சாகை யாயிர முடையார் சாமமு மோதுவ துடையார் ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார் தோகை மாமயி லனைய துடியிடை பாகமு முடையார் வாகை நுண்டுளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
1
|
எண்ணி லீரமு முடையா ரெத்தனை யோரிவ ரறங்கள் கண்ணு மாயிர முடையார் கையுமொ ராயிர முடையார் பெண்ணு மாயிர முடையார் பெருமையொ ராயிர முடையார் வண்ண மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
2
|
நொடியொ ராயிர முடையார் நுண்ணிய ராமவர் நோக்கும் வடிவு மாயிர முடையார் வண்ணமு மாயிர முடையார் முடியு மாயிர முடையார் மொய்குழ லாளையு முடையார் வடிவு மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
3
|
பஞ்சி நுண்டுகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார் குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார் அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையி னீருரி யுடையார் வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
4
|
பரவு வாரையு முடையார் பழித்திகழ் வாரையு முடையார் விரவு வாரையு முடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார் அரவம் பூண்பது முடையார் ஆயிரம் பேர்மிக வுடையார் வரமு மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
5
|
Go to top |
தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில் கொண்ட பூதமு முடையார் கோலமும் பலபல வுடையார் கண்டு கோடலு மரியார் காட்சியு மரியதொர் கரந்தை வண்டு வாழ்பதி யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
6
|
மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார் தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருண் மகளிர்நின் றேத்த வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
7
|
ஏழு மூன்றுமொர் தலைகள் உடையவ னிடர்பட வடர்த்து வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார் கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க வாழி சாந்தமு முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே
|
8
|
வென்றி மாமல ரோனும் விரிகடற் றுயின்றவன் றானும் என்று மேத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி முன்றின் மாமலர் வாச முதுமதி தவழ்பொழிற் றில்லை மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
9
|
மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர் குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும் வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
10
|
Go to top |
நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை இலங்கு வெண்பிறை யானை ஏத்திய தமிழிவை வல்லார் நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
|
11
|