காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப் பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி மாயச் சூரன் றறுத்த மைந்தன் றாதைதன் மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.
|
1
|
பூவார் சடையின் முடிமேற் புனல ரனல்கொள்வர் நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.
|
2
|
பொன்னேர் கொன்றை மாலை புரளு மகலத்தான் மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத் தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார் அந்நே ரிமையோ ருலக மெய்தற் கரிதன்றே.
|
3
|
வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப் பாக முமையோ டாகப் படிதம் பலபாட நாக மரைமே லசைத்து நடமா டியநம்பன் மேக முரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.
|
4
|
விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம் படையார் பூதஞ் சூழப் பாட லாடலார் பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார் விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே.
|
5
|
Go to top |
குளிருஞ் சடைகொண் முடிமேற் கோல மார்கொன்றை ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி நளிரும் மணிசூழ் மாலை நட்ட நவினம்பன் மிளிரும் மரவ முடையான் மீயச் சூரானே.
|
6
|
நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார் கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார் காலர் கழலர் கரியி னுரியர் மழுவாளர் மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.
|
7
|
புலியி னுரிதோ லாடை பூசும் பொடிநீற்றர் ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தா ருமையஞ்ச வலிய திரடோள் வன்க ணரக்கர் கோன்றன்னை மெலிய வரைக்கீ ழடர்த்தார் மீயச் சூராரே.
|
8
|
காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார் போதி லவனு மாலுந் தொழப்பொங் கெரியானார் கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.
|
9
|
கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக் கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார் பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லா விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.
|
10
|
Go to top |
வேட முடைய பெருமா னுறையு மீயச்சூர் நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன் பாட லாய தமிழீ ரைந்து மொழிந்துள்கி ஆடு மடியா ரகல்வா னுலகம் அடைவாரே.
|
11
|