பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள்
அமுது பொழியும் குமுத கீதப் பாட்டிகள்
பலர் பொருள் கவர்ந்து இடைக் கலாம் இட்டு ஓட்டிகள்
கொடிது ஆய பழுது ஒழிய அன்பும் உடையாரைப் போல் சிறிது அழுது அழுது கண் பிசையும் ஆசைக் கூற்றிகள்
பகழி என வந்து படு பார்வைக் கூற்றினர்
ஒரு காம விரகம் விளைகின்ற கழு நீரைச் சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரைத் தேக்கியெ
விபுதர் பதி அங்க தலம் மேவிச் சாற்றிய தமிழ் நூலின் விததி கமழ் தென்றல் வர வீசிக் கோட்டிகள்
முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் விடி அளவு நைந்து உருகுவேனைக் காப்பதும் ஒரு நாளே
உரக பணை பந்தி அபிஷேகத் தாற்றிய சகல உலகும் தரும் அமோகப் பார்ப்பதி
உடல் உருவு பங்கு உடைய நாகக் காப்பனும்
உறி தாவும் ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய்க் குல மகளிர் சிறு தும்பு கொ(ண்)டு மோதிச் சேர்த்திடும் உரலொடு தவழ்ந்த நவநீதக் கூற்றனும்
அதி கோபக் கர விகட வெம் கட கபோலப் போர்க் கிரி கடவிய புரந்தரனும்
வேளைப் போற்றுகை கருமம் என வந்து தொழ
வேதப் பால் பதி பிறியாத கடவுளை முனிந்து அமரர் ஊரைக் காத்து
உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாயத் தோற்று எழு கடல் என உடைந்த அவுணர் ஓடத் தாக்கிய பெருமாளே.
பரத நாட்டிய வகைகளுக்கு ஏற்றதும், தாமரை மலர் போன்றதுமான பாதங்களைக் கொண்டு (நாட்டியம்) ஆடுபவர்கள். அமுதம் பொழிகின்ற குமுத மலர் போன்ற வாயினின்றும் கீதங்கள் நிறைந்த பாடல்களைப் பாடுபவர்கள். பல பேருடைய பொருள்களைக் கவர்ந்து, மத்தியில் சண்டை செய்து, (கவர்ந்த பின்பு) ஓட்டி விடுபவர்கள். பொல்லாத குற்றம் (தம்மேல்) சாராத வகைக்கு, அன்பு உள்ளவர்கள் போல சிறிதளவு அழுது கொண்டே கண்களைப் பிசைந்து ஆசை மொழிகளைப் பேசுபவர்கள். அம்பு என்று சொல்லும்படி வந்து பாய்கின்ற பார்வையை உடையவர்கள். ஒரு தலைக் காமமாகிய நோயை விளைவிக்கும் செங்கழு நீர்ப் பூவைச் சேர்த்து முடித்து, அகில், கஸ்தூரி, நிரம்ப பன்னீர் இவைகளை நிறைய அணிபவர்களாகிய விலைமாதர்கள். தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய உடம்பில் உள்ள அடையாளக் குறியை விரும்பிப் பாடிய தமிழ் நூல்களின் பரப்பின் இனிய நறு மணம் வீசும் தென்றல் காற்று வரும்படி வீசி, மக்கள் மனதை வளைப்பவர்கள் (ஆகிய இவர்களின்) மார்பகங்களில் விழுந்து பரிதாபமான வழியில் விடியும் வரை வருந்தி உருகுகின்ற என்னைக் காத்தருளும் நாள் ஒன்று உண்டோ? ஆதிசேஷனுடைய பெருமை வாய்ந்த படக் கூட்டமாகிய முடியின் மேல் தாங்கப்பட்ட எல்லா உலகங்களையும் ஈன்றருளிய மருள் இல்லாத பார்வதி தேவியை தனது உருவில் ஒரு பாகத்தில் உடையவனும், பாம்பைக் கங்கணமாக அணிந்துள்ளவனுமாகிய சிவபெருமானும், உறி மீது தாவிய ஒரு திருட்டுத் தனத்தைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவர்களாகிய ஆயர் குலப் பெண்கள் சிறு கயிறு கொண்டு மோதிக் கட்டி வைத்த உரலோடு தவழ்ந்த வெண்ணெய் திருடியவன் என்று பேசப்படுபவனாகிய கண்ணனும், மிக்க கோபத்தைக் கொண்டதும், துதிக்கையை உடையதும், அழகானதும், கொடிய மதநீர் வழியும் கன்னத்தை உடையதும், போருக்கு அமைந்ததுமான மலை போன்ற ஐராவதம் என்னும் வெள்ளை யானையைச் செலுத்தும் இந்திரனும், (இந்த மூவரும்) உன்னைத் துதித்தல் தமது கடமைச் செயலாகும் என்று உணர்ந்து வந்து வணங்க, வேதப் பிரணவத்தில் பதிப் பொருள் விளங்கப் பெறாத தேவனாகிய பிரமனைக் கோபித்தும், தேவர்கள் ஊராகிய அமராவதியைக் காத்தும், உயரமுள்ளதும், வஞ்சகம் நிறைந்துள்ளதுமான கிரவுஞ்ச மலை மாண்டு அழிந்து தோல்வி அடைந்து, ஏழு கடல்களும் பெருக்கு எழுந்தது போல் சிதறுண்டு, அசுரர்கள் யாவரும் போர்க்களத்தை விட்டு ஓட்டம் பிடிக்கும்படி எதிர்த்து மோதிய பெருமாளே.
பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள் ... பரத நாட்டிய வகைகளுக்கு ஏற்றதும், தாமரை மலர் போன்றதுமான பாதங்களைக் கொண்டு (நாட்டியம்) ஆடுபவர்கள். அமுது பொழியும் குமுத கீதப் பாட்டிகள் ... அமுதம் பொழிகின்ற குமுத மலர் போன்ற வாயினின்றும் கீதங்கள் நிறைந்த பாடல்களைப் பாடுபவர்கள். பலர் பொருள் கவர்ந்து இடைக் கலாம் இட்டு ஓட்டிகள் ... பல பேருடைய பொருள்களைக் கவர்ந்து, மத்தியில் சண்டை செய்து, (கவர்ந்த பின்பு) ஓட்டி விடுபவர்கள். கொடிது ஆய பழுது ஒழிய அன்பும் உடையாரைப் போல் சிறிது அழுது அழுது கண் பிசையும் ஆசைக் கூற்றிகள் ... பொல்லாத குற்றம் (தம்மேல்) சாராத வகைக்கு, அன்பு உள்ளவர்கள் போல சிறிதளவு அழுது கொண்டே கண்களைப் பிசைந்து ஆசை மொழிகளைப் பேசுபவர்கள். பகழி என வந்து படு பார்வைக் கூற்றினர் ... அம்பு என்று சொல்லும்படி வந்து பாய்கின்ற பார்வையை உடையவர்கள். ஒரு காம விரகம் விளைகின்ற கழு நீரைச் சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரைத் தேக்கியெ ... ஒரு தலைக் காமமாகிய நோயை விளைவிக்கும் செங்கழு நீர்ப் பூவைச் சேர்த்து முடித்து, அகில், கஸ்தூரி, நிரம்ப பன்னீர் இவைகளை நிறைய அணிபவர்களாகிய விலைமாதர்கள். விபுதர் பதி அங்க தலம் மேவிச் சாற்றிய தமிழ் நூலின் விததி கமழ் தென்றல் வர வீசிக் கோட்டிகள் ... தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய உடம்பில் உள்ள அடையாளக் குறியை விரும்பிப் பாடிய தமிழ் நூல்களின் பரப்பின் இனிய நறு மணம் வீசும் தென்றல் காற்று வரும்படி வீசி, மக்கள் மனதை வளைப்பவர்கள் (ஆகிய இவர்களின்) முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் விடி அளவு நைந்து உருகுவேனைக் காப்பதும் ஒரு நாளே ... மார்பகங்களில் விழுந்து பரிதாபமான வழியில் விடியும் வரை வருந்தி உருகுகின்ற என்னைக் காத்தருளும் நாள் ஒன்று உண்டோ? உரக பணை பந்தி அபிஷேகத் தாற்றிய சகல உலகும் தரும் அமோகப் பார்ப்பதி ... ஆதிசேஷனுடைய பெருமை வாய்ந்த படக் கூட்டமாகிய முடியின் மேல் தாங்கப்பட்ட எல்லா உலகங்களையும் ஈன்றருளிய மருள் இல்லாத பார்வதி தேவியை உடல் உருவு பங்கு உடைய நாகக் காப்பனும் ... தனது உருவில் ஒரு பாகத்தில் உடையவனும், பாம்பைக் கங்கணமாக அணிந்துள்ளவனுமாகிய சிவபெருமானும், உறி தாவும் ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய்க் குல மகளிர் சிறு தும்பு கொ(ண்)டு மோதிச் சேர்த்திடும் உரலொடு தவழ்ந்த நவநீதக் கூற்றனும் ... உறி மீது தாவிய ஒரு திருட்டுத் தனத்தைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவர்களாகிய ஆயர் குலப் பெண்கள் சிறு கயிறு கொண்டு மோதிக் கட்டி வைத்த உரலோடு தவழ்ந்த வெண்ணெய் திருடியவன் என்று பேசப்படுபவனாகிய கண்ணனும், அதி கோபக் கர விகட வெம் கட கபோலப் போர்க் கிரி கடவிய புரந்தரனும் ... மிக்க கோபத்தைக் கொண்டதும், துதிக்கையை உடையதும், அழகானதும், கொடிய மதநீர் வழியும் கன்னத்தை உடையதும், போருக்கு அமைந்ததுமான மலை போன்ற ஐராவதம் என்னும் வெள்ளை யானையைச் செலுத்தும் இந்திரனும், வேளைப் போற்றுகை கருமம் என வந்து தொழ ... (இந்த மூவரும்) உன்னைத் துதித்தல் தமது கடமைச் செயலாகும் என்று உணர்ந்து வந்து வணங்க, வேதப் பால் பதி பிறியாத கடவுளை முனிந்து அமரர் ஊரைக் காத்து ... வேதப் பிரணவத்தில் பதிப் பொருள் விளங்கப் பெறாத தேவனாகிய பிரமனைக் கோபித்தும், தேவர்கள் ஊராகிய அமராவதியைக் காத்தும், உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாயத் தோற்று எழு கடல் என உடைந்த அவுணர் ஓடத் தாக்கிய பெருமாளே. ... உயரமுள்ளதும், வஞ்சகம் நிறைந்துள்ளதுமான கிரவுஞ்ச மலை மாண்டு அழிந்து தோல்வி அடைந்து, ஏழு கடல்களும் பெருக்கு எழுந்தது போல் சிதறுண்டு, அசுரர்கள் யாவரும் போர்க்களத்தை விட்டு ஓட்டம் பிடிக்கும்படி எதிர்த்து மோதிய பெருமாளே.