வரும்பு னற்பொன்னி நாட்டொரு வாழ்பதி
சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென்க ணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்சொரி யுங்கண மங்கலம்.
|
1
|
செந்நெ லார்வயற் கட்டசெந் தாமரை
முன்னர் நந்துமிழ் முத்தம் சொரிந்திடத்
துன்னு மள்ளர்கைம் மேற்கொண்டு தோன்றுவார்
மன்னு பங்கய மாநிதி போன்றுளார்.
|
2
|
வளத்தில் நீடும் பதியதன் கண்வரி
உளர்த்தும் ஐம்பா லுடையோர் முகத்தினும்
களத்தின் மீதுங் கயல்பாய் வயல்அயல்
குளத்தும் நீளுங் குழையுடை நீலங்கள்.
|
3
|
அக்கு லப்பதி தன்னில் அறநெறித்
தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்
தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய
மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்.
|
4
|
தாய னாரெனும் நாமந் தரித்துளார்
சேய காலந் தொடர்ந்தும் தெளிவிலா
மாய னார்மண் கிளைத்தறி யாதஅத்
தூய நாண்மலர்ப் பாதந் தொடர்ந்துளார்.
|
5
|
| Go to top |
மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெல் இன்னமு தோடுசெங் கீரையும்
மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
தன்ன வென்றும் அமுதுசெய் விப்பரால்.
|
6
|
இந்த நன்னிலை இன்னல்வந் தெய்தினும்
சிந்தை நீங்காச் செயலின் உவந்திட
முந்தை வேத முதல்வ ரவர்வழி
வந்த செல்வம் அறியாமை மாற்றினார்.
|
7
|
மேவு செல்வங் களிறுண் விளங்கனி
ஆவ தாகி அழியவும் அன்பினால்
பாவை பாகர்க்கு முன்பு பயின்றஅத்
தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார்.
|
8
|
அல்லல் நல்குர வாயிடக் கூலிக்கு
நெல்ல றுத்துமெய்ந் நீடிய அன்பினால்
நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்
கொல்லை யின்னமு தாக்கொண் டொழுகுவார்.
|
9
|
சாலி நேடி அறுத்தவை தாம்பெறும்
கூலி யெல்லாந் திருவமு தாக்கொண்டு
நீல நெல்லரி கூலிகொண் டுண்ணுநாள்
மால யற்கரி யாரது மாற்றுவார்.
|
10
|
| Go to top |
நண்ணிய வயல்கள் எல்லாம்
நாடொறும் முன்னங் காண
வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி
ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி
கொண்டிஃ தடியேன் செய்த
புண்ணிய மென்று போத
அமுதுசெய் விப்பா ரானார்.
|
11
|
வைகலும் உணவி லாமை
மனைப்படப் பையினிற் புக்கு
நைகர மில்லா அன்பின்
நங்கையார் அடகு கொய்து
பெய்கலத் தமைத்து வைக்கப் பெருந்தகை யருந்தித் தங்கள்
செய்கடன் முட்டா வண்ணந்
திருப்பணி செய்யும் நாளில்.
|
12
|
மனைமருங் கடகு மாள
வடநெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க
அமுதுசெய் தன்ப னாரும்
வினைசெயல் முடித்துச் செல்ல
மேவுநா ளொருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க் கங்கு
நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்.
|
13
|
முன்புபோல் முதல்வ னாரை
அமுதுசெய் விக்க மூளும்
அன்புபோல் தூய செந்நெல்
அரிசிமா வடுமென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர்
கூடையிற் சுமந்து போகப்
பின்புபோம் மனைவி யார்ஆன்
பெற்றஅஞ் சேந்திச் சென்றார்.
|
14
|
போதரா நின்ற போது
புலர்ந்துகால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார்
மட்கல மூடு கையால்
காதலால் அணைத்தும் எல்லாங்
கமரிடைச் சிந்தக் கண்டு
பூதநா யகர்தந் தொண்டர்
போவதங் கினிஏன் என்று.
|
15
|
| Go to top |
நல்லசெங் கீரை தூய
மாவடு அரிசி சிந்த
அல்லல்தீர்த் தாள வல்லார்
அமுதுசெய் தருளும் அப்பே
றெல்லையில் தீமை யேனிங்
கெய்திடப் பெற்றி லேனென்
றொல்லையி லரிவாள் பூட்டி
ஊட்டியை அரிய லுற்றார்.
|
16
|
ஆட்கொள்ளும் ஐயர் தாமிங்
கமுதுசெய் திலர்கொ லென்னாப்
பூட்டிய அரிவாள் பற்றிப்
புரையற விரவு மன்பு
காட்டிய நெறியி னுள்ளந்
தண்டறக் கழுத்தி னோடே
ஊட்டியும் அரியா நின்றார்
உறுபிறப் பரிவார் ஒத்தார்.
|
17
|
மாசறு சிந்தை யன்பர்
கழுத்தரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற
அம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையும்
மாவடு விடேல்வி டேலென்
றோசையுங் கமரி னின்றும்
ஒக்கவே எழுந்த வன்றே.
|
18
|
திருக்கைசென் றரிவாள் பற்றுந்
திண்கையைப் பிடித்த போது
வெருக்கொடங் கூறு நீங்க
வெவ்வினை விட்டு நீங்கிப்
பெருக்கவே மகிழ்ச்சி நீடத்
தம்பிரான் பேணித் தந்த
அருட்பெருங் கருணை நோக்கி
அஞ்சலி கூப்பி நின்று.
|
19
|
அடியனேன் அறிவி லாமை
கண்டும்என் னடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங்
கமுதுசெய் பரனே போற்றி
துடியிடை பாக மான
தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனிப்
புரிசடைப் புராண போற்றி.
|
20
|
| Go to top |
என்றவர் போற்றி செய்ய
இடபவா கனராய்த் தோன்றி
நன்றுநீ புரிந்த செய்கை
நன்னுத லுடனே கூட
என்றும்நம் உலகில் வாழ்வாய்
என்றவ ருடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர்
மழவிடை உகைத்துச் சென்றார்.
|
21
|
பரிவுறு சிந்தை யன்பர்
பரம்பொரு ளாகி யுள்ள
பெரியவ ரமுது செய்யப்
பெற்றிலே னென்று மாவின்
வரிவடு விடேலெ னாமுன்
வன்கழுத் தரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட் டாயர்
ஆயினார் தூய நாமம்.
|
22
|
முன்னிலை கமரே யாக
முதல்வனார் அமுது செய்யச்
செந்நெலின் அரிசி சிந்தச்
செவியுற வடுவி னோசை
அந்நிலை கேட்ட தொண்டர்
அடியிணை தொழுது வாழ்த்தி
மன்னும்ஆ னாயர் செய்கை
அறிந்தவா வழுத்த லுற்றேன்.
|
23
|