திருவே, என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே, செழுஞ்சுடர் நல் சோதி மிக்க உருவே, என் உறவே, என் ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே, என் கற்பகமே, கண்ணே, கண்ணின் கருமணியே, மணி ஆடு பாவாய், காவாய், அருஆய வல்வினைநோய் அடையா வண்ணம்! ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
|
1
|
நல்லூழே ! என் செல்வமே ! வானோர்க்குப் புகழ் உண்டாக ஆற்றலை அருளும் ஞானமே ! அடியார்க்குத்திருக்காட்சி வழங்கும் பெரிய சோதியே ! என் கற்பகமாகவும் உறவாகவும் , உடலாகவும் உள்ளமாகவும் உள்ளத்தின் உணர்வாகவும் கண்ணாகவும் கண்ணின் கருமணியாகவும் கருமணியின் பாவையாகவும் செயற்படும் ஆவடுதுறையிலுள்ள தேவர் தலைவனே ! வடிவு புலப்படாத என் வல்வினை நோய் என்னைத் தாக்காதபடி காப்பாயாக . | |
மாற்றேன், எழுத்து அஞ்சும் என்தன் நாவில்; மறவேன், திருவருள்கள்; வஞ்சம் நெஞ்சின் ஏற்றேன்; பிற தெய்வம் எண்ணா நாயேன், எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்; மேல்-தான் நீ செய்வனகள் செய்யக் கண்டு, வேதனைக்கே இடம் கொடுத்து, நாளும் நாளும் ஆற்றேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
|
2
|
திருவைந்தெழுத்தை என் நாவிலிருந்து நீக்கேன் , திருவருள்களை என் நெஞ்சினால் மறவேன் . எண்ணினால் எம்பெருமான் திருவடிகளையே எண்ணுவதல்லால் பிற தெய்வங்களை எண்ணா நாயேன் அத்தெய்வங்களை என் நெஞ்சில் ஏலேன் . என்மேல் நீ செய்யும் செயல்களைக் கண்டு வேதனைப் பட்டு நானும் பொறுக்க இயலாதவனாக உள்ளேன் . ஆவடுதுறையில் உறையும் தேவர் தலைவனே ! அடியேனை அஞ்சேல் என்று அருளுவாயாக . | |
வரை ஆர் மடமங்கை பங்கா! கங்கை-மணவாளா! வார்சடையாய்! நின்தன் நாமம் உரையா, உயிர் போகப் பெறுவேன் ஆகில், உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே? கரையா, நினைந்து, உருகி, கண்ணீர் மல்கி, காதலித்து, நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு அரையா! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
|
3
|
பார்வதி பாகனே ! கங்கையைச் சடையில் தரித்தமணவாளா ! உன் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே உயிர் நீங்கப் பெறுவேனாயின் மிக்க நோய்கள் எத்தனையும் என்னை அடைந்து என் செய்ய முடியும் ? கரைந்து நினைந்து உருகிக் கண்ணீர் வடித்துக் காதலித்து உன் திருவடிகளே துதிக்கும் அன்பர்களுக்கு அரசே ! ஆவடுதுறை உறையும் அமரர் ஏறே ! அடியேனை அஞ்சேல் என்று அருளுவாயாக . | |
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கிக் கலித்து ஆங்கு இரும்பிடிமேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா! எங்கள் கோவே! நிலத்தார் அவர் தமக்கே பொறை ஆய், நாளும், நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் அலுத்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
|
4
|
ஆவடுதுறையில் உறையும் தேவர் தலைவனே ! ஆரவாரித்த அசுரர்களின் மும்மதில்களும் தீயில் வேகுமாறு வில்லை வளைத்து , பார்வதியை அஞ்சுமாறு பார்த்துக் கரிய பெண் யானையைத் தழுவி ஓடிய யானையின் தோலை உரித்தவனே ! முழு எலும்புக்கூட்டை அணிந்தவனே ! எங்கள் தலைவனே ! பூமிக்குப் பாரமாய் , நில்லாத உயிரை உடலில் நிலை நிறுத்த உடலைப் பாதுகாக்கும் கீழ்மகனாகிய அடியேன் அலுத்து விட்டேன் . அடியேனை அஞ்சேல் என்று காப்பாயாக . | |
நறுமாமலர் கொய்து, நீரில் மூழ்கி, நாள்தோறும் நின் கழலே ஏத்தி, வாழ்த்தி, துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே? உறவு ஆகி, வானவர்கள் முற்றும் வேண்ட, ஒலிதிரை நீர்க்கடல் நஞ்சு உண்டு, உய்யக்கொண்ட அறவா! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
|
5
|
நீரில் மூழ்கிப் பின் நறிய சிறந்த மலர்களைப் பறித்து உன் திருவடிகளிலே இட்டு , உன்னைத் துதித்து வாழ்த்தித் துன்பங்களைப் போக்கிய அடியேனை , இவ்வுலகில் ஊழ்வினை வந்து யாது செய்ய இயலும் ? தேவர்களிடத்து உறவு பூண்டு அவர்கள் வேண்டியதனால் கடல் நஞ்சினை உண்டு அவர்களைப் பாதுகாத்த அறவோனாகிய ஆவடுதுறை அமரர் ஏறே ! அடியேனை அஞ்சேல் என்பாயாக . | |
| Go to top |
