இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம் இசை பட வசனம் உரைத்திட்டே பலம் இனிதோடே
இடை அது துவள குலுக்கிக் கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்கப் பூதர இள முலை குழைய அணைத்து
கேயூர மணியோடே மரகத பவளம் அழுத்திப் பூஷணம் அணி பல சிதறி நெறித்துத் தான் உக மரு மலர் புனுகு தரித்துப் பூ அணை மத ராஜன் மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என
மகிழ்வொடு ரசி(த்)து மிகுத்துக் கோதையை மருவியும் உருகி களைத்து பூமியில் உழல்வேனோ
திரிபுரம் எரிய நகைத்துக் காலனை உதைபட மதனை அழித்துச் சாகர திரை வரு கடுவை மிடற்றில் தான் அணி சிவனார் தம் திரு அருள் முருக
பெருத்துப் பாரினில் சியொதனன் மடிய மிகுத்துப் பாரத செயம் உறு அரி தன் மனத்துக்கு ஆகிய மருகோனே
நரி கழு அதுகள் களிக்கச் சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்துக் கூளிகள் நடம் இட அசுரர் குலத்துக் காலனை நிகர் ஆகி
நனி கடல் கதற பொருப்புத் தூள் எழ நணுகிய இமையவருக்குச் சீர் உற நணுகலர் மடிய தொலைத்துப் பேர் பெறு பெருமாளே.
விலைமாதர்களின் இரண்டு மார்பகங்களும் மலைகளுக்குச் சமமானவை என்று உவமை கூறி, அவர்களுடைய கண்களாகிய வலையில் வசமாக அகப்பட்டு, என் மனம் பொருந்தும் வகையில் நன்றாகவும் ஒழுங்குடனும் இனிய வார்த்தைகளைப் பேசி, இடுப்பு நெகிழும்படி குலுக்கியும், காலில் அணிந்துள்ள சிலம்பின் மணிகள் ஓசை செய்யவும், மலை போன்ற இளம் மார்பகம் குழையும்படி அணைத்து, தோளணியில் உள்ள ரத்தினங்களுடன், மரகதம் பவளம் இவைகள் பதிக்கப் பெற்ற அலங்காரமான பல மணிகளும் கலைந்து, முறிப்புண்டு கழல, வாசனை மலர்களையும் புனுகு சட்டத்தையும் அணிந்து, மலர்ப்படுக்கையில் மன்மத ராஜனுடைய சாஸ்திரப்படி பொருந்திய புணர்ச்சிக்கே இக்கலவி ஒப்பாகும் என்று, மிக்க மகிழ்ச்சியுடன் ரசித்து, பெண்களைக் கூடிப் பொருந்தியும், உடலும் மனமும் உருகிச் சோர்ந்து இந்த உலகத்தில் அலைந்து திரிவேனோ? திரிபுரங்களும் எரியும்படி சிரித்து, யமனை உதைத்து, மன்மதனை (நெற்றிக் கண்ணால் எரித்து) அழித்து, (பாற்)கடலின் அலையில் வந்த விஷத்தை கண்டத்தில் அணிந்த சிவபெருமானுடைய திருவருளால் வந்த முருகனே, மமதையுடன் விளக்கமுற்றிருந்த துரியோதனன் இறக்கும்படி, மிக நன்றாக பாரதப் போரில் வெற்றி கண்ட திருமாலுடைய மனத்துக்கு விருப்பமான மருகனே, நரி, கழுகு ஆகியவை மகிழ்வுற, ரத்தங்கள் போர்க்களம் முழுமையும் நிறைந்து, பேய்கள் நடனம் செய்யவும், அசுரர் குலத்துக்கு ஒரு யமன் போலாகி, கடல் மிகவும் கதறவும், கிரெளஞ்சம், எழு கிரி ஆகியவை பொடிபடவும், அண்டிச் சரண் புகுந்த தேவர்களுக்கு நல் வாழ்வு வரவும், நணுகாத பகைவர் இறந்து பட அவர்களை அழித்து கீர்த்தி பெற்ற பெருமாளே.
இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம் இசை பட வசனம் உரைத்திட்டே பலம் இனிதோடே ... விலைமாதர்களின் இரண்டு மார்பகங்களும் மலைகளுக்குச் சமமானவை என்று உவமை கூறி, அவர்களுடைய கண்களாகிய வலையில் வசமாக அகப்பட்டு, என் மனம் பொருந்தும் வகையில் நன்றாகவும் ஒழுங்குடனும் இனிய வார்த்தைகளைப் பேசி, இடை அது துவள குலுக்கிக் கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்கப் பூதர இள முலை குழைய அணைத்து ... இடுப்பு நெகிழும்படி குலுக்கியும், காலில் அணிந்துள்ள சிலம்பின் மணிகள் ஓசை செய்யவும், மலை போன்ற இளம் மார்பகம் குழையும்படி அணைத்து, கேயூர மணியோடே மரகத பவளம் அழுத்திப் பூஷணம் அணி பல சிதறி நெறித்துத் தான் உக மரு மலர் புனுகு தரித்துப் பூ அணை மத ராஜன் மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என ... தோளணியில் உள்ள ரத்தினங்களுடன், மரகதம் பவளம் இவைகள் பதிக்கப் பெற்ற அலங்காரமான பல மணிகளும் கலைந்து, முறிப்புண்டு கழல, வாசனை மலர்களையும் புனுகு சட்டத்தையும் அணிந்து, மலர்ப்படுக்கையில் மன்மத ராஜனுடைய சாஸ்திரப்படி பொருந்திய புணர்ச்சிக்கே இக்கலவி ஒப்பாகும் என்று, மகிழ்வொடு ரசி(த்)து மிகுத்துக் கோதையை மருவியும் உருகி களைத்து பூமியில் உழல்வேனோ ... மிக்க மகிழ்ச்சியுடன் ரசித்து, பெண்களைக் கூடிப் பொருந்தியும், உடலும் மனமும் உருகிச் சோர்ந்து இந்த உலகத்தில் அலைந்து திரிவேனோ? திரிபுரம் எரிய நகைத்துக் காலனை உதைபட மதனை அழித்துச் சாகர திரை வரு கடுவை மிடற்றில் தான் அணி சிவனார் தம் திரு அருள் முருக ... திரிபுரங்களும் எரியும்படி சிரித்து, யமனை உதைத்து, மன்மதனை (நெற்றிக் கண்ணால் எரித்து) அழித்து, (பாற்)கடலின் அலையில் வந்த விஷத்தை கண்டத்தில் அணிந்த சிவபெருமானுடைய திருவருளால் வந்த முருகனே, பெருத்துப் பாரினில் சியொதனன் மடிய மிகுத்துப் பாரத செயம் உறு அரி தன் மனத்துக்கு ஆகிய மருகோனே ... மமதையுடன் விளக்கமுற்றிருந்த துரியோதனன் இறக்கும்படி, மிக நன்றாக பாரதப் போரில் வெற்றி கண்ட திருமாலுடைய மனத்துக்கு விருப்பமான மருகனே, நரி கழு அதுகள் களிக்கச் சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்துக் கூளிகள் நடம் இட அசுரர் குலத்துக் காலனை நிகர் ஆகி ... நரி, கழுகு ஆகியவை மகிழ்வுற, ரத்தங்கள் போர்க்களம் முழுமையும் நிறைந்து, பேய்கள் நடனம் செய்யவும், அசுரர் குலத்துக்கு ஒரு யமன் போலாகி, நனி கடல் கதற பொருப்புத் தூள் எழ நணுகிய இமையவருக்குச் சீர் உற நணுகலர் மடிய தொலைத்துப் பேர் பெறு பெருமாளே. ... கடல் மிகவும் கதறவும், கிரெளஞ்சம், எழு கிரி ஆகியவை பொடிபடவும், அண்டிச் சரண் புகுந்த தேவர்களுக்கு நல் வாழ்வு வரவும், நணுகாத பகைவர் இறந்து பட அவர்களை அழித்து கீர்த்தி பெற்ற பெருமாளே.