நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும் எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .
|
1
|
அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே , என் தந்தைக்கும் பெருமானே , கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே , உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே , என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய் ; ஆதலின் , இனி அடியேன் உன்னை யன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் . | |
ஆள்-தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக் கேட்டேன், கேட்பது எல்லாம்; பிறவா வகை கேட்டொழிந்தேன்; சேட்(ட்)டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் மாட்(ட்)டே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .
|
2
|
பெருமையை யுடைய பல மாளிகைகள் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் செல்வமாய் உள்ளவனே , அடியேன் உனக்கு அடிமையாயினமையால் , உன் அடியார்க்கு அடியனாகின்ற பேற்றைப் பெற்றேன் . அதனால் , உன்பால் அடியேன் வேண்டற்பாலன பலவற்றையும் வேண்டி , இறுதியாகப் பிறவாத நிலையை வேண்டியொழிந்தேன் . இனி , என் மகிழ்ச்சி மீதூர்வால் உன்னைப் புகழ்தலன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் . | |
மோறாந்து ஓர் ஒரு கால் நினையாது இருந்தாலும், வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே! சேறு ஆர் தண் கழனித் திரு மேற்றளி உறையும் ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .
|
3
|
அடியேன் ஓரொருகால் மயக்கம் உற்று உன்னை நினையாதிருப்பினும் , நீதானே வந்து என் உள்ளத்தில் புகுந்து நினைப்பிக்கவல்ல உண்மைப் பொருளானவனே . சேறு நிறைந்த குளிர்ந்த கழனிகளை யுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற ஆண் சிங்கம் போல்பவனே . இனி , அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் . | |
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன்; எற்றால் என் குறைவு? என் இடரைத் துறந்தொழிந்தேன்; செற்றாய், மும்மதிலும்! திரு மேற்றளி உறையும் பற்றே! நுன்னை அல்லால் பணிந்து ஏத்த மாட்டேனே .
|
4
|
மூன்று மதில்களையும் அழித்தவனே , கச்சித் திரு மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற துணையானவனே , அடியேன் , என்னோடு நெருங்கிய உறவினர் பலர் உளர் என்றும் , மற்றும் சுற்றத்தார் பலர் உளர் என்றும் நினைத்து , அவர்கள் தொடர்பிலே பட்டு , உய்ந்து போகமாட்டாது நிற்கின்ற அந்நிலையைத் துறந்து , உன்னையே புகலிடமாக அடைந்தேன் . அதனால் , இப்பொழுது , எத்தன்மையதான பொருளால் , என்ன குறை அடியேனுக்கு இருக்கின்றது ? ஒன்றும் இல்லை . என் துன்பங்களையெல்லாம் அடியோடு நீக்கிவிட்டேன் . ஆதலின் இனி , உன்னையன்றிப் பிறரைப் பணிந்து புகழ்தலைச் செய்யவே மாட்டேன் . | |
எம்மான், எம் அ(ன்)னை, என்றவர் இட்டு இறந்தொழிந்தார்; மெய்ம் மால் ஆயின தீர்த்து அருள் செயும் மெய்ப்பொருளே! கைம்மா ஈர் உரியாய்! கனம் மேற்றளி உறையும் பெம்மான்! உன்னை அல்லால் பெரிது ஏத்த மாட்டேனே .
|
5
|
உடம்பு இடமாக வருகின்ற மயக்கமாயினவற்றை எல்லாம் நீக்கி , மெய்யுணர்வைத் தந்தருளுகின்ற மெய்ப்பொருளாய் உள்ளவனே , யானையை உரித்த தோலை உடையவனே , பெருமை பொருந்திய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற பெரியோனே , என்னைத் தாங்குகின்ற . ` என் தந்தை ` என்றும் , ` என் தாய் ` என்றும் சொல்லப்பட்டவர்கள் என்னை இங்குத் தனியே வைத்து விட்டு இறந்துவிட்டார்கள் ; ஆகவே , இனி , உன்னையன்றிப் பிறரை நான் பெரிய பொருளாக நினைத்துப் புகழவேமாட்டேன் . | |
| Go to top |
நானேல் உன் அடியே நினைந்தேன்; நினைதலுமே ஊன் நேர் இவ் உடலம் புகுந்தாய்; என் ஒண்சுடரே! தேனே! இன்னமுதே! திரு மேற்றளி உறையும் கோனே! உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்த மாட்டேனே .
