வாய்ந்தநீர் வளத்தா லோங்கி
மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்தசீர் மறையோர் வாழும்
எயிற்பதி யெறிநீர்க் கங்கை
தோய்ந்தநீள் சடையார் பண்டு
தொண்டர்மேல் வந்த கூற்றைக்
காய்ந்தசே வடியார் நீடி
யிருப்பது கடவூ ராகும்.
|
1
|
வயலெலாம் விளைசெஞ் சாலி
வரம்பெலாம் வளையின் முத்தம்
அயலெலாம் வேள்விச் சாலை
அணையெலாங் கழுநீர்க் கற்றை
புயலெலாங் கமுகின் காடப்
புறமெலாம் அதன்சீர் போற்றல்
செயலெலாந் தொழில்க ளாறே
செழுந்திருக் கடவூ ரென்றும்.
|
2
|
குடங்கையின் அகன்ற உண்கண்
கடைசியர் குழுமி யாடும்
இடம்படு பண்ணை தோறும்
எழுவன மருதம் பாடல்
வடம்புரி முந்நூல் மார்பின்
வைதிக மறையோர் செய்கைச்
சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்.
|
3
|
துங்கநீள் மருப்பின் மேதி
படிந்துபால் சொரிந்த வாவிச்
செங்கயல் பாய்ந்து வாசக்
கமலமும் தீம்பால் நாறும்
மங்குல்தோய் மாடச் சாலை மருங்கிறை யொதுங்கு மஞ்சும்
அங்கவை பொழிந்த நீரும்
ஆகுதிப் புகைப்பால் நாறும்.
|
4
|
மருவிய திருவின் மிக்க
வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின்
அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப் பிரான்கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த
சிந்தையார் ஒழுக்க மிக்கார்.
|
5
|
| Go to top |
பாலனாம் மறையோன் பற்றப்
பயங்கெடுத் தருளு மாற்றால்
மாலுநான் முகனுங் காணா
வடிவுகொண் டெதிரே வந்து
காலனார் உயிர்செற் றார்க்குக்
கமழ்ந்தகுங் குலியத் தூபம்
சாலவே நிறைந்து விம்ம
இடும்பணி தலைநின் றுள்ளார்.
|
6
|
கங்கைநீர் கலிக்கும் சென்னிக்
கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம்
பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே
வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன்
செய்பணி தவாமை யுய்த்தார்.
|
7
|
இந்நெறி ஒழுகு நாளில்
இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும்
நாடிய அடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கள் மாளப்
பயில்மனை வாழ்க்கை தன்னின்
மன்னிய சுற்றத் தோடு
மக்களும் வருந்தி னார்கள்.
|
8
|
யாதொன்றும் இல்லை யாகி
இருபக லுணவு மாறிப்
பேதுறும் மைந்த ரோடும்
பெருகுசுற் றத்தை நோக்கிக்
காதல்செய் மனைவி யார்தங் கணவனார் கலய னார்கைக்
கோதில்மங் கலநூல் தாலி
கொடுத்துநெற் கொள்ளு மென்றார்
|
9
|
அப்பொழு ததனைக் கொண்டு
நெற்கொள்வான் அவரும் போக
ஒப்பில்குங் குலியங் கொண்டோர்
வணிகனும் எதிர்வந் துற்றான்
இப்பொதி யென்கொல் என்றார்
உள்ளவா றியம்பக் கேட்டு
முப்புரி வெண்ணூல் மார்பர்
முகமலர்ந் திதனைச் சொன்னார்.
|
10
|
| Go to top |
ஆறுசெஞ் சடைமேல் வைத்த
அங்கணர் பூசைக் கான
நாறுகுங் குலியம் ஈதேல்
நானின்று பெற்றேன் நல்ல
பேறுமற் றிதன்மே லுண்டோ
பெறாப்பேறு பெற்று வைத்து
வேறினிக் கொள்வ தென்னென்
றுரைத்தெழும் விருப்பின் மிக்கார்.
