திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம் கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில் பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!
|
1
|
கானூரில் தெய்வச்சுடராகிய இறைவன் திருமகள் கணவனாகிய திருமாலும், சிவந்த தாமரை மலர்மேல் உறைகின்ற அழகுடையவனாகிய பிரமனும் ஆகி உலகத்தின் எல்லா உயிர்களுக்கும் கருவிலேயே உற்றுக் காப்பவனாகி முளைத்தவன் ஆவன். | |
பெண்டிர், மக்கள், பெருந் துணை, நன்நிதி, உண்டு இறேழு என்று உகவன்மின், ஏழைகாள்! கண்டு கொண்மின், நீர், கானூர் முளையினை, புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே!
|
2
|
அறிவற்றவர்களே! பெண்டிர், மக்கள் பெருந்துணையாகவுள்ள நல்ல செல்வம் இன்று உண்டு என்று மகிழாதீர்; தாமரையாகிய பொதும்பில் ஒதுங்கியே கானூர் முளையாகிய கடவுளை நீர் கண்டுகொள்வீராக; (அவரே பெருந்துணையாவார்). | |
தாயத்தார், தமர், நன்நிதி, என்னும் இம் மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்! காயத்தே உளன், கானூர் முளையினை வாய்அ(த்)தால் வணங்கீர், வினை மாயவே!
|
3
|
பங்காளியர், தம் சுற்றத்தார், நல்ல செல்வம் என்னும் இம்மாயத்திலே கிடந்து மயங்கவேண்டா; உம் உடலுள்ளேயே உள்ளவனாகிய கானூர் முளையாகிய பெருமானை உங்கள் வினைகள்கெட வாயாற் கூறிப் பரவி வணங்குவீராக. | |
குறியில் நின்று, உண்டு கூறை இலாச் சமண் நெறியை விட்டு, நிறைகழல் பற்றினேன்: அறியல் உற்றிரேல், கானூர் முளை அவன் செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே.
|
4
|
இரத்தற் குறிப்பொடு நின்று ஏற்று உண்ணும் ஆடையற்ற அமண்நெறியைவிட்டு நீங்கி எம்பிரான் அருள்நிறையும் கழலைப் பற்றினேன்; அதற்குக் காரணம் அறியலுறுவீரேல், கானூர் முளையாகிய கடவுள் என்சிந்தையில் செறிவு செய்திட்டிருப்பதே ஆகும். | |
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை மெய்த்தன் என்று வியந்திடல், ஏழைகாள்! சித்தர், பத்தர்கள், சேர் திருக்கானூரில் அத்தன் பாதம் அடைதல் கருமமே.
|
5
|
அறிவற்றவர்களே! பொத்தலை உடையதும், மண்சுவர் உடையதுமாகிய இழிந்த இக்குடிசையைத் தன்மெய் என்று ஒவ்வொருவரும் வியந்திடல் வேண்டா. சித்தர்களும் பத்தர்களும் சேர்கின்ற திருக்கானூரில் இறைவன் பாதம் அடைதலே உமக்குக் கருமம் ஆகும். | |
| Go to top |
கல்வி ஞானக்கலைப் பொருள் ஆயவன், செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை, எல்லியும் பகலும்(ம்) இசைவு ஆனவா சொல்லிடீர், நும் துயரங்கள் தீரவே!
|
6
|
கல்வியும், ஞானமும், கலையும் ஆகியவற்றின் பொருளாயிருப்பவனும், செல்வம் மல்கும் திருக்கானூரில் இருப்பவனும் ஆகிய ஈசன் இரவும் பகலும் இசைந்து அருள்புரிய ஆனவாற்றை உம் துயரங்கள் தீரச் சொல்லுவீராக. | |
நீரும், பாரும், நெருப்பும், அருக்கனும், காரும், மாருதம்-கானூர் முளைத்தவன்; சேர்வும் ஒன்று அறியாது, திசைதிசை ஓர்வும் ஒன்று இலர், ஓடித் திரிவரே.
|
7
|
நீரும், மண்ணும், தீயும், வெயிலும், முகிலும், காற்றும் ஆகிய அனைத்துமாகிக் கானூரில் முளைத்த கடவுளைச் `சேர்தும்` என்ற ஒன்றை அறியாது திசைதோறும் திசைதோறும் உணர்ச்சி சிறிதும் இலராய் ஓடித் திரிவர் உலகத்தவர். | |
ஓமத்தோடு அயன்மால் அறியா வணம் வீமப் பேர் ஒளி ஆய விழுப்பொருள், காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்; சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே.
|
8
|
வேள்விகளாலும். திருமாலும், பிரமனும் அறியாதவண்ணம் இடுகாட்டகத்தே பேரொளியாகிய உயர்ந்த பொருளும், காமனைக் காய்ந்தவனும் ஆகிய கானூர் முளைத்த கடவுள் என் சிந்தையே பாதுகாவலுக்குரிய இருப்பாகக் கொள்வன். | |
வன்னி, கொன்றை, எருக்கு, அணிந்தான் மலை உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்- தன்னை வீழத் தனி விரல் வைத்தவன் கன்னி மா மதில் கானூர்க் கருத்தனே.
|
9
|
இளமையுடைய மாமதில் சூழ்ந்த கானூர்க்கருத்தன், வன்னியும், கொன்றையும், எருக்கும் அணிந்த தனக்குரிய மலையைப் பெயர்த்தெடுக்க உன்னிச்சென்று எடுத்தவனாகிய இராவணனின் ஒண்திறல் தன்னை வீழும்படியாகத் தனி விரல் ஒன்றினால் வைத்து அடர்த்தவனாவன். | |