குழல் அடவி முகில் பொழில் விர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம்
குழை மகரம் வளை மொழி குயில் அமுது
குய(ம்) முளரி முகை கிரி சூது
விழி கயல் அயில் பகழி வருணி கரு விளை குவளை விடம் என நாயேன்
மிக அரிவையரை அவ நெறிகள் சொ(ல்)லி வெறிது உளம் விதனம் உறலாமோ
கழல் ப(ண்)ணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா
கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநிமலை முருக விசாகா
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே.
பெண்களின் கூந்தல் காடு, மேகம் (போன்றது). நெற்றி வீரம் பொருந்திய வில். வாய் இதழ்கள் குமுத மலர். பற்கள் முத்துக்கள். மகர மீன் வடிவம் பொருந்திய குண்டலம் தரித்துள்ள காது வள்ளிக் கொடி இலை போன்றது. பேச்சு குயில் போன்றும் அமுதம் போன்றும் இனியது. மார்பகங்கள் தாமரை அரும்பையும், மலையையும், சூதாடும் கருவியையும் போன்றவை. கண்கள் கயல் மீன், வேல் என்றும், அம்பு, கடல், கரு விளை மலர், நீலோற்பல மலர், நஞ்சு என்றெல்லாம் உவமை கூறி, நாயேனாகிய அடியேன் மிகவும் பெண்களை சிறிதும் பயனற்ற வழிகளில் வியந்துரைத்து வீணாக என் உள்ளம் விசனப்படலாமோ? செய்த வினைகள் கழல (நீங்க), வீரக் கழலையும் தண்டை முதலிய ஆபரணங்களையும் அணிந்துள்ள திருவடிகளைப் பணியும்படி அருள் புரிவாயாக, மயில் வீரனே, தாமரையில் வாழும் லக்ஷ்மியின் மருகனே, (கிரெளஞ்சம், எழு கிரி ஆகிய) மலைவாழ் அரக்கர்கள் அழிய அந்த மலைகளைத் தொளைத்த ஒளி வீசும் வேலனே, பழம் போன்றவளும், இமய மலையில் அவதரித்தவளும், பழமையுடைய நிமலையும் ஆகிய பார்வதி பெற்ற, பழநிமலைவாழ் முருகனே, விசாக மூர்த்தியே, பரந்துள்ள கடலில் மீது பாணத்தைச் செலுத்தி அடக்கிய கடல் நிறம் உடைய (ராமனாகிய) திருமால் போற்றும், தேவர்களின் பெருமாளே.
குழல் அடவி முகில் பொழில் விர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் ... பெண்களின் கூந்தல் காடு, மேகம் (போன்றது). நெற்றி வீரம் பொருந்திய வில். வாய் இதழ்கள் குமுத மலர். பற்கள் முத்துக்கள். குழை மகரம் வளை மொழி குயில் அமுது ... மகர மீன் வடிவம் பொருந்திய குண்டலம் தரித்துள்ள காது வள்ளிக் கொடி இலை போன்றது. பேச்சு குயில் போன்றும் அமுதம் போன்றும் இனியது. குய(ம்) முளரி முகை கிரி சூது ... மார்பகங்கள் தாமரை அரும்பையும், மலையையும், சூதாடும் கருவியையும் போன்றவை. விழி கயல் அயில் பகழி வருணி கரு விளை குவளை விடம் என நாயேன் ... கண்கள் கயல் மீன், வேல் என்றும், அம்பு, கடல், கரு விளை மலர், நீலோற்பல மலர், நஞ்சு என்றெல்லாம் உவமை கூறி, நாயேனாகிய அடியேன் மிக அரிவையரை அவ நெறிகள் சொ(ல்)லி வெறிது உளம் விதனம் உறலாமோ ... மிகவும் பெண்களை சிறிதும் பயனற்ற வழிகளில் வியந்துரைத்து வீணாக என் உள்ளம் விசனப்படலாமோ? கழல் ப(ண்)ணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா ... செய்த வினைகள் கழல (நீங்க), வீரக் கழலையும் தண்டை முதலிய ஆபரணங்களையும் அணிந்துள்ள திருவடிகளைப் பணியும்படி அருள் புரிவாயாக, மயில் வீரனே, கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா ... தாமரையில் வாழும் லக்ஷ்மியின் மருகனே, (கிரெளஞ்சம், எழு கிரி ஆகிய) மலைவாழ் அரக்கர்கள் அழிய அந்த மலைகளைத் தொளைத்த ஒளி வீசும் வேலனே, பழநி மலை வரு பழ நிமலை தரு பழநிமலை முருக விசாகா ... பழம் போன்றவளும், இமய மலையில் அவதரித்தவளும், பழமையுடைய நிமலையும் ஆகிய பார்வதி பெற்ற, பழநிமலைவாழ் முருகனே, விசாக மூர்த்தியே, பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே. ... பரந்துள்ள கடலில் மீது பாணத்தைச் செலுத்தி அடக்கிய கடல் நிறம் உடைய (ராமனாகிய) திருமால் போற்றும், தேவர்களின் பெருமாளே.