சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச் சுடராழி நெடுமாலுக் கருள் செய்தானை அல்லானைப் பகலானை அரியான் தன்னை அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும் நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
|
1
|
பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் தன்னைப் பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில் மதியாகி மதிசடைமேல் வைத்தான் தன்னை நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் தன்னை நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும் நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
|
2
|
மூவாதி யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல்நடுவு முடிவா னானைத் தேவாதி தேவர்கட்குந் தேவன் தன்னைத் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் தன்னை ஆவாத அடலேறொன் றுடையான் தன்னை அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற நாவானை நாவினில்நல் லுரையா னானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
|
3
|
செம்பொன்னை நன்பவளந் திகழும் முத்தைச் செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற கம்பனையெங் கயிலாய மலையான் தன்னைக் கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும் நம்பனையெம் பெருமானை நாதன் தன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
|
4
|
புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப் புரிசடைமேற் புனலடைத்த புனிதன் தன்னை விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை வெண்ணீறு செம்மேனி விரவி னானை வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் தன்னை வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை நரைவிடைநற் கொடியுடைய நாதன் தன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
|
5
|
Go to top |
பிறவாதும் இறவாதும் பெருகி னானைப் பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை மறவாத மனத்தகத்து மன்னி னானை மலையானைக் கடலானை வனத்து ளானை உறவானைப் பகையானை உயிரா னானை உள்ளானைப் புறத்தானை ஓசை யானை நறவாரும் பூங்கொன்றை சூடி னானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
|
6
|
தக்கனது வேள்விகெடச் சாடி னானைத் தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக் கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக் கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை அறுமுகனோ டானைமுகற் கப்பன் தன்னை நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
|
7
|
அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் தன்னை அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத் திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச் சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை நரிவிரவு காட்டகத்தி லாட லானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
|
8
|
ஆலாலம் மிடற்றணியா அடக்கி னானை ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப் பாலாகித் தேனாகிப் பழமு மாகிப் பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி வேள்வியினின் பயனாய விமலன் தன்னை நாலாய மறைக்கிறைவ னாயி னானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
|
9
|
மீளாத ஆளென்னை உடையான் தன்னை வெளிசெய்த வழிபாடு மேவி னானை மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து வன்கூற்றி னுயிர்மாள உதைத்தான் தன்னைத் தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன் தோள்வலியுந் தாள் வலியுந் தொலைவித் தாங்கே நாளோடு வாள்கொடுத்த நம்பன் தன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
|
10
|
Go to top |