தகர நறு மலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழி வலை பட விதி தலையில் எழுதியும்
மனைவி இல் உறவிடு அதனாலே
தனயர் அ(ன்)னை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவு உறு
தவனம் சலதியில் முழுகியே இடர் படு துயர் தீர
அகர முதல் உள பொருளினை அருளிட
இரு கை குவி செய்து உள் உருகிட உருகியெ
அரகர என வலன் இடம் உற எழில் உனது இரு பாதம்
அருள அருளுடன் மருள் அற இருள் அற
கிரண அயில் கொடு குருகு அணி கொடியொடு
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே
சிகர குடையினில் நிரை வர இசை தெரி சதுரன்
விதுரன் இல் வருபவன்
அளை அது திருடி அடி படு சிறியவன் நெடியவன் மது சூதன்
திகிரி வளை கதை வசி தநு உடையவன்
எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை
திமித திமி திமி என நடம் இடும் அரி மருகோனே
பகர புகர் முக மத கரி
உழை தரு வனிதை வெருவ முன் வர அருள் புரி குக
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல்
கமுகு அடர் பொழில் திகழ் பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே.
மயிர்ச் சாந்தும், மணமுள்ள மலர்களும் நிறைந்த கூந்தலுடைய (விலை) மகளிரின் குழப்பம் தரும் கர்வம் மிக்க கண் வலையில் படும்படியாக தலையில் விதியால் எழுதப்பட்டும், மனைவியோடு கூடிய இல்லற வாழ்க்கையில் இருக்க வேண்டி அமைந்தபடியால், மக்கள், தாய், சுற்றத்தார், மனைவியர், நண்பர்கள், பசு முதலிய பல வகையான சிந்தனை ஏற்பட, ஆசைக் கடலில் மூழ்கி துன்பம் உறுகின்ற துயரம் நீங்க, அகர எழுத்தை முதலாகக் கொண்ட (அ+உ+ம் = ஓம் என்ற) பிரணவப் பொருளை (நீ) உபதேசிக்க, இரண்டு கைகளையும் குவித்து மனம் உருகி உருகி, ஹர ஹர எனக் கூறி உனது வலப் புறத்தும் இடப் புறத்தும் இருந்து, உன்னுடைய அழகிய இரண்டு திருவடிகளை நீ தந்து அருளவும், அங்ஙனம் பெற்ற அருள் ஆசியினால் என் மயக்கம் நீங்க, அஞ்ஞானமும் அகல, ஒளி வீசும் வேலும், கோழிக் கொடியும் விளங்க, அழகாக பச்சை நிற மயிலின் மீதில் வர நீ இசைந்தருளுக. கோவர்த்தன மலையாகிய குடையின் கீழே பசுக் கூட்டம் வந்து சேர குழல் இசையை வாசித்துக் காட்டிய சமர்த்தன், விதுரனுடைய வீட்டுக்கு விரும்பி (விருந்து செய்ய) வந்தவன், வெண்ணெயைத் திருடி அடிபட்ட சிறிய குழந்தை, (திரிவிக்ர ரூபம் கொண்ட) பெரியவன், மது என்ற அசுரனைக் கொன்றவன், சக்கரம், சங்கு, தண்டம், வாள், வில் (முதலிய ஐந்து ஆயுதங்களை) உடையவன், மேக நிறம் கொண்டவன், காளிங்கன் என்னும் பாம்பின் அழகிய பணாமுடியின் மேல் திமித திமி திமி என்ற பல ஒலிகளுடன் நடனம் செய்கின்ற திருமாலின் மருகனே, அழகிய, புள்ளியைக் கொண்ட முகத்தை உடைய, மதம் கொண்ட யானையாகிய கணபதியை, மான் பெற்ற மங்கையாகிய வள்ளி அஞ்சும்படி (யானை உருவில்) முன்னே வரச் செய்தருளிய குகனே, மேலானவனே, குருபரனே, இமவான் பயந்தருளிய மயில் போன்ற உமையின் மகனே, பலாவின் பழுத்த பழத்தினின்று கனிந்து ஒழுகிய தேன் நிறைந்த வயல்களும், கமுகு மரங்களும் அடர்ந்த சோலைகள் விளங்கும் பழனி மலையில் எழுந்தருளி உள்ள அரசே, தேவர்களின் பெருமாளே.
