மான் ஏறு கரம் உடைய வரதர் போலும்; மால்வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும்; கான் ஏறு கரி கதற உரித்தார் போலும்; கட்டங்கம், கொடி, துடி, கைக் கொண்டார் போலும்; தேன் ஏறு திரு இதழித்தாரார் போலும்; திருவீழிமிழலை அமர் செல்வர் போலும்; ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
1
|
திருவீழிமிழலையில் அமர்ந்த செல்வராய், அடியேனை ஆட்கொண்ட அடிகள் கையில் மானை ஏந்தி வரம் கொடுப்பவராய், பெரிய மலையின் இருபகுதிகளையும் வில்லாகுமாறு வளைத்தவராய், காட்டில் உலவும் யானை கதறுமாறு அதன் தோலை உரித்தவராய்க் கட்டங்கப்படை உடுக்கை இவற்றைக் கைகளில் கொண்டவராய், தேன் பொருந்திய கொன்றைப் பூ மாலையை அணிந்தவராய், காளையை இவரும் அழகராய்க் காட்சி வழங்குகிறார். | |
சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்; நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும்; நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும்; குமரனையும் மகன் ஆக உடையார் போலும்; குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும்; அமரர்கள் பின் அமுது உண, நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
2
|
குளிர்ந்த வீழிமிழலையில் விரும்பித்தங்கும் இளையவராய், அடியேனை ஆட்கொண்ட அடிகள் தம்மோடு போரிடவந்த சலந்தரன் என்ற அசுரனைச் சக்கரத்தால் பிளந்த திறமை உடையவராய், நமனை ஒரு காலால் உதைத்து அழித்தவராய், திருமாலை இடப்பாகத்துக் கொண்டவராய், முருகனையும் மகனாக உடையவராய்த் தேவர்கள் பிறகு அமுதம் உண்ணுமாறு முன்னர் அவர்களை அழிக்க வந்த நஞ்சினை உண்டவராவார். | |
நீறு அணிந்த திருமேனி நிமலர் போலும்; நேமி, நெடுமாற்கு, அருளிச் செய்தார் போலும்; ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும்; எயில் மூன்றும் எரிசரத்தால் எய்தார் போலும்; வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும்; வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும்; ஆறு அணிந்த சடா மகுடத்து அழகர் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
3
|
வியன்வீழிமிழலை உறை விகிர்தராய் அடியேனை அடிமையாகக் கொண்ட அடிகள் திருமேனியில் நீறு அணிந்த தூயோராய்த் திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கியவராய், காளை எழுதிய கொடியை உடைய என் தலைவராய், நெருப்பாகிய அம்பினால் மூன்று மதில்களையும் எய்தவராய், உலகியலுக்கு வேறாகக் கொண்ட வடிவுடைய வேடராய்ச் சடைமுடியில் கங்கையை அணிந்த அழகராய்க் காட்சி வழங்குகிறார். | |
கை வேழ முகத்தவனைப் படைத்தார் போலும்; கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்; செய் வேள்வித் தக்கனை முன் சிதைத்தார் போலும்; திசை முகன் தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும்; மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும்; வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும்; ஐவேள்வி, ஆறு அங்கம், ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
4
|
பெரிய வீழிமிழலையில் உறையும் வேறுபட்ட இயல்பினை உடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் விநாயகனைப் படைத்து அவனால் கயாசுரனைக் கொல்வித்துத் தக்கனுடைய வேள்வியையும் பிரமன் தலை ஒன்றனையும் அழித்து, யாகதேவன் தலையை அறுத்து, ஐவகை வேள்விகளும் வேதங்களின் ஆறு அங்கங்களுமாக உள்ளார். | |
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும்; சுடர் மூன்றும் சோதியும் ஆய்த் யார் போலும்; பொன் ஒத்த திருமேனிப் புனிதர் போலும்; பூதகணம் புடை சூழ வருவார் போலும்; மின் ஒத்த செஞ்சடை வெண்பிறையார் போலும்; வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும்; அன்னத்தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
5
|
பரந்த வீழிமிழலையைச் சேர்ந்த தூயோராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் கீளோடு இணைக்கப்பட்ட கோவணம் ஒன்று உடையாராய், மூன்று சுடர்களும் அவற்றின் ஒளியுமாகிய தூயவராய், பொன்னார் மேனிப் புனிதராய், பூதகணம் தம்மைச் சுற்றி வரத் தாம் வருபவராய், மின்னலை ஒத்து ஒளிவீசும் சிவந்த சடையில் பிறை சூடியவராய், அன்னத்தை வாகனமாக உடைய பிரமனுடைய மண்டையோட்டினை ஏந்திய தலைவராய் உள்ளார். | |
| Go to top |
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும்; மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும்; நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும்; நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்; வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
6
|
வியன் வீழிமிழலை அமர்ந்த விகிர்தராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் திருமாலாலும் அறிய முடியாதவராய், வரம் அருளுபவராய், தம்மை மறவாதவர் பிறவிப்பிணியைப் போக்க வல்லவராய், நான்கு வேதங்களுக்கும் தலைவராய், அஞ்செழுத்தாகிய பெயரை உடையவராய், நம்மால் விரும்பப்படுபவராய், கையில் வேலை ஏந்திய காளியைத் தாருகன் என்ற அசுரனை அழிப்பதற்காகப் படைத்தவராய், விடத்தைத்தம் கழுத்தில் அடக்கித் தேவர்களைப் பாதுகாத்தவராவர். | |
பஞ்சு அடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்; பைந்நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும்; மஞ்சு அடுத்த மணி நீல கண்டர் போலும்; வட கயிலை மலை உடைய மணாளர் போலும்; செஞ்சடைக்கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும்; திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும்; அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
7
|
திருவீழிமிழலை அமர்ந்த சிவனாராகி அடியேனை ஆட்கொண்ட அடிகள் செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்டவராய், காளமேகம் போன்ற அழகிய நீலகண்டராய், வடகயிலைத்தலைவராய், செஞ்சடையில் வெண்பிறை சூடியவராய், ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் அடியவர்களுக்கு நெருக்கத்தில் இருப்பவராய் உள்ளார். | |
குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும்; குடமூக்கில் இடம் ஆக்கிக் கொண்டார் போலும்; புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும்; புள் அரசைக் கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும்; வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும்; வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும்; அண்டத்து உப் புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
8
|
வியன் வீழிமிழலை நகருடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் சமணரிடமிருந்து அடியேனை ஆட்கொண்டவராய், குடந்தையில் உறைபவராய், அடியவர்கள் உள்ளத் தாமரையை ஆசனமாகக் கொண்டவராய், கருடனைக் கொன்று பின் அவனை உயிர்ப்பித்தவராய், வெள்ளிய மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் விகிர்தராய், அண்டங்களுக்கும் அப்பாற்பட்டவராய் உள்ளார். | |
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும்; மொய் பவளக்கொடி அனைய சடையார் போலும்; எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும்; இரு-நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்; மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
9
|
வியன்வீழிமிழலை அமர் விகிர்தராய் அடியேனை அடிமைகொண்ட அடிகள் முத்துப்போன்ற சிறிதே அரும்புகின்ற நகைப்பினையும், செறிந்த பவளக்கொடிபோன்ற சடையினையும் உடையவராய், சிறிதளவு, தம்பால் பக்தி உடையவருக்கும் இனியராய், அட்டமூர்த்த உருவினராய், நண்பனாகிய குபேரனிடம் விருப்பு உடையவராய், அடியேனுக்குத் தந்தையும் தாயும் ஆவார். | |
கரி உரி செய்து உமை வெருவக் கண்டார் போலும்; கங்கையையும் செஞ்சடை மேல் கரந்தார் போலும்; எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும்; ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும்; விரி கதிரோர் இருவரை முன் வெகுண்டார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும்; அரி பிரமர் துதி செய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
10
|
பரந்த வீழிமிழலையில் விரும்பித்தங்கிய தூயராய், அடியேனை ஆளுடைய அடிகள், பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலை உரித்துப் போர்த்துக் கங்கையையும் சிவந்த சடையில் மறைத்து, அக்கினி தேவனுடைய ஒரு கையை நீக்கிய தலைவராய்ப் பன்றியின் கூரிய பல்லை அணிகலனாகப் பூண்டு, சந்திரன் சூரியன் என்ற இருவரையும் தக்கன் வேள்விக்களத்தில் வெகுண்டு ஒறுத்துத் திருமாலும் பிரமனும் தம்மைத் தோத்திரிக்க அவர்களுக்கு அருள் செய்தவர். | |
| Go to top |
கயிலாயமலை எடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும்; குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்து ஆட வல்ல குழகர் போலும்; வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; அயில் ஆய மூ இலைவேல் படையார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
|
11
|
வீழிமிழலை அமர் விகிர்தராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் கதறிக்கொண்டு விழுமாறு அவனைக் கால் விரலால் நசுக்கிப்பின் அவனுக்கு அருள் செய்தவராய், குயில்போன்ற இனிய சொற்களை உடைய உமையம்மை மனம் குளிர்ந்து காணுமாறு கூத்தாடுதலில் வல்ல இளையராய்ப் பகலவன்போல ஏனைய ஒளிகளைத் தாழ்த்தித் தாம் ஒளி வீசுபவராய்க் கூர்மையான முத்தலைச் சூலப்படையுடையவராய் இருக்கின்றார். | |