தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும் சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும் புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள் பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமரும் கொண்ட லெனத்திகழுங் கண்டமு மெண்டோளுங் கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக் கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
|
1
|
கூத லிடுஞ்சடையும் கோளர வும்விரவுங் கொக்கிற குங்குளிர்மா மத்தமும் ஒத்துனதாள் ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந் துள்ளுரு காவிரசும் மோசையைப் பாடலும்நீ ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன் அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக் காத லுறத்தொழுவ தென்றுகொ லோஅடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
|
2
|
நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத் தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத் தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை வானிடை மாமதியை மாசறு சோதியனை மாருத மும்மனலும் மண்டல மும்மாய கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
|
3
|
செற்றவர் முப்புரமன் றட்ட சிலைத்தொழிலார் சேவக முந்நினைவார் பாவக முந்நெறியும் குற்றமில் தன்னடியார் கூறு மிசைப்பரிசும் கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும் மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக் கற்றன வும்பரவிக் கைதொழ லென்று கொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
|
4
|
கொல்லை விடைக்குழகுங் கோல நறுஞ்சடையிற் கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால் மோக மிகுத்திலகுங் கூறுசெ யெப்பரிசும் தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந் திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார் கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
|
5
|
Go to top |
பண்ணுத லைப்பயனார் பாடலும் நீடுதலும் பங்கய மாதனையார் பத்தியு முத்தியளித் தெண்ணுத லைப்பெருமான் என்றெழு வாரவர்தம் மேசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி நண்ணுத லைப்படுமா றெங்ஙன மென்றயலே நையுறு மென்னைமதித் துய்யும்வ ணம்மருளுங் கண்ணுத லைக்கனியைக் காண்பது மென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
|
6
|
மாவை யுரித்ததள்கொண் டங்க மணிந்தவனை வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை மூவ ருருத்தனதாம் மூல முதற்கருவை மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப் பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப் பால்நறு நெய்தயிர்ஐந் தாடு பரம்பரனைக் காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
|
7
|
தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத் தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ் சுண்ட தனுக்கிறவா தென்று மிருந்தவனை ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும் ஆதியை மேதகுசீ ரோதியை வானவர்தம் கண்டனை யன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
|
8
|
நாதனை நாதமிகுத் தோசைய தானவனை ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும் பற்றுவி டாதவனைக் குற்றமில் கொள்கையனைத் தூதனை யென்றனையாள் தோழனை நாயகனைத் தாழ்மக ரக்குழையுந் தோடு மணிந்ததிருக் காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
|
9
|
கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால் உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும் ஒண்பொழில் நாவலர்கோ னாகிய ஆரூரன் பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே
|
10
|
Go to top |