தகர நறு மலர் பொதுளிய குழலியர் ... மயிர்ச் சாந்தும், மணமுள்ள மலர்களும் நிறைந்த கூந்தலுடைய (விலை) மகளிரின் கலக கெருவித விழி வலை பட விதி தலையில் எழுதியும் ... குழப்பம் தரும் கர்வம் மிக்க கண் வலையில் படும்படியாக தலையில் விதியால் எழுதப்பட்டும், மனைவி இல் உறவிடு அதனாலே ... மனைவியோடு கூடிய இல்லற வாழ்க்கையில் இருக்க வேண்டி அமைந்தபடியால், தனயர் அ(ன்)னை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவு உறு ... மக்கள், தாய், சுற்றத்தார், மனைவியர், நண்பர்கள், பசு முதலிய பல வகையான சிந்தனை ஏற்பட, தவனம் சலதியில் முழுகியே இடர் படு துயர் தீர ... ஆசைக் கடலில் மூழ்கி துன்பம் உறுகின்ற துயரம் நீங்க, அகர முதல் உள பொருளினை அருளிட ... அகர எழுத்தை முதலாகக் கொண்ட (அ+உ+ம் = ஓம் என்ற) பிரணவப் பொருளை (நீ) உபதேசிக்க, இரு கை குவி செய்து உள் உருகிட உருகியெ ... இரண்டு கைகளையும் குவித்து மனம் உருகி உருகி, அரகர என வலன் இடம் உற எழில் உனது இரு பாதம் ... ஹர ஹர எனக் கூறி உனது வலப் புறத்தும் இடப் புறத்தும் இருந்து, உன்னுடைய அழகிய இரண்டு திருவடிகளை அருள அருளுடன் மருள் அற இருள் அற ... நீ தந்து அருளவும், அங்ஙனம் பெற்ற அருள் ஆசியினால் என் மயக்கம் நீங்க, அஞ்ஞானமும் அகல, கிரண அயில் கொடு குருகு அணி கொடியொடு ... ஒளி வீசும் வேலும், கோழிக் கொடியும் விளங்க, அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே ... அழகாக பச்சை நிற மயிலின் மீதில் வர நீ இசைந்தருளுக. சிகர குடையினில் நிரை வர இசை தெரி சதுரன் ... கோவர்த்தன மலையாகிய குடையின் கீழே பசுக் கூட்டம் வந்து சேர குழல் இசையை வாசித்துக் காட்டிய சமர்த்தன், விதுரன் இல் வருபவன் ... விதுரனுடைய வீட்டுக்கு விரும்பி (விருந்து செய்ய) வந்தவன், அளை அது திருடி அடி படு சிறியவன் நெடியவன் மது சூதன் ... வெண்ணெயைத் திருடி அடிபட்ட சிறிய குழந்தை, (திரிவிக்ர ரூபம் கொண்ட) பெரியவன், மது என்ற அசுரனைக் கொன்றவன், திகிரி வளை கதை வசி தநு உடையவன் ... சக்கரம், சங்கு, தண்டம், வாள், வில் (முதலிய ஐந்து ஆயுதங்களை) உடையவன், எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை ... மேக நிறம் கொண்டவன், காளிங்கன் என்னும் பாம்பின் அழகிய பணாமுடியின் மேல் திமித திமி திமி என நடம் இடும் அரி மருகோனே ... திமித திமி திமி என்ற பல ஒலிகளுடன் நடனம் செய்கின்ற திருமாலின் மருகனே, பகர புகர் முக மத கரி ... அழகிய, புள்ளியைக் கொண்ட முகத்தை உடைய, மதம் கொண்ட யானையாகிய கணபதியை, உழை தரு வனிதை வெருவ முன் வர அருள் புரி குக ... மான் பெற்ற மங்கையாகிய வள்ளி அஞ்சும்படி (யானை உருவில்) முன்னே வரச் செய்தருளிய குகனே, பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே ... மேலானவனே, குருபரனே, இமவான் பயந்தருளிய மயில் போன்ற உமையின் மகனே, பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் ... பலாவின் பழுத்த பழத்தினின்று கனிந்து ஒழுகிய தேன் நிறைந்த வயல்களும், கமுகு அடர் பொழில் திகழ் பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே. ... கமுகு மரங்களும் அடர்ந்த சோலைகள் விளங்கும் பழனி மலையில் எழுந்தருளி உள்ள அரசே, தேவர்களின் பெருமாளே.