கோன் நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு, கொழு மலரான் தன் சிரத்தைக் கையில் ஏந்தி, கான் ஆர் களிற்று உரிவைப் போர்வை மூடி, கங்காளவேடராய் எங்கும் செல்வீர்; நான் ஆர், உமக்கு, ஓர் வினைக்கேட(ன்)னேன்? நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே ஆனாய்! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
|
6
|
அரசனாகிய நாராயணனுடைய முழு எலும்புக் கூட்டைத் தோள் மேல் தரித்துப் பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்தி யானைத் தோலைப் போர்த்துக் கங்காள வேடம் தரித்தவராய் , எங்கும் உலவுபவரே ! அடியேன் உமக்கு என்ன உரிமை உடையேன் ? வினையாகிய கேட்டினை உடைய எமக்கு எல்லா நல்வினையும் தீவினையும் ஆகிய ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! அடியேனை அஞ்சேல் என்பாயாக . | |
உழை உரித்த மான் உரி-தோல் ஆடையானே! உமையவள் தம் பெருமானே! இமையோர் ஏறே! கழை இறுத்த, கருங்கடல் நஞ்சு உண்ட கண்டா! கயிலாயமலையானே! உன்பால் அன்பர் பிழை பொறுத்தி! என்பதுவும், பெரியோய்! நின்தன் கடன் அன்றே? பேர் அருள் உன்பாலது அன்றே? அழை உறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
|
7
|
அகவிக்கொண்டு மயில்கள் ஆடும் ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! மானை உரித்து அதன் தோலை ஆடையாக உடையவனே ! பார்வதியின் தலைவனே ! தேவர் தலைவனே ! மூங்கிற் கோல் சுட்டும் ஆழத்தையும் கடந்த ஆழத்தை உடைய கடலின் நஞ்சினை உண்ட நீலகண்டனே ! கயிலாய மலையில் உறைபவனே ! உன் அடியவர் பிழைகளைப் பொறுப்பதும் உன் கடமை அன்றோ ? உன்பால் பேரருள் உண்டு அன்றோ ?. | |
உலந்தார் தலைகலன் ஒன்று ஏத்தி, வானோர் உலகம் பலி திரிவாய்! உன்பால் அன்பு கலந்தார் மனம் கவரும் காதலானே! கனல் ஆடும் கையவனே! ஐயா! மெய்யே மலம் தாங்கு உயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே விழுந்து, அழுந்தி, நாளும் நாளும் அலந்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
|
8
|
ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! இறந்தவ ருடைய தலையோட்டைக் கையில் ஏந்தித் தேவர் உலகில் பிச்சை ஏற்பானே ! உன்பால் அன்பால் கலந்தவர்களுடைய உள்ளத்தைக் கவரும் அன்புடையாய் ! கையில் தீ கொழுந்துவிட்டு எரியுமாறு வைத் திருப்பவனே ! தலைவனே ! உண்மையாகத் தூய்மைஅற்ற இவ்வுடலில் ஏற்பட்ட மயக்கங்களில் விழுந்து அழுந்தி ஒவ்வொருநாளும் வருந்தும் அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வாயாக . | |
பல் ஆர்ந்த வெண்தலை கையில் ஏந்தி, பசு ஏறி, ஊர் ஊரன் பலி கொள்வானே! கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர்; கருதீர் ஆகில், எல்லாரும் என் தன்னை இகழ்வர் போலும்; ஏழை அமண்குண்டர், சாக்கியர்கள், ஒன்றுக்கு அல்லாதார் திறத்து ஒழிந்தேன்; அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
|
9
|
ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! பல் நிறைந்த வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திக் காளையை இவர்ந்து ஊர் ஊராகப் பிச்சை எடுப்பவனே ! பார்வதியும் நீயும் சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்புகிறீர் . நீங்கள் இருவீரும் என்னை ஆட் கொள்ளக் கருதவில்லையென்றால் மக்களெல்லாரும் அடியேனை இகழ்ந்து கூறுவர் . அறிவற்ற பரு உடல்களை உடைய சமணர் புத்தர் ஆகிய பயனற்றவர் தொடர்பை நீக்கிவிட்ட அடியேனை அஞ்சேல் என்பாயாக . | |
துறந்தார் தம் தூ நெறிக்கண் சென்றேன் அல்லேன்; துணைமாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்; பிறந்தேன் நின் திரு அருளே பேசின் அல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே; செறிந்து ஆர் மதில் இலங்கைக் கோமான்தன்னைச் செறு வரைக்கீழ் அடர்த்து, அருளிச் செய்கை எல்லாம் அறிந்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
|
10
|
ஆவடுதுறைத் தேவர் பெருமானே ! துறந்தவர் செல்லும் தூய நெறியிலே வாழ்கின்றேன் அல்லேன் . உனக்கு இணையான மாலைகளைச் சூட்டும் தூய்மை உடையேன் அல்லேன் . உன் திருவருளைப் பற்றிப் பேசியும் அப்படிப் பேசாத நாள்களைப் பயனற்ற நாள்களாகக் கணக்கிட்டும் வாழ்கின்றேன் . செறிவாகப் பொருந்திய மதில்களை உடைய இலங்கை அரசனாகிய இராவணனைச் செறிவான கயிலை மலைக்கீழ் நசுக்கிப் பின் அவனுக்கு அருளிய உன் செயல்களை எல்லாம் அறிந்த அடியேனை அஞ்சேல் என்பாயாக . | |
| Go to top |