|
6
|
எனது ஒளி பொருந்திய விளக்குப் போன்றவனே , தேன் போன்றவனே , இனிய அமுதம் போன்றவனே , கச்சித் திரு மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , நானோ எனில் , உன் திருவடியை அடைய நினைத்தேன் ; அங்ஙனம் நினைத்த அளவிலே நீ ஊன் பொருந்திய இவ்வுடலுள்ளே வந்து புகுந்துவிட்டாய் ; ஆதலின் , இத்தகைய பேரருளாளனாகிய உன்னையல்லது பிறரை அடியேன் உளங்குளிர்ந்து புகழவேமாட்டேன் . | |
கை ஆர் வெஞ்சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே, எய்தாய், மும்மதிலும் எரியுண்ண; எம்பெருமான்! செய் ஆர் பைங்கமலத் திரு மேற்றளி உறையும் ஐயா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
|
7
|
எம் பெருமானே , வயலின்கண் பரவியுள்ள பசிய தாமரைகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , நீ உன் கையின்கண் பொருந்திய கொடிய வில்லினது நாணின்மேல் அம்பைத் தொடுத்து , மூன்று மதில்களையும் தீ உண்ணும்படி எரித்தாய் ; ஆதலின் , உன்னையன்றிப் பிறரைத் தேவராக எண்ணிப் புகழவேமாட்டேன் . | |
விரை ஆர் கொன்றையினாய்! விமலா! இனி உன்னை அல்லால், உரையேன், நா அதனால், உடலில் உயிர் உள்ளளவும்; திரை ஆர் தண்கழனித் திரு மேற்றளி உறையும் அரையா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
|
8
|
நறுமணம் பொருந்திய கொன்றைமாலையை உடையவனே . தூயவனே , அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகளை யுடைய கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , அடியேன் . என் உடலில் உயிர் உள்ளவரையிலும் இனி , உன்னையன்றிப் பிறரை , ` தேவர் ` என்று என் நாவினாற் சொல்லவும் மாட்டேன் ; உன்னையன்றிப் பிறரை உயர்ந்தவராக மதித்துப் புகழவும் மாட்டேன் ; இது திண்ணம் . | |
நிலை ஆய் நின் அடியே நினைந்தேன்; நினைதலுமே; தலைவா! நின் நினையப் பணித்தாய்; சலம் ஒழிந்தேன்; சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் மலையே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .
|
9
|
சந்திர காந்தக் கற்கள் நிறைந்த பெரிய மதில் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற மலைபோன்றவனே . தலைவனே , அடியேன் , உனது திருவடியையே நிலைத்த பொருளாக உணர்ந்தேன் ; அவ்வாறு உணர்ந்த அளவிலே அவ்வாறே மாறாது என்றும் உன்னையே உணர்ந்து நிற்குமாறு எனக்கு உன் திருவருளைச் செய்தாய் ; அதனால் , அடியேன் , என் , துன்பமெல்லாம் ஒழிந்தவனாயினேன் ; ஆகவே , இனி அடியேன் , உன்னையன்றிப் பிறரை , மனம் மகிழ்ந்து புகழவேமாட்டேன் . | |
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்வாய்ச் சீர் ஊரும் புறவில்-திரு மேற்றளிச் சிவனை ஆரூரன்(ன்) அடியான்-அடித்தொண்டன், ஆரூரன்-சொன்ன சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே .
|
10
|
நிலம் முழுதும் ஆணை செல்கின்ற பல்லவனது அரசிருக்கை ஊராகிய , மதிலை உடைய காஞ்சி மாநகரின்கண் சிறப்புப் பொருந்திய இடத்தில் விளங்கும் திரு மேற்றளியின்கண் உள்ள சிவபெருமானை , திருவாரூர்ப் பெருமானுக்கு அடியவனான அணுக்கத் தொண்டனாம் நம்பியாரூரன் பாடிய , தாள அறுதி பொருந்திய இப் பாடல்களைப் பாடவல்லவர் , சிவலோகத்தை அடைவார்கள் . | |
| Go to top |