பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவ ளோடு மருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் மடிகள் திருவ னார்பணிந் தேத்துந் திகழ்திரு வாஞ்சியத் துறையும் ஒருவனார் அடி யாரை ஊழ்வினை நலியஒட் டாரே
|
1
|
தொறுவில் ஆன்இள ஏறு துண்ணென இடிகுரல் வெருவிச் செறுவில் வாளைகள் ஓடச் செங்கயல் பங்கயத் தொதுங்கக் கறுவி லாமனத் தார்கள் காண்தகு வாஞ்சியத் தடிகள் மறுவி லாதவெண் ணீறு பூசுதல் மன்னும்ஒன் றுடைத்தே
|
2
|
தூர்த்தர் மூவெயில் எய்து சுடுநுனைப் பகழிய தொன்றால் பார்த்த னார்திரள் தோள்மேற் பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித் தீர்த்த மாமலர்ப் பொய்கைத் திகழ்திரு வாஞ்சியத் தடிகள் சாத்து மாமணிக் கச்சங் கொருதலை பலதலை யுடைத்தே
|
3
|
சள்ளை வெள்ளையங் குருகு தானது வாமெனக் கருதி வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகிஓர் வாளையின் வாயில் துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத் துறைமல்கு வாஞ்சியத் தடிகள் வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம்ஒன் றொழிகிலர் தாமே
|
4
|
மைகொள் கண்டர்எண் தோளர் மலைமக ளுடனுறை வாழ்க்கைக் கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர் கைதை நெய்தலங் கழனி கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள் பைதல் வெண்பிறை யோடு பாம்புடன் வைப்பது பரிசே
|
5
|
Go to top |
கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப் பரந்த பாரிடஞ் சூழ வருவர்நம் பரமர்தம் பரிசால் திருந்து மாடங்கள் நீடு திகழ்தரு வாஞ்சியத் துறையும் மருந்த னார்அடி யாரை வல்வினை நலியஒட் டாரே
|
6
|
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளையங் கண்ணார் குருவி யாய்கிளி சேர்ப்பக் குருகினம் இரிதரு கிடங்கில் பருவ ரால்குதி கொள்ளும் பைம்பொழில் வாஞ்சியத் துறையும் இருவ ரால்அறி யொண்ணா இறைவன தறைகழல் சரணே
|
7
|
களங்க ளார்தரு கழனி அளிதரக் களிதரு வண்டு உளங்க ளார்கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடுங் காட்சி குளங்க ளால்நிழற் கீழ்நற் குயில்பயில் வாஞ்சியத் தடிகள் விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினைநலி விலரே
|
8
|
வாழை யின்கனி தானும் மதுவிம்மு வருக்கையின் சுளையும் கூழை வானரந் தம்மிற் கூறிது சிறிதெனக் குழறித் தாழை வாழையந் தண்டாற் செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள் ஏழை பாகனை யல்லால் இறையெனக் கருதுதல் இலமே
|
9
|
செந்நெ லங்கலங் கழனித் திகழ்திரு வாஞ்சியத் துறையு மின்ன லங்கலஞ் சடையெம் மிறைவன தறைகழல் பரவும் பொன்ன லங்கல்நன் மாடப் பொழிலணி நாவல்ஆ ரூரன் பன்ன லங்கனன் மாலை பாடுமின் பத்தரு ளீரே
|
10
|
Go to top |