கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால், கைப்பர், பாழ் புக; மற்று அது போலப் பழுது நான் உழன்று உள்-தடுமாறிப் படு சுழித்தலைப் பட்டனன்; எந்தாய்! அழுது நீ இருந்து என் செய்தி? மனனே! அங்கணா! அரனே! எனமாட்டா இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .
|
1
|
என் அப்பனே , திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே , கழுதையானது குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால் , அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி , அனைவரும் நகைப்பர் ; அது போல , அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந் தடுமாறி , வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல , இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேனாயினேன் ; ` மனமே , நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய் ` என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும் , ` அங்கணனே , அரனே ` என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு , நீ , மனம் இரங்கி , உய்யும் நெறி யொன்றை வழங்கியருளாய் . | |
நரைப்பு மூப்பொடு பிணி வரும், இன்னே; நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன்; அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன்; அஞ்சினேன், நமனார் அவர் தம்மை; உரைப்பன், நான் உன சேவடி சேர; உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே!.
|
2
|
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , நரையும் மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும் ; அவற்றால் இவ்வுடம்பு , அரைக்கப்பட்ட மஞ்சள் போல அழகிழந் தொழிவதாம் ; இவற்றை அறிந்தேனாயினும் , நன்மை இல்லாத செயல்களையே பற்றாகத் துணிந்துசெய்து இளைத்தேன் . அதனால் , கூற்றுவனுக்கு அஞ்சுதல் உடையனாயினேன் ; ஆகவே , இதுபோழ்து நான் உன் திருவடிகளை அடைய உன்னை வேண்டுவேனாயினேன் ; அறிவது அறிந்து வாழும் வாழ்க்கையைச் சிறிதும் அறியாத , ஆரவாரச் சொற்களையுடையேனாகிய எனக்கு . நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் . | |
புல்-நுனைப் பனி வெங்கதிர் கண்டால் போலும் வாழ்க்கை பொருள் இலை; நாளும் என் எனக்கு? இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன்; எந்தாய்! முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகிக் கழிந்தன, காலம்; இன்னம் என் தனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .
|
3
|
என் தந்தையே , திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே , புல்லின் நுனியில் உள்ள பனித்துளி , வெவ்வியவாகிய கிரணங்களையுடைய பகலவனை எதிர்ப்பட்டாற் போல்வதாகிய இம்மானுட வாழ்க்கை ஒரு பொருளாதல் இல்லை ; ஏனெனில் , ` இன்றைக்கு இன்பம் உளதாகும் ; நாளைக்கு இன்பம் உளதாகும் ` என்று நாள்தோறும் நினைந்து ஏமாறினேன் ; இனி மேற்றான் , எனக்கு என்ன உண்டாக இருக்கின்றது ! ஆதலால் , முன்பே உன்னுடைய செவ்விய திருவடியைச் சேர விரும்பாது , கொண்டது விடாத மூர்க்கனான நிலையிலே காலமெல்லாம் போய்விட்டன ; இப்பொழுதே எனக்கு நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் . | |
முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய, மூர்க்கன் ஆகிக் கழிந்தன, காலம்; சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்; சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்; அந்தி வெண்பிறை சூடும் எம்மானே! ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா! எந்தை! நீ எனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .
|
4
|
மாலைக்காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடிய வனே , திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே , என் தந்தையே திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , முற்பிறப்பிற் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலி னால் , அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் போயின ; நன்மை தீமைகளைச் சிந்தித்து , உலகப்பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேனாயினேன் ; உலகியலிலும் , இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு சிறிது ஈதலும் செய்தி லேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியை வழங்கியருளாய் . | |
அழிப்பர், ஐவர் புரவு உடையார்கள்; ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு, கழித்து, கால் பெய்து, போயின பின்னை, கடை முறை உனக்கே பொறை ஆனேன்; விழித்துக் கண்டனன், மெய்ப் பொருள் தன்னை; வேண்டேன், மானுட வாழ்க்கை, ஈது ஆகில்; இழித்தேன்; என் தனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .
|
5
|
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , நன்மைகளையெல்லாம் அழிப்பவராகிய ஓர் ஐவர் என்னை ஆளுதலுடையர் ; அவ் வைவரும் என்னை ஆளுதலை நன்றாகச் செய்து , ` இனி இவனாற் பயனில்லை ` என்று கழித்து , என்னைத் தங்கள் காற்கீழ்ப் போகட்டுப் போய்விட்ட பின்பு . முடிவில் உனக்கே நான் சுமையாயினேன் ; அதன்பின்பே நான் விழிப்படைந்து , உண்மையை உணர்ந்தேன் ; மானுடவாழ்க்கைதான் இத்தன்மையதே யென்றால் , இனி இதனை யான் விரும்பேன் ; இதனை மிக்க இழிவுடை யதாக உணர்ந்துவிட்டேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் . | |
| Go to top |
குற்றம் தன்னொடு குணம் பல பெருக்கி, கோல நுண் இடையாரொடு மயங்கி, கற்றிலேன், கலைகள் பல ஞானம்; கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்; பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன்; பாவியேன் பல பாவங்கள் செய்தேன்; எற்று உளேன்? எனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தைபிரானே!.