|
11
|
பொன்தரத் தாரு மென்று
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்.
|
12
|
விடையவர் வீரட் டானம்
விரைந்துசென் றெய்தி என்னை
உடையவர் எம்மை யாளும்
ஒருவர்தம் பண்டா ரத்தில்
அடைவுற ஒடுக்கி யெல்லாம்
அயர்த்தெழும் அன்பு பொங்கச்
சடையவர் மலர்த்தாள் போற்றி
இருந்தனர் தமக்கொப் பில்லார்.
|
13
|
அன்பரங் கிருப்ப நம்பர்
அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத்
தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில்பல் வளனும் பொங்க
மன்பெரும் செல்வ மாக்கி
வைத்தனன் மனையில் நீட.
|
14
|
மற்றவர் மனைவி யாரும்
மக்களும் பசியால் வாடி
அற்றைநா ளிரவு தன்னில்
அயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக்
கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து செல்வங்
கண்டபின் சிந்தை செய்வார்.
|
15
|
| Go to top |
கொம்பனா ரில்ல மெங்கும்
குறைவிலா நிறைவிற் காணும்
அம்பொனின் குவையும் நெல்லும்
அரிசியும் முதலா யுள்ள
எம்பிரான் அருளாம் என்றே
இருகரங் குவித்துப் போற்றித்
தம்பெருங் கணவ னார்க்குத்
திருவமு தமைக்கச் சார்ந்தார்.
|
16
|
காலனைக் காய்ந்த செய்ய
காலனார் கலய னாராம்
ஆலுமன் புடைய சிந்தை
அடியவ ரறியு மாற்றால்
சாலநீ பசித்தாய் உன்தன்
தடநெடு மனையில் நண்ணிப்
பாலின்இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக வென்றார்.
|
17
|
கலயனார் அதனைக் கேளாக்
கைதொழு திறைஞ்சிக் கங்கை
அலைபுனற் சென்னி யார்தம்
அருள்மறுத் திருக்க அஞ்சித்
தலைமிசைப் பணிமேற் கொண்டு சங்கரன் கோயில் நின்று
மலைநிகர் மாட வீதி மருங்குதம் மனையைச் சார்ந்தார்.
|
18
|
இல்லத்தில் சென்று புக்கார்
இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று
திருமனை யாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த
விளைவெலாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான்
அருள்தர வந்த தென்றார்.
|
19
|
மின்னிடை மடவார் கூற
மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து
வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத்
தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம்
என்றுகை தலைமேற் கொண்டார்.
|
20
|
| Go to top |
பதுமநற் றிருவின் மிக்கார்
பரிகலந் திருத்திக் கொண்டு
கதுமெனக் கணவ னாரைக்
கண்ணுதற் கன்ப ரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி
மேவும்இன் அடிசில் ஊட்ட
அதுநுகர்ந் தின்பம் ஆர்ந்தார்
அருமறைக் கலய னார்தாம்.
|
21
|
ஊர்தொறும் பலிகொண் டுய்க்கும்
ஒருவன தருளி னாலே
பாரினில் ஆர்ந்த செல்வம்
உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல
செழுங்கறி தயிர்நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர அடியவர்க் குதவும் நாளில்.
|
22
|
செங்கண்வெள் ளேற்றின் பாகன்
திருப்பனந் தாளின் மேவும்
அங்கணன் செம்மை கண்டு
கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கித்தன் வேழம் எல்லாம்
பூட்டவும் நேர்நில் லாமைக்
கங்குலும் பகலும் தீராக்
கவலையுற் றழுங்கிச் செல்ல.
|
23
|
மன்னவன் வருத்தங் கேட்டு
மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தாம்
நாதனை நேரே காணும்
அந்நெறி தலைநின் றான்என்
றரசனை விரும்பித் தாமும்
மின்னெறித் தனைய வேணி
விகிர்தனை வணங்க வந்தார்.
