சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு பாலசுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாற்றறிவரதர் திருவடிகள் போற்றி
திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந் தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கி யருளுமாறு இறைவனை வேண்டி, துணிவளர்திங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான்.
இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, மூர்ச்சையிலிருந்து எழுவதற்கும், போதைப் பொருள்களிருந்து மீள ஓதவேண்டிய பதிகம்
https://www.youtube.com/watch?v=Ieof1SKHvNQ   Add audio link Add Audio
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே. 


1


கலைபுனைமானுரி தோலுடையாடை கனல்சுட ராலிவர்கண்கள்
தலையணிசென்னியர் தாரணிமார்பர் தம்மடிகள் ளிவரென்ன
அலைபுனல்பூம்பொழில் சூழ்ந்தமர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
இலைபுனைவேலரோ வேழையைவாட விடர்செய்வதோ விவரீடே.


2


வெஞ்சுடராடுவர் துஞ்சிருண்மாலை வேண்டுவர்பூண்பது வெண்ணூல்
நஞ்சடைகண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மைநயந்து
மஞ்சடைமாளிகை சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
செஞ்சுடர்வண்ணரோ பைந்தொடிவாடச் சிதைசெய்வதோ விவர்சீரே.


3


கனமலர்க்கொன்றை யலங்கலிலங்கக் கனறரு தூமதிக்கண்ணி
புனமலர்மாலை யணிந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
வனமலிவண்பொழில் சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மனமலிமைந்தரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே.


4


மாந்தர்தம்பானறு நெய்மகிழ்ந்தாடி வளர்சடை மேற்புனல்வைத்து
மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை முதிரவோர் வாய்மூரிபாடி
ஆந்தைவிழிச்சிறு பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சாந்தணிமார்பரோ தையலைவாடச் சதுர்செய்வதோ விவர்சார்வே.


5


Go to top
நீறுமெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண் ணாலுற்றுநோக்கி
ஆறதுசூடி யாடரவாட்டி யைவிரற் கோவணவாடை
பாறருமேனியர் பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
ஏறதுவேறிய ரேழையைவாட விடர்செய்வதோ விவரீடே.


6


பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.


7


ஏவலத்தால்விச யற்கருள்செய்து இராவண னையீடழித்து
மூவரிலும்முத லாய்நடுவாய மூர்த்தியை யன்றிமொழியாள்
யாவர்களும்பர வும்மெழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
தேவர்கள்தேவரோ சேயிழைவாடச் சிதைசெய்வதோ விவர்சேர்வே.


8


மேலதுநான்முக னெய்தியதில்லை கீழது சேவடிதன்னை
நீலதுவண்ணனு மெய்தியதில்லை யெனவிவர் நின்றதுமல்லால்
ஆலதுமாமதி தோய்பொழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பாலதுவண்ணரோ பைந்தொடிவாடப் பழிசெய்வதோ விவர்பண்பே.


9


நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.


10


Go to top
அகமலியன்பொடு தொண்டர்வணங்க வாச்சிரா மத்துறைகின்ற
புகைமலிமாலை புனைந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
நகைமலிதண்பொழில் சூழ்தருகாழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச் சாரகி லாவினைதானே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
1.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துணி வளர் திங்கள் துளங்கி
Tune - தக்கராகம்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)
7.014   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வைத்தனன் தனக்கே, தலையும் என்
Tune - தக்கராகம்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 1.044