|
6
|
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , யான் , அழகிய , நுண்ணிய இடையினையுடைய மகளிரோடு கூடி மயங்கி நின்று , தீவினையும் நல்வினையுமாகிய இரு வினைகளை மிகுதியாகச் செய்தும் , மெய்ந்நூல்கள் பலவற்றிற் புகுந்து ஞானத்தை யுணராதும் மிகவுங் கொடுமையான செயல்களைச் செய்தேன் ; அதனால் , பற்றத் தக்கதொரு பற்றுக்கோடு இலனாயி னேன் ; இவ்வாறு பலவாகிய பாவங்களைச் செய்து பாவியாகிய யான் , எதன் பொருட்டு உயிர்வாழ்கின்றேன் ! எனக்கு , நீ , உய்யும் நெறி யொன்றை வழங்கியருளாய் . | |
கொடுக்க கிற்றிலேன், ஒண் பொருள் தன்னை; குற்றம் செற்றம் இவை முதல் ஆக, விடுக்க கிற்றிலேன், வேட்கையும் சினமும்; வேண்டில், ஐம்புலன் என் வசம் அல்ல; நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த, நமன்தமர் நரகத்து இடல் அஞ்சி; இடுக்கண் உற்றனன்; உய்வகை அருளாய்- இடைமருது(வ்)உறை எந்தைபிரானே!.
|
7
|
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , ஈகை வழியாகப் புகழைத் தரத்தக்க பொருளை , உலோபமும் , பகைமையும் காரணமாகப் பிறருக்குயான் கொடுக்க மாட்டேன் ; ஆசையும் , கோபமும் ஆகிய இவைகளை ஒழிக்க மாட்டேன் ; ஐம்புலன்கள்மேற் செல்கின்ற ஆசைகளை விடநினைத் தால் , யான் அவற்றின் வயத்தேனல்லது , அவை என் வயத்தன அல்ல ; அதனால் , உடல் நடுங்குதல் பொருந்தியதாகிய , ` மூப்பு ` என்பதொன்று வந்து அடைய , அப்போது இயமனது ஏவலர் என்னைக் கொண்டு சென்று நரகத்தில் இடுதலை நினைத்து அஞ்சித் துன்புறுவேனா யினேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியொன்றை வழங்கி யருளாய் . | |
ஐவகையர் அரையர் அவர் ஆகி, ஆட்சிகொண்டு, ஒரு கால் அவர் நீங்கார்; அவ் வகை அவர் வேண்டுவது ஆனால், அவர் அவர் வழி ஒழுகி, நான் வந்து செய்வகை அறியேன்; சிவலோகா! தீவணா! சிவனே! எரிஆடீ! எவ் வகை, எனக்கு உய்வகை? அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே!.
|
8
|
சிவலோகத்திற்குத் தலைவனே , நெருப்புப் போலும் நிறம் உடையவனே , சிவபெருமானே , தீயோடு நின்று ஆடுபவனே , திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , ஐவர் வேறுபட்ட தன்மையையுடைய அரசராய் என்னை ஆட்சி கொண்டு ஒருகாலும் விட்டு நீங்காதிருக்கின்றனர் . அவ்வாறு அவர் , தாம் தாம் வேறு வேறுவகையில் என்னை ஆள விரும்பினால் , யான் அவர் வழியே அவர் வேண்டுமாற்றிலெல்லாம் சென்று நடந்து , செய்வது இன்னது என்று அறிகின்றிலேன் ; எனக்கு உய்யும் நெறியாவது எந் நெறி ? அதனை வழங்கியருளாய் . | |
ஏழை மானுட இன்பினை நோக்கி, இளையவர் வயப்பட்டு இருந்து, இன்னம் வாழை தான் பழுக்கும், நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு, கூழை மாந்தர் தம் செல்கதிப் பக்கம், போகமும் பொருள் ஒன்று அறியாத ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே! .
|
9
|
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , அறிவில்லாத , மானுட இன்பத்தைக் கருதி , முன்னர்ப் பழத்தைத் தந்த வாழை , இனியும் நமக்கு அவ்வாறே தரும் என்று கருது வாரைப்போல , இளமையுடையராய் இன்பம் தந்த மகளிர் என்றும் இவ்வாறே இருந்து இன்பம் தருவர் என்று கருதும் மயக்கமாகிய வலையுள் அகப்பட்டு , அதனானே , வஞ்சனையையுடைய வலிய வினையென்னும் வலையிலும் அகப்பட்டு , அறிவு முதிராத பொது மக்கள் செல்லும் வழியிடத்து நின்று , அறிவின் இயல்பையும் , அதற்குப் புலனாய் நிற்கும் பொருளின் இயல்பையும் சிறிதும் அறியாத எளி யேனுக்கு , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் . | |
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் இரைக்கும் காவிரித் தென்கரை தன்மேல் இடைமருது(வ்) உறை எந்தைபிரானை, உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை, உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள், நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி, நாதன் சேவடி நண்ணுவர் தாமே. .
|
10
|
அரைக்கப்படுகின்ற சந்தனக் கட்டையையும் , அகிற் கட்டையையும் இருமருங்கும் தள்ளிக்கொண்டு , மலை நெல்லைத் தாளோடு மேல்இட்டுக்கொண்டு , நிறைந்து ஒலிக்கின்ற காவிரியாற்றின் தென்கரைமேல் உள்ள திருவிடைமருதூரில் எழுந் தருளியிருக்கின்ற எம் குலதேவனாகிய பெருமானைப் பாடிய , நம்பி யாரூரனாகிய எனது உணர்வு மிக்க இப்பாடல்களை , மனத்தால் விரும்பிப் பாட வல்லவர்கள் , நரைத்தலும் , மூத்தலும் , இறத்தலும் இன்றி அவ்விறைவனது செவ்விய திருவடிகளை அடைவர் ; இது திண்ணம் . | |
| Go to top |