கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில் மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
|
1
|
காய்ந்தா யனங்க னுடலம் பொடிபடக் காலனைமுன் பாய்ந்தா யுயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி ஆய்ந்தாய்ந் தறுப்பா யடியேற் கருளாயுன் னன்பர்சிந்தை சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
|
2
|
பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி அத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம் சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
|
3
|
நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன் றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய் வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன் செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
|
4
|
கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியில் தெருவிற் புகுந்தேன் றிகைத்தடி யேனைத் திகைப்பொழிவி உருவிற் றிகழு முமையாள் கணவா விடிற்கெடுவேன் திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
|
5
|
Go to top |
வெம்மை நமன்றமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மையுன் றாளென்றன் னெஞ்சத் தெழுதிவை யீங்கிகழில் அம்மை யடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார் செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
|
6
|
விட்டார் புரங்க ளொருநொடி வேவவொர் வெங்கணையால் சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும் மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளும் சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
|
7
|
இகழ்ந்தவன் வேள்வி யழித்திட் டிமையோர் பொறையிரப்ப நிகழ்ந்திட வன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா புகழ்ந்த வடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய் திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
|
8
|
தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன் எக்காத லெப்பய னுன்றிற மல்லா லெனக்குளதே மிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னும் திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
|
9
|
பொறித்தே ரரக்கன் பொருப்பெடுப்புற்றவன் பொன்முடிதோள் இறத்தா ளொருவிர லூன்றிட் டலற விரங்கியொள்வாள் குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய் செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
|
10
|
Go to top |