மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரு மரவோடும் பன்னு லாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர் பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர் உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே.
|
1
|
நீரு லாவிய சடையிடை யரவொடு மதிசிர நிரைமாலை வாரு லாவிய வனமுலை யவளொடு மணிசிலம் பவையார்க்க ஏரு லாவிய விறைவன துறைவிட மெழில்திகழ் கீழ்வேளூர் சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் பிணியொடு வினைபோமே.
|
2
|
வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு வெள்ளெருக் கலர்மத்தம் பண்ணி லாவிய பாடலோ டாடலர் பயில்வுறு கீழ்வேளூர்ப் பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் கோயிலெம் பெருமானை உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையா ருலகினி லுள்ளாரே.
|
3
|
சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் தொங்கவைத் தழகாக நாடு லாவிய பலிகொளு நாதனார் நலமிகு கீழ்வேளூர்ப் பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் கோயிலுட் பிரியாது நீடு லாவிய நிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே.
|
4
|
துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை வடமணி சிரமாலை மன்று லாவிய மாதவ ரினிதியன் மணமிகு கீழ்வேளூர் நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் நிமலனை நினைவோடும் சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.
|
5
|
Go to top |
கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்துள்கித் தொத்து லாவிய நூலணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளூர்ப் பித்து லாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக் கோயின்மன்னு முத்து லாவிய வித்தினை யேத்துமின் முடுகிய விடர்போமே.
|
6
|
பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் வன்னியுந் துன்னாரும் கறைநி லாவிய கண்டரெண் டோளினர் காதல்செய் கீழ்வேளூர் மறைநி லாவிய வந்தணர்மலிதரு பெருந்திருக் கோயின்மன்னு நிறைநி லாவிய வீசனை நேசத்தால் நினைபவர் வினைபோமே.
|
7
|
மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை யெடுத்தலு மரக்கன்றன் தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் உறைதரு கீழ்வேளூர்க் கலைநி லாவிய நாவினர்கா தல்செய் பெருந்திருக் கோயிலுள் நிலைநி லாவிய வீசனை நேசத்தா னினையவல் வினைபோமே.
|
8
|
மஞ்சு லாவிய கடற்கிடந் தவனொடு மலரவன் காண்பொண்ணாப் பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகனைப் பரிவொடும் செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர் நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் நடலைகள் நணுகாவே.
|
9
|
சீறு லாவிய தலையினர் நிலையிலா வமணர்கள் சீவரார் வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர் ஏறு லாவிய கொடியனை யேதமில் பெருந்திருக் கோயின்மன்னு பேறு லாவிய பெருமையன் றிருவடி பேணுமின் தவமாமே.
|
10
|
Go to top |
குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை யழகமர் கீழ்வேளூர்த் திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் கோயிலெம் பெருமானை இருண்ட மேதியி னினமிகு வயன்மல்கு புகலிமன் சம்பந்தன் தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி பெறுவது திடமாமே.
|
11
|