|
24
|
மழுவுடைச் செய்ய கையர்
கோயில்கள் மருங்கு சென்று
தொழுதுபோந் தன்பி னோடும்
தொன்மறை நெறிவ ழாமை
முழுதுல கினையும் போற்ற
மூன்றெரி புரப்போர் வாழும்
செழுமலர்ச் சோலை வேலித் திருப்பனந் தாளிற் சேர்ந்தார்.
|
25
|
| Go to top |
காதலால் அரசன் உற்ற
வருத்தமுங் களிற்றி னோடும்
தீதிலாச் சேனை செய்யும்
திருப்பணி நேர்ப டாமை
மேதினி மிசையே எய்த்து
வீழ்ந்திளைப் பதுவும் நோக்கி
மாதவக் கலயர் தாமும்
மனத்தினில் வருத்தம் எய்தி.
|
26
|
சேனையும் ஆனை பூண்ட
திரளுமெய்த் தெழாமை நோக்கி
யானுமிவ் விளைப்புற் றெய்க்கும்
இதுபெற வேண்டு மென்று
தேனலர் கொன்றை யார்தம்
திருமேனிப் பூங்கச் சேய்ந்த
மானவன் கயிறு பூண்டு
கழுத்தினால் வருந்த லுற்றார்.
|
27
|
நண்ணிய ஒருமை யன்பின்
நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி
இளைத்தபின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலய னார்தம்
ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்
அமரரும் விசும்பில் ஆர்த்தார்.
|
28
|
பார்மிசை நெருங்க எங்கும்
பரப்பினர் பயில்பூ மாரி
தேர்மலி தானை மன்னன்
சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போலக்
களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர்
மலரடி தலைமேல் வைத்து
|
29
|
விண்பயில் புரங்கள் வேவ
வைதிகத் தேரின் மேருத்
திண்சிலை குனிய நின்றார்
செந்நிலை காணச் செய்தீர்
மண்பகிர்ந் தவனுங் காணா
மலரடி யிரண்டும் யாரே
பண்புடை யடியார் அல்லால்
பரிந்துநேர் காண வல்லார்.
|
30
|
| Go to top |
என்றுமெய்த் தொண்டர் தம்மை
ஏத்தியங் கெம்பி ரானுக்
கொன்றிய பணிகள் மற்றும்
உள்ளன பலவும் செய்து
நின்றவெண் கவிகை மன்னன்
நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை யாடல் செய்யும்
மலர்க்கழல் வாழ்த்தி வைகி.
|
31
|
சிலபகல் கழிந்த பின்பு
திருக்கட வூரில் நண்ணி
நிலவுதம் பணியில் தங்கி
நிகழுநாள் நிகரில் காழித்
தலைவராம் பிள்ளை யாரும்
தாண்டகச் சதுர ராகும்
அலர்புகழ் அரசும் கூட
அங்கெழுந் தருளக் கண்டு.
|
32
|
மாறிலா மகிழ்ச்சி பொங்க
எதிர்கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க்
கின்னமு தேற்கும் ஆற்றால்
ஆறுநற் சுவைகள் ஓங்க
அமைத்தவர் அருளே அன்றி
நாறுபூங் கொன்றை வேணி
நம்பர்தம் அருளும் பெற்றார்.
|
33
|
கருப்புவில் லோனைக் கூற்றைக்
காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல்
மிக்கெழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை
உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து
சிவபத நிழலில் சேர்ந்தார்.
|
34
|
தேனக்க கோதை மாதர் திருநெடுந் தாலி மாறிக்
கூனல்தண் பிறையி னார்க்குக்
குங்குலி யங்கொண் டுய்த்த
பான்மைத்திண் கலய னாரைப்
பணிந்தவர் அருளி னாலே
மானக்கஞ் சாறர் மிக்க
வண்புகழ் வழுத்த லுற்றேன்.
|
35
|
| Go to top |