சிவஞான புண்டரிக மலர்மாதுடன்
கலவி சிவபோக மன்பருக அறியாமல்
செகமீது உழன்று மல வடிவாயிருந்து
பொது திகழ்மாதர் பின்செருமி அழிவேனோ
தவ மாதவங்கள்பயில்
அடியார் கணங்களொடு
தயவாய் மகிழ்ந்துதினம் விளையாட
தமியேன்மலங்கள் இரு வினைநோய்
இடிந்து அலற
ததிநாளும் வந்ததென்முன் வரவேணும
உவகாரி யன்பர்பணி கலியாணி
எந்தை இடம் உறை நாயகங் கவுரி
சிவகாமி
ஒளிர் ஆனையின்கரமில்
மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த
உமை யருள்பாலா
அவமேபி றந்தஎனை யிறவாமல்
அன்பர்புகும் அமுதாலயம் பதவியருள்வோனே
அழகாநகம்பொலியு மயிலா
குறிஞ்சிமகிழ் அயிலா
புகழ்ந்தவர்கள் பெருமாளே.
சிவஞானம் என்னும் தாமரை மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே இணையும் மங்களகரமான பேரின்பத்தை நன்றாக அனுபவிக்கத் தெரியாமல், இவ்வுலகில் அலைந்து திரிந்து, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சொரூபமாகி, பொதுவாய்த் திகழும் விலைமாதரைப் பின்தொடர்ந்து அழிந்து போவேனோ? தவமும் நிஷ்டைகளும் செய்கின்ற உன் அடியார்களின் கூட்டங்களுடன் அன்போடு மகிழ்ந்து தினமும் விளையாடவும், அடியேனது மும்மலங்கள், பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை, நோய்கள் யாவும் அச்சமுற்று அலறி ஓடும்படியாகவும், தக்க சமயத்தில் தினமும் பிரத்யக்ஷமாக வந்தவனாக என்முன்னால் நீ வரவேண்டும். யாவர்க்கும் உதவி செய்பவளும், அன்பர்கள் பணிந்து போற்றும் கல்யாணியும், எந்தை சிவபிரானின் இடது பாகத்தில் நாயகியாக விளங்கும் கெளரியும், சிவகாம சுந்தரியும், விளங்கும் யானைமுக விநாயகனுக்குக் கரத்தில் மகிழும்படியாக மாதுளங்கனியை முன்பொருநாள் அளித்தவளும் ஆகிய உமாதேவி பார்வதி அருளிய பாலகனே, வீண் காலம் போக்கும் பிறவியை எடுத்த எனக்கு இறவாத வரத்தைத் தந்து அன்பர்கள் புகுகின்ற அமுதக்கோயிலாகிய உயர் நிலையை அருள்வோனே, அழகனே, மலைகளில் விளங்கி வாழ்பவனே, மயில் வாகனனே, குறிஞ்சி நிலத்தில் மகிழ்ச்சியோடு குடியிருக்கும் வேலவனே, புகழ்ந்து போற்றும் அடியவர்களின் பெருமாளே.