சாவா மூவா வேளே போல்வாய்
தாள் ஆவேனுக்கு அருள் கூரும் தாதாவே ஞாதாவே கோவே
சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை ஆள் கொண்டு
ஏயா பாடா வாழ்வோர் பாலே யான் வீணே கத்திடலாமோ
பாவா நாவாய் வாணீ சார்வார்
பாராவாரத்து உரகேச பாய் மீதே சாய்வார் காணாதே
பாதாள ஆழத்து உறு பாத சே ஆம் மா ஊர் கோமான் வாழ்வே
சீமானே செச்சைய மார்பா
சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே.
சாதல் இல்லாதவனும், மூத்தல் இல்லாதவனும், மன்மதனைப் போல் என்றும் இளையவனாகவும் விளங்குவாய், உனது காலின் கீழ்ப்பட்ட எனக்கு அருள் சுரக்கும் கொடையாளியே, அறிவு மிக்கவனே, தலைவனே, உன்னைச் சார்ந்து நிற்பவர்களுக்கு உயிர் போல் விளங்குபவனே, பாணத்தைச் செலுத்துவதில் திருமாலையே நீ நிகர்ப்பாய், என்னை ஆண்டு கொண்டு எனக்குக் கொடுக்கும் திறத்தில் மேகத்துக்கு ஒப்பாவாய் (எனக் கூறி) செல்வர்களைப் பொருந்தி அடைந்து, இத்தகைய பாடல்களைக் கேட்டு வாழ்தலே குறிக்கோளாக இருப்பவர்களிடம், நானும் வீணாகக் கூச்சலிடுதல் நன்றோ? பாடல்களாக நாவிடத்தே பொருந்தும் சரஸ்வதியைச் சார்ந்துள்ள பிரமனும், பாற்கடலில் நாகராஜனாகிய ஆதிசேஷன் என்ற படுக்கை மீது துயில் கொள்ளும் திருமாலும் தம்மைக் காண முடியாதபடி, பாதாள ஆழத்தில் உற்ற திருவடியை உடையவரும், ரிஷபமாகிய நந்தியை வாகனமாகக் கொண்டு செலுத்தும் அரசருமாகிய, சிவபிரான் பெற்ற செல்வமே, செல்வப் பிரபுவே, வெட்சி மாலை அணிந்த மார்பனே, சிவகுமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே, தேவர்களின் பெருமாளே.