிவற்றவளும், பலவகைச் சிவாகமங்களால் துதிக்கப் பெறும் அழகியும் ஆகிய பார்வதி தேவி பெற்றருளிய குமரனே, மூஷிக வாகனத்தில் ஏறியவரும், ஐந்து கரத்தாரும், கணங்களுக்குத் தலைவரும், எங்கள் விநாயகரும், விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை இடுப்பில் ஆபரணமாகத் தரித்த யானை முகத்தை உடையவரும், பிறைச் சந்திரனைத் தலைமுடியில் தரித்திருப்பவருமான விநாயக மூர்த்தி மிகவும் மனமகிழ்ந்து அருளத் தக்க இளைய பெருமானே, செழித்து வளர்ந்த வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடைவெளி இல்லாமல் நெருங்கி உள்ளதும், மங்கலத்தை உடையதும், கீர்த்தி வாய்ந்ததுமான பெருநகர் திருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.