சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.055   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கயிலாயம் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு பார்வதியம்மை உடனுறை அருள்மிகு கயிலாயநாதர் திருவடிகள் போற்றி

சிவார்ச்சனை ‌ ‌
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=7qLrT5FepJ0   Add audio link Add Audio

வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

1
விண்ணாகியும் வேறு பூதங்களாகியும் நிலை பெற்றிருப்பவனே ! அடியேனை வேற்றிடத்துக்குத் திரும்பிச் செல்லாதபடி அடிமையாகக் கொண்டவனே ! இன்ப ஊற்றாகி உயிர் அறிவினுள்ளே நிலைபெற்றிருப்பவனே ! இடையறாத சொற்களின் ஒலியே ! சக்தியாகி ஐம்பூதங்களிலும் நான்கு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் இருப்பவனே ! காற்றாகி எங்கும் கலந்தவனே ! கயிலை மலையில் உறைபவனே ! உனக்கு வணக்கங்கள் பல .

பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி!
பிறவி அறுக்கும் பிரானே, போற்றி!
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

2
பேய்களோடு கூத்தாடுதலை உகந்தவனே ! பிறவியைப் போக்கும் தலைவனே ! உயிர்களைப் பல வகையான பிறப்புக்களில் நிறுத்தி விளையாடுதலில் வல்லவனே ! விரும்பி என் உள்ளத்துப் புகுந்தவனே ! பொய்யைச் சார்பாகக் கொண்ட முப்புரங்களை அழித்தவனே ! என் சிந்தையை விடுத்துப் போகாது இருப்பவனே ! பாம்பைக் கச்சாக அணிந்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி!
உள் ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி!
தேசம் பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

3
பகைவர் மும்மதில்களையும் அழித்து , விரும்பி என் உள்ளத்துப் புகுந்து , என்னை உருவமுடையவனாகப் படைத்து , என் உயிர் உடம்பின் வழிப்படாதபடி நீக்கி நின் வழிப்படுத்து எனக்கு இன்பமாகிநின்ற செயலுடையவனாய் , உலகத்தாரால் முன்னின்று துதிக்கப்படுபவனாய் , கருவாய்க்கப் பெற்றுச் சஞ்சரிக்கும் காளமேகம் போல் உலகுக்கு நலன் தருவானாய் , உள்ள கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி!
வந்து என்தன் சிந்தை புகுந்தாய், போற்றி!
ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
தேன(த்)த்தை வார்த்த தெளிவே, போற்றி!
தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி!
கானத் தீ ஆடல் உகந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

4
தேவர் போற்றும் அமுதமாய் , வந்து என் உள்ளம் புகுந்தவனாய் , உயிர்களின் குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய் , ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய் , தேனை வடித்த தெளிவு போல்பவனாய் , தேவர்களுக்கும் தேவனாய் , சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பியவனாய் உள்ள கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி!
நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

5
ஊர்களாகவும் உலகமாவும் பரவியவனே ! அனற் பிழம்பாய் ஓங்கி உயர்ந்தவனே ! புகழ் வடிவினனாய் எங்கும் பரவியவனே ! நீங்காது என் உள்ளத்தில் புகுந்தவனே ! நீர் நிறைந்த ஓடைபோலக் குளிர்ச்சி தருபவனே ! ஒப்பற்றவனே ! கார்முகில் போல அருளவல்லவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
Go to top

சில் உரு ஆய்ச் சென்று திரண்டாய், போற்றி!
தேவர் அறியாத தேவே, போற்றி!
புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பல் உயிர் ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி!
பற்றி உலகை விடாதாய், போற்றி!
கல் உயிர் ஆய் நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6
முதற்கண் சில வேறு தேவர்களாய் நின்று அருள் வழங்கிப் பின் அத்தேவர்களும் நீ ஒருவனேயாகி ஒன்றி நின்றவனே ! தேவர்களும் அறிய முடியாத பெரிய தேவனே ! புல்லாகிய ஓரறிவு உயிருக்கும் வாழ்க்கை வழங்கியவனே ! நீங்காது என் உள்ளத்துப் புகுந்தவனே ! உலகுகள் தோறும் பல உயிர்களாக நிற்பவனே ! உலகைப் பற்றி அதனைக் கைவிடாதவனே ! கல்லின் கண்ணும் உள்ள உயிர்களாய் நிற்கும் ஒளிப்பொருளே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி!
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி!
மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி!
கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

