பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பை குத்துப் பொய்த்து எத்துத் தத்துக்.....குடில்பேணி பொச்சைப் பிச்சு அற்பக் கொச்சைச்சொற் கற்று பொற்சித்ரக் கச்சுக்.....கிரியார்தோய் துக்கத் துக்கத்திற் சிக்குப்பட்டிட்டு துக்கித்துக் கெய்த்துச்.....சுழலாதே சுத்தச் சித்தத்துப் பத்திப் பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்கப்.....பெறுவேனோ திக்குத் திக்கற்றுப் பைத் தத்து அத்திக்குச் செல் பத்ரக் கொக்கைப்.....பொரும்வேலா செப்பச் சொர்க்கத்துச் செம்பொன் தத்தைக்கு செச்சைக் கொத்து ஒப்பித்து.....அணிவோனே கக்கு அக்கைத் தக்க அக்கக்கட்கு அக்கு அக்கி கண் கத்த அத்தர்க்குப்.....பெரியோனே கற்றைப்பொற் றெத்தப் பெற்ற பொற் சிற்பக் கச்சிக்குள் சொக்கப்.....பெருமாளே.
குற்றங்கள் நிறைந்த பை, மலம் மிகுந்த பை, சுடுசொல், பொய், வஞ்சகம், ஆபத்து இவைகள் எல்லாம் கலந்த குடிசையான இந்த உடலை விரும்பி, குற்றமானதும், பைத்தியம் கொண்டதும், அற்பமானதும், இழிவானதுமான சொற்களைக் கற்று, அழகிய விசித்திரமான கச்சணிந்த பெருமார்புப் பெண்டிரைச் சேர்வதால் வரும் கொடிய துக்கத்தில் மாட்டிக்கொண்டு வேதனையுற்று, இளைத்து, மனம் சுழன்று சஞ்சலப்படாமல், பரிசுத்த மனதுடன் பக்தி பூண்ட பக்தர்களுக்கு இணையாக சிறிதளவேனும் உன்னைப் பூஜிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? எந்தத் திக்கிலும் உதவியின்றி, தனிப்பட்டு, கடைசியில் பச்சைநிற அலைகள் மோதும் கடலுக்குள்ளே போய்ச் சேர்ந்து, இலைகளோடு கூடிய மாமரமாக மாறிய சூரனுடன் போர் செய்த வேலனே, செம்மையான விண்ணுலகில் உள்ள செம்பொன் போன்ற கிளியாகிய தேவயானையை வெட்சி மலர்க் கொத்தால் அலங்கரித்து மாலை சூட்டுபவனே, (பிரமன் முதலியோர் சரீரத்தினின்றும்) சுழன்ற எலும்பை தகுந்தபடி தமது அங்கங்களுக்கு ஆபரணமாக ஆக்கி, அக்கினியை கண்ணிலே வைத்த தலைவர் சிவபிரானுக்கு குருவான பெரியவனே, திரளான துதிப்பாடல்களால் ஏத்தப்பெற்ற, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.