பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து, மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே! மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்; இம் மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்; மைம் மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
கண் ஆய், ஏழ் உலகும் கருத்து ஆய அருத்தமும் ஆய், பண் ஆர் இன் தமிழ் ஆய், பரம் ஆய பரஞ்சுடரே! மண் ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அண்ணா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் செய்ய மலர்கள் இட, மிகு செம்மையுள் நின்றவனே! மை ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! ஐயா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி செய்யும் குறியே! நீர்மையனே! கொடி ஏர் இடையாள் தலைவா! மறி சேர் அம் கையனே! மழபாடியுள் மாணிக்கமே! அறிவே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை, வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை, சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ் பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே .