செகமாயை யுற்று என் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடல் ஊறி
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி
மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில்
மலைநேர்புயத்தில் உறவாடி
மடிமீதடுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல் அணைக்க வருநீதா
முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாது எனக்கு உன் அடிகாண வைத்த
தனியேரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே.
இந்த உலக மாயையில் சிக்குண்டு, எனது இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய அழகிய மனைவியின் கருவில் உருவாகி அவளது உடலில் ஊறி பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, நல்ல வடிவோடு கூடி பூமியில் நன்கு தோன்றிய குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து, முகத்தோடு முகம் சேர்த்து, எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி, நாள்தோறும் உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும். முக வசீகரம் மிக்க குறப்பெண் வள்ளியின் மார்பினை அணைக்க வந்த நீதிபதியே, பழம் பெரும் வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே பிரணவப் பொருளை சிவனாருக்கு உபதேசித்த குருநாதனே, தடையொன்றும் இல்லாது எனக்கு உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த ஒப்பற்ற திருவேரகத்தின் (சுவாமிமலையின்) முருகனே, மரங்கள் இருபுறமும் நிறைந்த காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே.
செகமாயை யுற்று ... இந்த உலக மாயையில் சிக்குண்டு, என் அகவாழ்வில் வைத்த ... எனது இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய திருமாது கெர்ப்பம் உடல் ஊறி ... அழகிய மனைவியின் கருவில் உருவாகி அவளது உடலில் ஊறி தெசமாத முற்றி ... பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த ... நல்ல வடிவோடு கூடி பூமியில் நன்கு தோன்றிய பொருளாகி ... குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, மக அவாவின் ... குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சி விழி ஆநநத்தில் ... உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து, முகத்தோடு முகம் சேர்த்து, மலைநேர்புயத்தில் உறவாடி ... எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, மடிமீதடுத்து விளையாடி ... என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி, நித்த மணிவாயின் முத்தி தரவேணும் ... நாள்தோறும் உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும். முகமாய மிட்ட குறமாதி னுக்கு ... முக வசீகரம் மிக்க குறப்பெண் வள்ளியின் முலைமேல் அணைக்க வருநீதா ... மார்பினை அணைக்க வந்த நீதிபதியே, முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும் வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு உபதேசித்த குருநாதனே, தகையாது எனக்கு ... தடையொன்றும் இல்லாது எனக்கு உன் அடிகாண வைத்த ... உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த தனியேரகத்தின் முருகோனே ... ஒப்பற்ற திருவேரகத்தின் (சுவாமிமலையின்) முருகனே, தருகாவிரிக்கு வடபாரிசத்தில் ... மரங்கள் இருபுறமும் நிறைந்த காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே சமர்வேலெடுத்த பெருமாளே. ... போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே.