சிவய.திருக்கூட்டம்
sivaya.org

Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.020   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருக்கோளிலி (திருக்குவளை) - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலிநாதர் திருவடிகள் போற்றி
நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை மூன்று பொழுதும் வணங்கி வாழ்ந்து வரும் நாளில் திருக்கோளிலி என்னும் தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத் தில் ஒருசமயம் மழையின்மையால் நிலவளம் சுருங்கிற்று. விளை பொருள்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் மனங்கவன்று உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார். பெருமான் அவர் கனவில் தோன்றி ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம் என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது. குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் இறைவன் கருணையை எடுத்தியம்பி அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார். அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக்கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து நீளநினைந் தடியேன் என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச்செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார். இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும் என்றதோர் அருள்வாக்கு பெருமானருளால் விசும்பிடையெழுந்தது. அதுகேட்டுமகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்து பரவை யார்க்குத் தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=0caMnbm5nqY  https://www.youtube.com/watch?v=xfa2LtyZ3GU   Add audio link Add Audio

நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்;
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .

1
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே , வாள்போலுங் கண்களை யுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் . அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன் , எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன் ; வேறு யாரை வேண்டுவேன் ! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்!
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .

2
வண்டுகள் விரும்பும் கூந்தலையுடையவளாகி , ` உமை ` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே , பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எரித்த எங்கள் அந்தணனே , தெளிந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே , உலகெலாம் ஆகியவனே , அடியேன் குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; ஆதலின் , அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளை யிட்டருள் .

பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;
மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே!
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! .

3
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , எல்லார்க்கும் முன்னவனே , யாவர்க்கும் மருட்கையைத் தரத்தக்க செயல்களைச் செய்ய வல்லவனே , நீ , உன் திருமேனியில் பாதியிற்றானே , ` உமை ` என்னும் ஒரு மாதராளை வைத்தாய் ; அது வன்றி , விரிந்த சடையின்கண் , ` கங்கை ` என்னும் மற்றொரு மாத ராளையும் வைத்தாய் ; ஆதலின் , நீயும் நற்பண்புடைய பெண்டிர் தம் வாழ்க்கை முட்டுற்றவிடத்து அடையும் வருத்தத்தினது தன்மையை நன்குணர்வாயன்றே ? அதனால் உன்னை வேண்டுகின்றேன் ; அடியேன் குற்றம் இல்லாத சோலைகள் புடைசூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ?
கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

4
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , உன்னிடம் நான் எடுத்துச் சொல்ல வேண்டுவது என் உளது ? நீ , கொவ்வைக்கனிபோலும் வாயினையுடைய , ` உமை ` என்னும் நங்கையை முன்பு மணந்து , பின்பு இடப்பாகத்திலே வைத்தாய் ; அது காரணமாக உன்னை ஒரு தூற்றுதல் செய்தார் எவரேனும் உளரோ ? இல்லை ஆதலின் , எனக்கு நீ என் இல்வாழ்க்கைக்கு உரியதனைச் செய்தாலும் உன்னைத் தூற்றுவார் ஒருவரும் இல்லை . அடியேன் , சில நெற்களை , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலம் சூழ்ந்த குண்டையூரிற் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அடியேனுக்கு அந்த அல்லலை நீக்கி , அவற்றை அங்குச் சேர்த்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே!
பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா!
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்!
அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

5
முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே , சிரிப்பது போலத் தோன்றும் வெள்ளிய தலையில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தையுடையவனே , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , அடியேன் , குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . ஆதலின் , அடியேனுக்கு அத்துன்பத்தை நீக்கி , அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .
Go to top

குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே!
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே! .

6
குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய , ` உமை ` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையவனே , பாம்பைக் கட்டியுள்ளவனே , திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்கவேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித்துன்பத்தையும் அறிவாயன்றே ? அவள் பொருட்டு , அடியேன் , குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள் பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்;
வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே!
செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

7
மணம் பொருந்திய கூந்தலையுடைய உமையவளை ஒருபாகத்தில் விரும்பி வைத்துள்ளவனே , செம்பொன்னாலியன்ற மாளிகைகள் நிறைந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே , அடியேன் குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற்சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . எம் தலைவனாகிய உன்னையே எப்பொழுதும் நினைந்து துதிக்கும் தொழிலுடையேன் யான் ; வேறுயாரை வேண்டுவேன் ! என்னிடத்து அன்புடையையாய் , அவற்றை அங்குச் சேர்த்து உதவ . நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்!
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்;
குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

8
இராவணனது தலைகளையும் , கைகளையும் நெரித் திட்ட எங்கள் முதற்கடவுளே , திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே . அகன்ற அல்குலையுடையாளாகிய என் இல்லாள் பரவை தன் வாழ்க்கையை நடத்தமாட்டாது மெலிகின்றாள் ; அவள் பொருட்டு , அடியேன் , சோலைகளில் குரங்குக் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்ற குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள்பால் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; நீ இரக்க முடையையாய் , அடியேன் பொருட்டு அவற்றை அங்குச் சேர்த்து உதவ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்
கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .

9
முற்காலத்திலே உன் அளவைக்காணப் புகுந்த திருமாலும் பிரமனும் அன்னமாய் விண்ணிற்பறந்து ஓடியும் , ஏனமாய் மண்ணைப் பிளந்து நுழைந்தும் தங்களால் ஆமளவும் முயன்றும் அதனைக் காணாதவர்களேயாக , இன்றும் நின் திருவடி அவர்களால் காணுதற்கு அரிதேயாய கடவுளே , தெளிந்த அலைகளையுடைய நீரை யுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளி யிருக்கின்ற எம்பெருமானே , எல்லா உலகமும் ஆனவனே , அடியேன் , குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்த்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன்
நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே .

10
கொல்லையினது வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் விரும்பியிருக்கின்ற பெருமானை , நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான் , தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி , மனம் பொருந்திப் பாடிய இப் பத்துப் பாடல்களையும் பாடவல்லவர் , இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி , அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கோளிலி (திருக்குவளை)
1.062   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நாள் ஆய போகாமே, நஞ்சு
Tune - பழந்தக்கராகம்   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
5.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மைக் கொள் கண் உமை
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
5.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
7.020   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நீள நினைந்து அடியேன் உமை
Tune - நட்டராகம்   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலிநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000