விடம் என அயில் என அடுவன நடுவன மிளிர்வன சுழல் விழி
வித்தைக்குப் பகர் ஒப்புச் சற்று இ(ல்)லை என்று பேசும்
விரகுடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில்
இச்சைப் பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும்
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது
கட்டிச் சிக்கென ஒத்திக் கைக்கொடு கொண்டு போயே
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி
முத்திக்குள் படு நித்யத் தத்துவம் வந்திடாதோ
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம்
அற்றுப் பொன் தலை தத்தக் கொத்தொடு நஞ்சு வாளி
எரிஎழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள்
பச்சைப் பட்சி தனைக் கைப்பற்றிடும் இந்த்ரலோகா
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடி பட
மை கண் பெற்றிடும் உக்ரக் கண் செவி அஞ்ச சூரன்
மணி முடி சிதறிட< அலகைகள் பலவுடன் வயிரவர் நடம் இட
முட்டிப் பொட்டு எழ வெட்டிக் குத்திய தம்பிரானே.
நஞ்சு போலவும் அம்பு போலவும் கொல்லும் தன்மையை உடையனவாய், யமனுக்கு ஒப்பாக விளங்குவனவாய், சுழலுகின்ற கண்களின் (மயக்கும்) வித்தைக்கு சொல்லக் கூடிய உவமைப் பொருள் ஏதும் இல்லை என்று சொல்லத்தக்க தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மனம் உருகிய பலவிதமான சிற்றின்ப லீலைகளில் ஆசைப்பட்டு, அதனால் உயிர் அலைச்சல் உற்று கலங்கி வாடுகின்ற, துன்பந் தரும் வழியில் மிகவும் அழிந்து போகின்ற தனியனாம் என்னை, யமன் அனுப்பும் தூதர் கூட்டம் கட்டி அகப்படும்படி, கைகளை இறுகப் பிணைத்து இழுத்துக் கொண்டு போய், இவனை நரகத்தில் தள்ளுங்கள் என்னும் காலம் வரும் போது, விளங்கும் நறு மணம் வீசும் நின் திருவடியாகிய முக்தி நிலையில் சேரும் அழியா இன்ப நிலை எனக்கு ஏற்படக் கூடாதோ? இடி போல் ஒலிக்கும் குரலை உடையவனும், அசுரர்களுடைய அரக்கர் குலத்துக்குத் தலைவனும் ஆகிய ராவணனுடைய இருபது திரண்ட புயங்கள் அறுந்து விழவும், அழகிய (பத்து) தலைகளும் கொத்தாகிச் சிதறி விழவும், விஷம் கொண்ட அம்பு தீயைக் கக்கும்படி செலுத்திய (கோதண்டம்) என்னும் வில்லை உடைய ராமனாகிய திருமாலின் அழகு ஒழுகும் தன்மை வாய்ந்தவளும், சிறிய தொழிலாகிய புனம் காத்தலைச் செய்தவளும் ஆகிய மகள், பச்சைக் கிளி போன்றவளுமாகிய வள்ளியை மணந்த விண்ணுலக சேனாதிபதியே, வடக்கே இருந்த (கிரவுஞ்ச மலை) இடிபட்டுப் பொடியாக, அலை வீசும் கடல் வற்றிப் போக, பெரிய மேரு மலையும் பொடி பட, கருங்கண்களை உடையதும் உக்கிரமானதுமான ஆதிசேஷன் என்னும் பாம்பு பயப்பட, சூரனுடைய ரத்ன கிரீடம் அணிந்த தலை சிதறி விழ, பேய்கள் பல சூழ்ந்து, அவற்றுடன் (சிவகணங்களான) பைரவர்கள் (போர்க்களத்தில்) நடனம் இட, (பகைவர்களைத்) தாக்கிப் பொடியாகும்படி அவர்களை வாளால் வெட்டி, வேலால் குத்திய தம்பிரானே.
