தவநெறி தவறிய குருடுகள்
தலைபறி கதறிய பரபாதத் தருமிகள்
கருமிகள் வெகுவித சமயிகள்
அவரொடு சருவாநின்று
அவன் இவன்உவன் உடன் அவள் இவள் உவள்
அது இது உது எனுமாறற்று
அரு உரு ஒழிதரு உருவுடை
அதுபதி தமியனும் உணர்வேனோ
குவலய முழுவதும் மதிர்பட வடகுவடு இடிபட
உரகேசன் கொடுமுடி பலநெரிதர
நெடு முதுகுரை கடல்புனல் வறிதாக
துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெட
நிசி சரர்சேனை துகளெழ
நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே.
தவவழியை விட்டு விலகின குருடர்கள், தலைமயிரைப் பறித்து, தமது கொள்கைகளை உரக்க வலியுறுத்தும் மற்றச் சமய (சமண) அறநெறியாளர்கள், தீய வினையாளர்கள், பலவிதமான சமய நெறிகளை அனுஷ்டிப்பவர்கள், ஆகிய இவர்களுடன் யான் பலகாலம் போராடி நின்றேன். அவன் - இவன் - உவன் என்றும், அவள் - இவள் - உவள் என்றும், அது - இது - உது என்றும் குறித்துக்காட்ட இல்லாத வகையில் இருக்கும், உருவம் இன்மை - உருவம் உடைமை இரண்டும் நீங்கிய தன்மையை உடைய பொருளே கடவுள் என்ற உண்மையை அடியேனும் உணர்ந்து கொள்வேனோ? உலகம் முழுவதும் அதிர்ச்சி கொள்ள, வடக்கில் உள்ள மேருமலை பொடிபட, சர்ப்பங்களின் தலைவன் ஆதிசேஷனின் வளைந்த பணாமுடிகளில் பலவும் நெரிபட, நீண்டதும், பழையதும், ஒலிப்பதுமான கடலில் நீர் வற்றிப் போக, அர்ச்சனைப் பூக்களுடன் பூஜித்து விண்ணப்பிக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனின் துயரங்கள் நீங்க, அசுரர்களின் சேனை அழிபட்டுப் பொடி எழ, நடனம் செய்யும் மரகதப் பச்சைக் குதிரையாம் மயில் மீது ஏறி (போர்க்களத்துக்கு) வரவல்ல பெருமாளே.
தவநெறி தவறிய குருடுகள் ... தவவழியை விட்டு விலகின குருடர்கள், தலைபறி கதறிய பரபாதத் தருமிகள் ... தலைமயிரைப் பறித்து, தமது கொள்கைகளை உரக்க வலியுறுத்தும் மற்றச் சமய (சமண) அறநெறியாளர்கள், கருமிகள் வெகுவித சமயிகள் ... தீய வினையாளர்கள், பலவிதமான சமய நெறிகளை அனுஷ்டிப்பவர்கள், அவரொடு சருவாநின்று ... ஆகிய இவர்களுடன் யான் பலகாலம் போராடி நின்றேன். அவன் இவன்உவன் உடன் அவள் இவள் உவள் ... அவன் - இவன் - உவன் என்றும், அவள் - இவள் - உவள் என்றும், அது இது உது எனுமாறற்று ... அது - இது - உது என்றும் குறித்துக்காட்ட இல்லாத வகையில் இருக்கும், அரு உரு ஒழிதரு உருவுடை ... உருவம் இன்மை - உருவம் உடைமை இரண்டும் நீங்கிய தன்மையை உடைய அதுபதி தமியனும் உணர்வேனோ ... பொருளே கடவுள் என்ற உண்மையை அடியேனும் உணர்ந்து கொள்வேனோ? குவலய முழுவதும் மதிர்பட வடகுவடு இடிபட ... உலகம் முழுவதும் அதிர்ச்சி கொள்ள, வடக்கில் உள்ள மேருமலை பொடிபட, உரகேசன் கொடுமுடி பலநெரிதர ... சர்ப்பங்களின் தலைவன் ஆதிசேஷனின் வளைந்த பணாமுடிகளில் பலவும் நெரிபட, நெடு முதுகுரை கடல்புனல் வறிதாக ... நீண்டதும், பழையதும், ஒலிப்பதுமான கடலில் நீர் வற்றிப் போக, துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெட ... அர்ச்சனைப் பூக்களுடன் பூஜித்து விண்ணப்பிக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனின் துயரங்கள் நீங்க, நிசி சரர்சேனை துகளெழ ... அசுரர்களின் சேனை அழிபட்டுப் பொடி எழ, நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே. ... நடனம் செய்யும் மரகதப் பச்சைக் குதிரையாம் மயில் மீது ஏறி (போர்க்களத்துக்கு) வரவல்ல பெருமாளே.