துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன் ஒளிமண்டி யும்பர் உலகங் கடந்த உமைபங்கன் எங்க ளரனூர் களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவிற் தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே.
|
1
|
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன் அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு மரவிக்க நின்ற வரனூர் உருவத்தின் மிக்க வொளிர்சங்கொ டிப்பி யவையோத மோத வெருவித் தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் திருமுல்லை வாயி லிதுவே.
|
2
|
வாராத நாடன் வருவார்தம் வில்லின் உருமெல்கி நாளு முருகில் ஆராத வின்ப னகலாத அன்பன் அருண்மேவி நின்ற வரனூர் பேராத சோதி பிரியாத மார்பின் அலர்மேவு பேதை பிரியாள் தீராத காத னெதிநேர நீடு திருமுல்லை வாயி லிதுவே.
|
3
|
ஒன்றொன்றொ டொன்று மொருநான்கொ டைந்து மிருமூன்றொ டேழு முடனாய் அன்றின்றொ டென்று மறிவான வர்க்கும் அறியாமை நின்ற வரனூர் குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று கொடியொன்றொ டொன்று குழுமிச் சென்றொன்றொ டொன்று செறிவா னிறைந்த திருமுல்லை வாயி லிதுவே.
|
4
|
கொம்பன்ன மின்னி னிடையாளொர் கூறன் விடைநாளு மேறு குழகன் நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் மதியேறு சென்னி யரனூர் அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் அணிகோ புரங்க ளழகார் செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லை வாயி லிதுவே.
|
5
|
Go to top |
ஊனேறு வேலி னுருவேறு கண்ணி யொளியேறு கொண்ட வொருவன் ஆனேற தேறி யழகேறு நீறன் அரவேறு பூணு மரனூர் மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவித் தேனேறு மாவின் வளமேறி யாடு திருமுல்லை வாயி லிதுவே.
|
6
|
நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன் அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி யரனூர் மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் உளதென்று வைகி வரினுஞ் செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் திருமுல்லை வாயி லிதுவே.
|
7
|
வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன் முடிபத்து மிற்று நெரிய உரைவந்த பொன்னி னுருவந்த மேனி உமைபங்க னெங்க ளரனூர் வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் திரைவந்து வந்து செறிதேற லாடு திருமுல்லை வாயி லிதுவே.
|
8
|
மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன் பாலாடு மேனி கரியானு முன்னி யவர்தேட நின்ற பரனூர் காலாடு நீல மலர்துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலிற் சேலோடு வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லை வாயி லிதுவே.
|
9
|
பனைமல்கு திண்கை மதமா வுரித்த பரமன்ன நம்பன் அடியே நினைவன்ன சிந்தை யடையாத தேரர் அமண்மாய நின்ற வரனூர் வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு முகுளங்க ளெங்கு நெரியச் சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு திருமுல்லை வாயி லிதுவே.
|
10
|
Go to top |
அணிகொண்ட கோதை யவணன்று மேத்த வருள்செய்த வெந்தை மருவார் திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி திருமுல்லை வாயி லிதன்மேல் தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான மிகுபந்தன் ஒண் தமிழ்களின் அணிகொண்ட பத்து மிசைபாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே.
|
11
|