சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.077   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருச்சேறை (உடையார்கோவில்) - திருக்குறுந்தொகை அருள்தரு ஞானவல்லியம்மை உடனுறை அருள்மிகு சென்னெறியப்பர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=lrthL1RMyoY   Add audio link Add Audio

பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்;
கூரிது ஆய அறிவு கைகூடிடும்-
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரிபாகன்தன் நாமம் நவிலவே.

1
சீர்மை உடையவர்கள் பயிலும் திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் உமையொருபாகனுடைய நாமம் நவின்றால் புண்ணியம் பூரித்துவரும் ; பொய்கெடும் ; கூர்மை உடையதாகிய அறிவு கைகூடும் .

என்ன மா தவம் செய்தனை!- நெஞ்சமே!-
மின்னுவார் சடை வேத விழுப்பொருள்,
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி
மன்னு சோதி, நம்பால் வந்து வைகவே.

2
நெஞ்சமே ! மின்னுகின்ற நீண்ட சடையையுடையவனும் , வேதவிழுப்பொருளும் , செந்நெல் பொருந்திய வயல் உடைய திருச்சேறையுட் செந்நெறியில் நிலைபெற்ற சோதியுமாகிய பெருமான் நம்மிடம் வந்து தங்க , நீ என்ன மாதவம் செய்தாய் !.

பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான் பிணி,
இறப்பு, நீங்கிடும்; இன்பம் வந்து எய்திடும்-
சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல்
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே.

3
திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் சிறப்பை உடைய பெருமான் கழலார் திருவடிகளை மறப்பு இன்றி மனத்துள் வைத்தால் , பிறப்பு , மூப்பு , மிக்கபசி , மிக்கபிணி , இறப்பு ஆகியவை நீங்கி இம்மையிலேயே இன்பம் வந்து எய்தும் .

மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர்,
ஓடி எய்த்தும், பயன் இலை; ஊமர்காள்!
சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய
ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே!

4
ஊமைகளே ! செல்வத்தைத்தேடி மயக்கத்தில் விழுந்து நீர் ஓடி இளைத்தும் பயன் இல்லை ; உயர்ந்தவர்கள் வாழ்கின்ற சேறைச்செந்நெறி மேவிய கூத்தப்பிரான் திருவடிகளை அடைந்து உய்வீர்களாக .

எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன்
துண்ணென்று ஒன்றில்- துரக்கும் வழி கண்டேன்;
திண் நன் சேறைத் திருச் செந்நெறி உறை
அண்ணலார் உளர்: அஞ்சுவது என்னுக்கே?

5
நாள்தோறும் எண்ணி எரியும் வேலும் உடைய கூற்றுவன் துண்ணெனத் தோன்றினால் , அவனைத் துரத்தும் வழி ஒன்று கண்டேன் ; திண்மை உடையவரும் , சேறையுட் செந்நெறி உறையும் அண்ணலாருமாகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?
Go to top

தப்பி வானம், தரணி கம்பிக்கில் என்?
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்?
செப்பம் ஆம் சேறைச் செந்நெறி மேவிய
அப்பனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

6
வானம் முறை தவறி ( வறண்டு ) உலகம் நடுங்கினால் என்ன ? ஒப்பற்ற அரசர்கள் ஒருங்கு உடன் சீறிச்சினந்தால் என்ன ? செப்பம் பொருந்திய சேறையுட் செந்நெறி மேவிய அப்பனார் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?

வைத்த மாடும், மடந்தை நல்லார்களும்,
ஒத்து ஒவ்வாத உற்றார்களும், என் செய்வார்?
சித்தர் சேறைத் திருச் செந்நெறி உறை
அத்தர்தாம் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

7
தேடிவைத்த செல்வமும் , பெண்களும் , ஒத்தும் ஒவ்வாதும் உள்ள சுற்றத்தார் பிறரும் என்ன செய்வார் ? சித்தரும் , சேறையுட் செந்நெறி மேவிய அத்தருமாகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?

குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என் செய்வ?
துலங்கி நீ நின்று சோர்ந்திடல், நெஞ்சமே!
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்கனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

8
நெஞ்சமே ! குலங்கள் என்னசெய்யும் திறத்தன ? குற்றங்கள் என்ன செய்யும் திறத்தன ? மனம் அசைந்து நீ நின்று சோராதே ; விளங்கும் திருச்சேறையில் செந்நெறி மேவிய கொன்றை மாலையணிந்த இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எற்றுக்காக ?.

பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்
விழவிடாவிடில், வேண்டிய எய்த ஒணா;
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய
அழகனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே!

9
பழகினால் வருகின்ற பழமையாய் உள்ள சுற்றத்தாரும் விழவிடாவிட்டால் வேண்டியதை எய்தவொண்ணாது ; விளங்குதலைக்கொண்ட சேறையிற் செந்நெறி மேவிய அழகராகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எற்றுக்கு?

பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான்
வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான்
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே.

10
பொருந்திய உயர்ந்த திருக்கயிலையைத் திருமலையைப் பிடித்து ஏந்தலுற்ற இராவணன் வருந்துமாறு ஊன்றி மலரடியினைச் சற்று வளைத்தவனும் , திருந்திய சேறையிற் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதியும் ஆகிய இறைவனை உரைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சேறை (உடையார்கோவில்)
3.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முறி உறு நிறம் மல்கு
Tune - சாதாரி   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
4.073   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருந் திரு இமவான் பெற்ற
Tune - திருநேரிசை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
5.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூரியா வரும், புண்ணியம்; பொய்
Tune - திருக்குறுந்தொகை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000