கருப் பற்றிப் பருத்து ஒக்கத் தரைக்கு உற்றிட்டு உருப் பெற்று
கருத்தின் கண் பொருள் பட்டு பயில் காலம்
கணக்கிட்டுப் பிணக்கிட்டு
கதித்திட்டுக் கொதித்திட்டுக் கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் சமன் ஆவி பெருக்க
புத்தியில் பட்டுப் புடைத் துக்கக் கிளைப் பின் பொய்
பிணத்தைச் சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும்
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்துத் தொக்கு அறக் கத்து
பிறப்புப் பற்று அறச் செச்சைக் கழல் தாராய்
பொருப்புக் கர்ப்புரக் கச்சுத் தனப் பொற்புத் தினைப் பச்சைப்புன
கொச்சைக் குறத் தத்தைக்கு இனியோனே
புரத்தைச் சுட்டு எரித்துப் பற்றலர்க்குப் பொற் பதத் துய்ப்பை
புணர்த்து அப்பித்தனைக் கற்பித்து அருள்வோனே
செருக்கு அக் குக்கரைக் குத்திச் செருப் புக்குப் பிடித்து எற்றி
சினத்திட்டுச் சிதைத்திட்டுப் பொரும் வீரா
திருத்தத்தில் புகல் சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரய
சித்ரத் திருக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே.
ஒரு தாயின் கருவாகச் சேர்ந்து உருவம் பெரிதாகி, (பத்து மாதம் என்னும் கணக்கு) ஒருமிக்க பூமியில் வந்து சேர்ந்து, (வளரும் பருவங்களுக்கு உரிய) உருவங்களை முறையே அடைந்து, எண்ணத்திலே, பொருள் சேர்ப்பதே குறிக்கோளாக வாழ்நாளை வீணாகச் செலுத்தும் காலத்தில், (ஆயுளின் காலத்தைக்) கணக்குப் பார்த்து, முடிவு காலம் வருவதை அறிந்து மாறுபாடு கொண்டு, விரைந்து வந்து மிக்க கோபத்தைக் காட்டி பாசக் கயிற்றை (கழுத்தைச் சுற்றி) வீசிப் பிடித்து யமன் என்னுடைய உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு போவதை நான் காண, உயிர் போய் விட்டது எனத் தெரிந்து கொண்ட, பக்கத்தில் இருந்த, துக்கப்படும் சுற்றத்தினர் (என்) பின்னாலேயே (சுடுகாடு வரை) சென்று, பிணத்தைச் சுட்டெரித்து விட்டு, வீட்டுக்கு வந்து எல்லோரும் அந்தப் பிறப்பில் சுற்றத்தாராக உள்ள யாவரையும் வரும்படி அழைத்து, உடல் சோர்வு அடைந்து ஓயும்படி அழுது கத்துகின்ற இந்தப் பிறப்பில் உள்ள ஆசை நீங்கும்படி உனது வெட்சி மாலை சூழ்ந்த திருவடியைத் தாராய். மலை போன்றதும், பச்சைக் கற்பூரம், ரவிக்கை (இவைகளை அணிந்ததுமான) மார்பக அழகைக் கொண்டவளும், தினை வளரும் பசுமை வாய்ந்த புனத்திலிருந்தவளும், மிழற்றும் பேச்சை உடையவளுமான குறப் பெண்கிளி வள்ளிக்கு இனியவனே, திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவ வழிபாட்டில் இருந்த மூவர்க்கு மேலான பதவி நுகர்ச்சியை கூட்டி வைத்த (அந்தப்) பித்தனாகிய சிவபெருமானுக்கு (குருவாய் நின்று பிரணவப் பொருளை) ஓதுவித்து அருளியவனே, அகந்தை கொண்ட அந்த நாய் போன்று இழிந்தோர்களாகிய அசுரர்களைக் குத்தியும் போரில் புகுந்து பிடித்து மோதியும், கோபித்து அழியச் செய்தும் சண்டை செய்த வீரனே, பிழையில்லாமல் சொல்லப்படும் சுத்தமான இயல், இசை, நாடகம் என்று மூவகைகளால் ஓதப்படும் தமிழ் (விளங்கும்) சிறப்பு வாய்ந்த மேன்மையான கச்சி என்னும் ஊரில் வாழும் அழகிய பெருமாளே.