7
பண்ணின் இசையாகி இருப்பவனே ! உன்னைத் தியானிப்பவரின் பாவத்தைப் போக்குபவனே ! எண்ணும் எழுத்தும் சொல்லும் ஆனவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! விண்ணும் தீயும் நிலனும் ஆகியவனே ! மேலார்க்கும் மேலாயவனே ! கண்ணின் மணி போன்ற அருமையானவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

இமையாது உயிராது இருந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி!
ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி!
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி!
ஆதி புராணனாய் நின்றாய், போற்றி!
கமை ஆகி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

8
ஏனைய உயிர்களைப் போல இமைக்காமல் மூச்சு விடாமல் இருப்பவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! பார்வதி பாகனே ! பல ஊழிகளையும் கடந்தவனே ! பொருந்தாத கொடிய விடத்தை உண்டவனே ! முதற் பழையோனே ! பொறுமையாகச் செயற்படும் ஞான ஒளி உடையவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி!
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி!
அல்லல் நலிய அலந்தேன், போற்றி!
காவாய்! கனகத்திரளே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

9
மூத்தலோ பிறத்தலோ இறத்தலோ இல்லாது எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டு என்றும் இயற்கையாகவே விளங்கும் தேவர் தலைவரும் தொழும் தெய்வமே ! எங்கும் பரவி யிருப்பவனே ! ஐயோ ! என்று வருந்தும் அடியேனுக்கு எல்லாமாய் இருக்கும் பெருமானே ! கனகத்திரள் போல்பவனே ! கயிலை மலையானே ! அடியேன் துயரங்கள் வருத்த வருந்துகின்றேன் . என்னைக் காப்பாயாக . உனக்கு வணக்கங்கள் பல .

நெடிய விசும்போடு கண்ணே, போற்றி!
நீள அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி!
அங்கு ஒன்று அறியாமை நின்றாய், போற்றி!
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
கடிய உருமொடு மின்னே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

10
பெரும்பரப்புடைய வானகத்திற்கு இருப்பிடமாய் , எப்பொருளின் நீள அகலங்களையும் தன்னுள் அடக்கியவனாய் , உன் அடியையும் , முடியையும் காண அரியும் , அயனும் தம்முள் மாறுபட்டு முயன்றும் அறிய முடியாமல் அனற் பிழம்பாய் நின்றவனாய்க் கொடிய வலிய கூற்றுவனை உதைத்தவனாய் , அடியேனுடைய உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டவனாய் , கொடிய இடியும் மின்னலும் ஆகியுள்ள கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .
Go to top

உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!
ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி!
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி!
இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி!
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி!
பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

11
உண்ணாது உறங்காது இருப்பவனே ! வேதங்களை ஓதாது உணர்ந்தவனே ! உன்பெருமையை நினைத்துப் பார்க்காது செயற்பட்ட இராவணனைச் சிறிதளவு விரலை அழுத்தி நசுக்கி மகிழ்ந்து , அடக்கி ஆள்பவனே ! பின் அவன்பால் பண்ணோடு கூடிய இசையின் இனிமையைச் செவிமடுத்தவனே ! முன்னரேயே அடியேனுடைய உள்ளத்தில் புகுந்தவனே ! உலகுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கயிலாயம்
1.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி கொள் உருவர், புலியின்
Tune - தக்கேசி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
3.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாள வரி கோள புலி
Tune - சாதாரி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
4.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   கனகம் மா வயிரம் உந்தும்
Tune - திருநேரிசை   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
Tune - குறிஞ்சி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொறை உடைய பூமி, நீர்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட்டு ஆன நல்ல தொடையாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
7.100   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தான் எனை முன் படைத்தான்;
Tune - பஞ்சமம்   (திருக்கயிலாயம் )
11.008   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா   திருக்கயிலாய ஞான உலா
Tune -   (திருக்கயிலாயம் )
11.009   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
Tune -   (திருக்கயிலாயம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000