விடம் என அயில் என அடுவன நடுவன மிளிர்வன சுழல் விழி ... நஞ்சு போலவும் அம்பு போலவும் கொல்லும் தன்மையை உடையனவாய், யமனுக்கு ஒப்பாக விளங்குவனவாய், சுழலுகின்ற கண்களின் வித்தைக்குப் பகர் ஒப்புச் சற்று இ(ல்)லை என்று பேசும் ... (மயக்கும்) வித்தைக்கு சொல்லக் கூடிய உவமைப் பொருள் ஏதும் இல்லை என்று சொல்லத்தக்க விரகுடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில் இச்சைப் பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும் ... தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மனம் உருகிய பலவிதமான சிற்றின்ப லீலைகளில் ஆசைப்பட்டு, அதனால் உயிர் அலைச்சல் உற்று கலங்கி வாடுகின்ற, நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது கட்டிச் சிக்கென ஒத்திக் கைக்கொடு கொண்டு போயே ... துன்பந் தரும் வழியில் மிகவும் அழிந்து போகின்ற தனியனாம் என்னை, யமன் அனுப்பும் தூதர் கூட்டம் கட்டி அகப்படும்படி, கைகளை இறுகப் பிணைத்து இழுத்துக் கொண்டு போய், நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி முத்திக்குள் படு நித்யத் தத்துவம் வந்திடாதோ ... இவனை நரகத்தில் தள்ளுங்கள் என்னும் காலம் வரும் போது, விளங்கும் நறு மணம் வீசும் நின் திருவடியாகிய முக்தி நிலையில் சேரும் அழியா இன்ப நிலை எனக்கு ஏற்படக் கூடாதோ? இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் அற்றுப் பொன் தலை தத்தக் கொத்தொடு நஞ்சு வாளி எரிஎழ முடுகிய சிலையினர் ... இடி போல் ஒலிக்கும் குரலை உடையவனும், அசுரர்களுடைய அரக்கர் குலத்துக்குத் தலைவனும் ஆகிய ராவணனுடைய இருபது திரண்ட புயங்கள் அறுந்து விழவும், அழகிய (பத்து) தலைகளும் கொத்தாகிச் சிதறி விழவும், விஷம் கொண்ட அம்பு தீயைக் கக்கும்படி செலுத்திய (கோதண்டம்) என்னும் வில்லை உடைய ராமனாகிய திருமாலின் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் பச்சைப் பட்சி தனைக் கைப்பற்றிடும் இந்த்ரலோகா ... அழகு ஒழுகும் தன்மை வாய்ந்தவளும், சிறிய தொழிலாகிய புனம் காத்தலைச் செய்தவளும் ஆகிய மகள், பச்சைக் கிளி போன்றவளுமாகிய வள்ளியை மணந்த விண்ணுலக சேனாதிபதியே, வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடி பட ... வடக்கே இருந்த (கிரவுஞ்ச மலை) இடிபட்டுப் பொடியாக, அலை வீசும் கடல் வற்றிப் போக, பெரிய மேரு மலையும் பொடி பட, மை கண் பெற்றிடும் உக்ரக் கண் செவி அஞ்ச சூரன்மணி முடி சிதறிட ... கருங்கண்களை உடையதும் உக்கிரமானதுமான ஆதிசேஷன் என்னும் பாம்பு பயப்பட, சூரனுடைய ரத்ன கிரீடம் அணிந்த தலை சிதறி விழ, அலகைகள் பலவுடன் வயிரவர் நடம் இட ... பேய்கள் பல சூழ்ந்து, அவற்றுடன் (சிவகணங்களான) பைரவர்கள் (போர்க்களத்தில்) நடனம் இட, முட்டிப் பொட்டு எழ வெட்டிக் குத்திய தம்பிரானே. ... (பகைவர்களைத்) தாக்கிப் பொடியாகும்படி அவர்களை வாளால் வெட்டி, வேலால் குத்திய தம்பிரானே.