கருப் பற்றிப் பருத்து ஒக்கத் தரைக்கு உற்றிட்டு உருப் பெற்று ... ஒரு தாயின் கருவாகச் சேர்ந்து உருவம் பெரிதாகி, (பத்து மாதம் என்னும் கணக்கு) ஒருமிக்க பூமியில் வந்து சேர்ந்து, (வளரும் பருவங்களுக்கு உரிய) உருவங்களை முறையே அடைந்து, கருத்தின் கண் பொருள் பட்டு பயில் காலம் ... எண்ணத்திலே, பொருள் சேர்ப்பதே குறிக்கோளாக வாழ்நாளை வீணாகச் செலுத்தும் காலத்தில், கணக்கிட்டுப் பிணக்கிட்டு ... (ஆயுளின் காலத்தைக்) கணக்குப் பார்த்து, முடிவு காலம் வருவதை அறிந்து மாறுபாடு கொண்டு, கதித்திட்டுக் கொதித்திட்டுக் கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் சமன் ஆவி பெருக்க ... விரைந்து வந்து மிக்க கோபத்தைக் காட்டி பாசக் கயிற்றை (கழுத்தைச் சுற்றி) வீசிப் பிடித்து யமன் என்னுடைய உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு போவதை நான் காண, புத்தியில் பட்டுப் புடைத் துக்கக் கிளைப் பின் பொய் ... உயிர் போய் விட்டது எனத் தெரிந்து கொண்ட, பக்கத்தில் இருந்த, துக்கப்படும் சுற்றத்தினர் (என்) பின்னாலேயே (சுடுகாடு வரை) சென்று, பிணத்தைச் சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் ... பிணத்தைச் சுட்டெரித்து விட்டு, வீட்டுக்கு வந்து எல்லோரும் பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்துத் தொக்கு அறக் கத்து ... அந்தப் பிறப்பில் சுற்றத்தாராக உள்ள யாவரையும் வரும்படி அழைத்து, உடல் சோர்வு அடைந்து ஓயும்படி அழுது கத்துகின்ற பிறப்புப் பற்று அறச் செச்சைக் கழல் தாராய் ... இந்தப் பிறப்பில் உள்ள ஆசை நீங்கும்படி உனது வெட்சி மாலை சூழ்ந்த திருவடியைத் தாராய். பொருப்புக் கர்ப்புரக் கச்சுத் தனப் பொற்புத் தினைப் பச்சைப்புன ... மலை போன்றதும், பச்சைக் கற்பூரம், ரவிக்கை (இவைகளை அணிந்ததுமான) மார்பக அழகைக் கொண்டவளும், தினை வளரும் பசுமை வாய்ந்த புனத்திலிருந்தவளும், கொச்சைக் குறத் தத்தைக்கு இனியோனே ... மிழற்றும் பேச்சை உடையவளுமான குறப் பெண்கிளி வள்ளிக்கு இனியவனே, புரத்தைச் சுட்டு எரித்துப் பற்றலர்க்குப் பொற் பதத் துய்ப்பை ... திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவ வழிபாட்டில் இருந்த மூவர்க்கு மேலான பதவி நுகர்ச்சியை புணர்த்து அப்பித்தனைக் கற்பித்து அருள்வோனே ... கூட்டி வைத்த (அந்தப்) பித்தனாகிய சிவபெருமானுக்கு (குருவாய் நின்று பிரணவப் பொருளை) ஓதுவித்து அருளியவனே, செருக்கு அக் குக்கரைக் குத்திச் செருப் புக்குப் பிடித்து எற்றி ... அகந்தை கொண்ட அந்த நாய் போன்று இழிந்தோர்களாகிய அசுரர்களைக் குத்தியும் போரில் புகுந்து பிடித்து மோதியும், சினத்திட்டுச் சிதைத்திட்டுப் பொரும் வீரா ... கோபித்து அழியச் செய்தும் சண்டை செய்த வீரனே, திருத்தத்தில் புகல் சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரய ... பிழையில்லாமல் சொல்லப்படும் சுத்தமான இயல், இசை, நாடகம் என்று மூவகைகளால் ஓதப்படும் தமிழ் (விளங்கும்) சித்ரத் திருக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே. ... சிறப்பு வாய்ந்த மேன்மையான கச்சி என்னும் ஊரில் வாழும் அழகிய பெருமாளே.