மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும் மனைவிக்கும் வாழ்நர்க்கும் மிக மனதூடே
மைத்த வேலைக்கு நெடிது உற்ற மாயத் துயரம் வைத்து வாட
சமனும் உற மேவி திக்கு நாடிக் கரிய மெய்க் கடாவில் திருகி
திக்க ஆவிக்கு அளவு தெரியா முன்
சித்தம் ஓவித் துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாதக் கமலம் அருள்வாயே
இக்கு வேளைக் கருக முக்கண் நாடிக் கனலை இட்டு
யோகத்து அமர் இறையோர் முன்
எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தை தனை இனிது ஈவாய்
பக்க ஆர்வத்துடன் உள்நெக்கு நாடிப் பரவும் பத்தர் பாடற்கு உருகும் முருகோனே
பக்கம் யானைத் திருவோடு ஒக்க வாழ
குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே.
நான் பெற்ற மக்களுக்கும், என் தாயாருக்கும், மருமகப் பிள்ளைகளுக்கும், மாமன்மார்களுக்கும், மனையாளுக்கும், உடன் வாழ்பவர்களுக்கும், மிகவும் மனத்தில் வருத்தம் தந்து, கரு நிறம் கொண்ட கடலைக் காட்டிலும் பெரிதாயுள்ள மாயை காரணமாக வரும் துன்பத்தை உண்டாக்கி மனம் சோர்வு அடைய, யமனும் இருக்கும் இடத்தைத் தேடி அடைந்து, கரு நிறமான எருமைக் கடாவின் மீது முறுக்குடன் வந்து என் சொற்களைக் குழற வைக்க, என் உயிர் உடலில் தங்கும் கால அளவு தெரிவதற்கு முன்பாக (அதாவது நான் சற்று நேரத்தில் இறப்பதற்குமுன்), மனம் நீங்கி ஒடுக்கம் உற்று, நனவும் கனவும் அற்று நான் வாழ்வதற்கு, நீ சற்று உனது அழகிய திருவடித் தாமரைகளை அருள்வாயாக. கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனை, கருகும்படி மூன்றாவதாகிய (நெற்றிக்) கண் கொண்டு அவனது (காமத்தை மூட்டும்) செயலை ஆராய்ந்து (அவன் மீது) நெருப்பை ஏவி, யோகத்தில் அமர்ந்த சிவபெருமானுடைய முன்னிலையில், இயங்குகின்ற உயிர்கள் முதலிய யாவற்றிலும் பொருந்தி நிற்பவராகிய மாயோனாகிய திருமால் முதலானோர்களுக்கும் எட்ட முடியாத ஞானப் பொருளை நன்கு உபதேசித்தவனே, உன்பால் ஆசையுடன் உள்ளம் நெகிழ்ந்து விரும்பிப் போற்றும் பக்தர்களின் பாடல்களுக்கு மனம் உருகும் முருகனே. உனது (இடது) பக்கத்தில் தேவயானையாகிய லக்ஷ்மியின் மகளோடு பொருந்தி வாழ்கின்றவளும், அந்தக் குறவர்களால் வளர்க்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட மான் போன்றவளுமாகிய வள்ளிக்கு இனிய பெருமாளே.
மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும் மனைவிக்கும் வாழ்நர்க்கும் மிக மனதூடே ... நான் பெற்ற மக்களுக்கும், என் தாயாருக்கும், மருமகப் பிள்ளைகளுக்கும், மாமன்மார்களுக்கும், மனையாளுக்கும், உடன் வாழ்பவர்களுக்கும், மிகவும் மனத்தில் வருத்தம் தந்து, மைத்த வேலைக்கு நெடிது உற்ற மாயத் துயரம் வைத்து வாட ... கரு நிறம் கொண்ட கடலைக் காட்டிலும் பெரிதாயுள்ள மாயை காரணமாக வரும் துன்பத்தை உண்டாக்கி மனம் சோர்வு அடைய, சமனும் உற மேவி திக்கு நாடிக் கரிய மெய்க் கடாவில் திருகி ... யமனும் இருக்கும் இடத்தைத் தேடி அடைந்து, கரு நிறமான எருமைக் கடாவின் மீது முறுக்குடன் வந்து திக்க ஆவிக்கு அளவு தெரியா முன் ... என் சொற்களைக் குழற வைக்க, என் உயிர் உடலில் தங்கும் கால அளவு தெரிவதற்கு முன்பாக (அதாவது நான் சற்று நேரத்தில் இறப்பதற்குமுன்), சித்தம் ஓவித் துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாதக் கமலம் அருள்வாயே ... மனம் நீங்கி ஒடுக்கம் உற்று, நனவும் கனவும் அற்று நான் வாழ்வதற்கு, நீ சற்று உனது அழகிய திருவடித் தாமரைகளை அருள்வாயாக. இக்கு வேளைக் கருக முக்கண் நாடிக் கனலை இட்டு ... கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனை, கருகும்படி மூன்றாவதாகிய (நெற்றிக்) கண் கொண்டு அவனது (காமத்தை மூட்டும்) செயலை ஆராய்ந்து (அவன் மீது) நெருப்பை ஏவி, யோகத்து அமர் இறையோர் முன் ... யோகத்தில் அமர்ந்த சிவபெருமானுடைய முன்னிலையில், எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தை தனை இனிது ஈவாய் ... இயங்குகின்ற உயிர்கள் முதலிய யாவற்றிலும் பொருந்தி நிற்பவராகிய மாயோனாகிய திருமால் முதலானோர்களுக்கும் எட்ட முடியாத ஞானப் பொருளை நன்கு உபதேசித்தவனே, பக்க ஆர்வத்துடன் உள்நெக்கு நாடிப் பரவும் பத்தர் பாடற்கு உருகும் முருகோனே ... உன்பால் ஆசையுடன் உள்ளம் நெகிழ்ந்து விரும்பிப் போற்றும் பக்தர்களின் பாடல்களுக்கு மனம் உருகும் முருகனே. பக்கம் யானைத் திருவோடு ஒக்க வாழ ... உனது (இடது) பக்கத்தில் தேவயானையாகிய லக்ஷ்மியின் மகளோடு பொருந்தி வாழ்கின்றவளும், குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே. ... அந்தக் குறவர்களால் வளர்க்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட மான் போன்றவளுமாகிய வள்ளிக்கு இனிய பெருமாளே.