இலகு கனி மிஞ்சு(ம்) மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நஞ்சு(ம்)
முகம் மீதே இசை முரல் சுரும்பு(ம்) இளமுலை அரும்பு(ம்)
இலகிய கரும்பும் மயலாலே
நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர் நொந்து
மத வேளால் நிலை அழியு(ம்) நெஞ்சில் அவர் குடி புகுந்த நினைவொடும் இறந்து படலாமோ
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா
புழுகு எழ மணந்த குற மகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே.
கனிந்த பழத்தின் சுவைக்கும் மேம்பட்ட பேச்சும், இரவில் தூங்கும் இரண்டு கண்கள் என்னும் விஷமும், முகத்தின் மேல் (முகத்தை மலரென்று நினைத்து) இசை ஒலிக்கும் வண்டும், இளம் மார்பகங்களாகிய மொட்டுக்களும், கரும்பைப் போல் விளங்கும் தோளும் (கொண்ட என் மகள்) காம மயக்கம் கொண்டு, நிலவின் குளிர்ச்சியும் சூடாக எரிக்க, கரு நிறம் அடைந்து, வேதனைப்பட்டு, நெகிழ்ச்சியுறும் உயிர் நொந்தும், மன்மதன் காரணமாக, தனது நிலை அழிந்து போகும் மனதில், அவளது தலைவர் குடி புகுந்த நினைவு ஒன்றையே கொண்டு இவள் இறந்து படுதல் நீதியாகுமோ? புலாலை மிகவும் குதறிக் கலந்ததும், ஒலிக்கின்ற மணியுடனே புதிய மலர்களைத் தரித்ததுமான, ஒளி வீசும் வேலை ஏந்தியவனே. புனுகு நறு மணம் வீச குற மகள் வள்ளியின் குரும்பை போன்ற மார்பகங்கள் தாக்குதலால் மொட்டு விரிந்த மலர் மாலை அணிந்த மார்பனே, பல நிறங்கள் நெருங்கியதாய், சிறப்பான சிறகுகள் பரந்து ஒளிரும் பருத்த மயிலை வாகனமாக அடைந்துள்ள குக வீரனே, வேலைப்பாட்டுக்கு ஏற்ற சிறந்த முத்து மணிகளை மூங்கில்கள் உதிர்க்கும் பழநி மலையில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே.
இலகு கனி மிஞ்சு(ம்) மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நஞ்சு(ம்) ... கனிந்த பழத்தின் சுவைக்கும் மேம்பட்ட பேச்சும், இரவில் தூங்கும் இரண்டு கண்கள் என்னும் விஷமும், முகம் மீதே இசை முரல் சுரும்பு(ம்) இளமுலை அரும்பு(ம்) ... முகத்தின் மேல் (முகத்தை மலரென்று நினைத்து) இசை ஒலிக்கும் வண்டும், இளம் மார்பகங்களாகிய மொட்டுக்களும், இலகிய கரும்பும் மயலாலே ... கரும்பைப் போல் விளங்கும் தோளும் (கொண்ட என் மகள்) காம மயக்கம் கொண்டு, நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர் நொந்து ... நிலவின் குளிர்ச்சியும் சூடாக எரிக்க, கரு நிறம் அடைந்து, வேதனைப்பட்டு, நெகிழ்ச்சியுறும் உயிர் நொந்தும், மத வேளால் நிலை அழியு(ம்) நெஞ்சில் அவர் குடி புகுந்த நினைவொடும் இறந்து படலாமோ ... மன்மதன் காரணமாக, தனது நிலை அழிந்து போகும் மனதில், அவளது தலைவர் குடி புகுந்த நினைவு ஒன்றையே கொண்டு இவள் இறந்து படுதல் நீதியாகுமோ? புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா ... புலாலை மிகவும் குதறிக் கலந்ததும், ஒலிக்கின்ற மணியுடனே புதிய மலர்களைத் தரித்ததுமான, ஒளி வீசும் வேலை ஏந்தியவனே. புழுகு எழ மணந்த குற மகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா ... புனுகு நறு மணம் வீச குற மகள் வள்ளியின் குரும்பை போன்ற மார்பகங்கள் தாக்குதலால் மொட்டு விரிந்த மலர் மாலை அணிந்த மார்பனே, பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா ... பல நிறங்கள் நெருங்கியதாய், சிறப்பான சிறகுகள் பரந்து ஒளிரும் பருத்த மயிலை வாகனமாக அடைந்துள்ள குக வீரனே, பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே. ... வேலைப்பாட்டுக்கு ஏற்ற சிறந்த முத்து மணிகளை மூங்கில்கள் உதிர்க்கும் பழநி மலையில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே.