பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்; பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்; காணத் தான் இனியான் கடல் நாகைக்கா- ரோணத்தான் என, நம் வினை ஓயுமே.
|
1
|
ஓர் அம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவனும் , தான் அணியாகப் பூணப் பாம்பையும் ஆமையையும் தாங்கியவனும் , காண இனியவனும் ஆகிய கடல் நாகைக் காரோணத்தான் என நம்வினை ஓயும் ! | |
வண்டு அலம்பிய வார்சடை ஈசனை, விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை, கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை, கண்டலும், வினை ஆன கழலுமே.
|
2
|
வண்டுகள் ஒலிக்கும் நீண்ட சடையுடைய ஈசனும் , விண்ணுலகம் பணிந்தேத்தும் மேலானவனும் , தாழை கமழ்கின்ற நாகைக்காரோணனுமாகிய பெருமானைக் காணுதலும் வினைகள் நீங்கும் . | |
புனையும் மா மலர் கொண்டு, புரிசடை நனையும் மா மலர் சூடிய நம்பனை, கனையும் வார்கடல் நாகைக்காரோணனை, நினையவே, வினை ஆயின நீங்குமே.
|
3
|
மாமலர்களைக்கொண்டு புனையும் புரிசடை உடைய நம்பனும் . கள்ளால் நனையும் மாமலரைச் சூடிய நம்பனும் ஆகிய ஒலிக்கும் நீண்ட கடல் நாகைக்காரோணனை நினைய வினைகள் நீங்கும் . | |
கொல்லை மால்விடை ஏறிய கோவினை, எல்லி மாநடம் ஆடும் இறைவனை, கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை, சொல்லவே, வினை ஆனவை சோருமே.
|
4
|
முல்லைநிலத்து விடையேறிய அரசனும் , இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய , கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும் . | |
மெய்யனை, விடை ஊர்தியை, வெண்மழுக் கையனை, கடல் நாகைக்காரோணனை, மை அனுக்கிய கண்டனை, வானவர் ஐயனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
|
5
|
உண்மையே உருவானவனும் , விடையை ஊர்தியாகக்கொண்டவனும் , வெண்மழுவைக் கையிற்கொண்டவனும் , நாகைக்காரோணனும் , ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை . | |
| Go to top |
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை, விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை, கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை, வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
|
6
|
மாலைகள் சேர்ந்த சடையையுடைய ஆதி புராணனை , மலைமங்கையை ஒருபாகம் விரும்பிக் கொண்டவனை , கப்பல்கள் சேரும் கடல்நாகைக்காரோணனை வலம் கொண்டு வணங்குவார் வினைகள் மாயும் . | |
சினம் கொள் மால்கரி சீறிய ஏறினை, இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை, கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை, மனம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
|
7
|
சினங்கொண்ட பெரிய வேழத்தைச் சினந்து பொறாத ஏறுபோல்வானும் , தொகுதி கொண்ட தேவர்கள் ஏத்திய ஈசனும் ஆகிய பெருமைகொண்ட மாமதில் சூழ்ந்த நாகைக் காரோணனை உள்ளத்துக்கொள்ளுவார் வினைகள் மாயும் . | |
அந்தம் இல் புகழ் ஆயிழையார் பணிந்து, எந்தை! ஈசன்! என்று ஏத்தும் இறைவனை, கந்த வார் பொழில் நாகைக்காரோணனை, சிந்தை செய்யக் கெடும், துயர்; திண்ணமே.
|
8
|
ஆயிழையார்கள் பணிந்து முடிவற்ற புகழைப் பாடி எந்தையே ! ` ஈசனே ` என்று வாழ்த்தும் இறைவனாகிய மணம் வீசும் நெடிய பொழில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சிந்தித்தால் திண்மையாகத் துயரங்கள் கெடும் . | |
கருவனை, கடல் நாகைக்காரோணனை, இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை, ஒருவனை, உணரார் புரம்மூன்று எய்த செருவனை, தொழத் தீவினை தீருமே.
|
9
|
உலகிற்கெல்லாம் கருவாகியவனும் . கடல்நாகைக் காரோணனும் , பிரமன் திருமால் ஆகிய இருவருக்கறியவியலாத இறைவனும் , ஒப்பற்றவனும் ஆகிய உணராத அசுரரது முப்புரங்களை எய்த போரை உடைய பெருமானைத் தொழத் தீவினைகள் தீரும் . | |
கடல் கழி தழி நாகைக்காரோணன் தன், வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை அடர ஊன்றிய, பாதம் அணைதர, தொடர அஞ்சும், துயக்கு அறும் காலனே.
|
10
|
கடல் உப்பங்கழிகள் பொருந்திய நாகைக் காரோணன் தன் திருக்கயிலையை எடுத்து ஆர்த்த இராவணனை அடரத் திருவிரலால் ஊன்றிய பாதம் அணைந்தால் துயக்கற்ற காலன் தொடர அஞ்சுவான் . | |
| Go to top |