தருண மணி வான் நிலத்தில் அருண மணி
ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு(ம்) நிலவாலே
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த
தறு கண் மத வேள் தொடுத்த கணையாலே
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச
முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு(ம்) சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும்
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா
கடு உடைய அரா நிரைத்த சடில முடி மீது வைத்த
கடி அமலர் ஆதரித்த கழல் வீரா
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும்
வெற்றி அருணை நகர் கோபுரத்தில் உறைவோனே
அசுரர் குலம் வேர் அறுத்து வட அனலை மீது எழுப்பி
அமரர் சிறை மீள விட்ட பெருமாளே.
தக்க சமயம் பார்த்து ஒளிகொண்ட ஆகாயத்தில் நின்று, செம்மணி நிறத்தினதாய், விஷத்தைக் கலந்த நெருப்பை எனது படுக்கையின் மேல் வீசுகின்ற சந்திரனாலும், தலைவன் இடத்தினின்றும் நீங்காத என் மனதின் நிலைமையை அறியாது என்னை எதிர்த்த கொடியவனான மன்மதன் செலுத்திய மலர்ப் பாணங்களாலும், பல இனங்களைச் சேர்ந்த அறியாமை கொண்ட பெண்கள் தெரிந்து பேசும் வசை மொழிகளின் மிகுதியான வம்புப் பேச்சாலும், உன்னிடம் முழுமையும் ஈடுபட்டிருந்த என்னுடைய ஆவி கொஞ்சமும் அழியாமல், உச்சிக் கொண்டையும், நேர்த்தியான கடிவாள வாரும் கட்டியுள்ள, ஒய்யாரமாய் உலாவுகின்ற அழகிய மயிலின் மீது ஏறி நாள்தோறும் நீ வர வேண்டுகின்றேன். கருணை நீங்காத கண்களை உடையவள், சந்தனக் கலவை அழியாத மார்பகத்தை உடையவள், சேர்க்கை இன்பம் நீங்காத மறக்குலத்தவளாகிய வள்ளியின் கணவனே, விஷம் உடைய பாம்புகளின் வரிசையை ஜடா மகுடத்தின் மேல் வைத்த, சிறிது மாசும் இல்லாத குணத்தவரான, சிவபெருமான் போற்றி வணங்கிய திருப்பாதங்களை உடைய வீரனே, சிவந்த ரத்தினங்களில் அமைக்கப்பட்டது போன்ற ஒளி பொருந்திய சூரியன் வலம் வரும் வெற்றி விளங்குவதான திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே அசுரர்களுடைய குலத்தை வேருடன் அறுத்து, (யுகமுடிவில் வட துருவத்தினின்று வரும் பெரும் நெருப்பாகிய) வடவாக்கினி போன்ற தீயை அவர்கள் மீது செலுத்தி தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே.
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ... தக்க சமயம் பார்த்து ஒளிகொண்ட ஆகாயத்தில் நின்று, செம்மணி நிறத்தினதாய், ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு(ம்) நிலவாலே ... விஷத்தைக் கலந்த நெருப்பை எனது படுக்கையின் மேல் வீசுகின்ற சந்திரனாலும், தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த ... தலைவன் இடத்தினின்றும் நீங்காத என் மனதின் நிலைமையை அறியாது என்னை எதிர்த்த தறு கண் மத வேள் தொடுத்த கணையாலே ... கொடியவனான மன்மதன் செலுத்திய மலர்ப் பாணங்களாலும், வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச ... பல இனங்களைச் சேர்ந்த அறியாமை கொண்ட பெண்கள் தெரிந்து பேசும் வசை மொழிகளின் மிகுதியான வம்புப் பேச்சாலும், முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே ... உன்னிடம் முழுமையும் ஈடுபட்டிருந்த என்னுடைய ஆவி கொஞ்சமும் அழியாமல், மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு(ம்) சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் ... உச்சிக் கொண்டையும், நேர்த்தியான கடிவாள வாரும் கட்டியுள்ள, ஒய்யாரமாய் உலாவுகின்ற அழகிய மயிலின் மீது ஏறி நாள்தோறும் நீ வர வேண்டுகின்றேன். கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா ... கருணை நீங்காத கண்களை உடையவள், சந்தனக் கலவை அழியாத மார்பகத்தை உடையவள், சேர்க்கை இன்பம் நீங்காத மறக்குலத்தவளாகிய வள்ளியின் கணவனே, கடு உடைய அரா நிரைத்த சடில முடி மீது வைத்த ... விஷம் உடைய பாம்புகளின் வரிசையை ஜடா மகுடத்தின் மேல் வைத்த, கடி அமலர் ஆதரித்த கழல் வீரா ... சிறிது மாசும் இல்லாத குணத்தவரான, சிவபெருமான் போற்றி வணங்கிய திருப்பாதங்களை உடைய வீரனே, அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் ... சிவந்த ரத்தினங்களில் அமைக்கப்பட்டது போன்ற ஒளி பொருந்திய சூரியன் வலம் வரும் வெற்றி அருணை நகர் கோபுரத்தில் உறைவோனே ... வெற்றி விளங்குவதான திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே அசுரர் குலம் வேர் அறுத்து வட அனலை மீது எழுப்பி ... அசுரர்களுடைய குலத்தை வேருடன் அறுத்து, (யுகமுடிவில் வட துருவத்தினின்று வரும் பெரும் நெருப்பாகிய) வடவாக்கினி போன்ற தீயை அவர்கள் மீது செலுத்தி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே. ... தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே.