கான் அறாத கடி பொழில் வண்டு இனம் தேன் அறாத திருச் செம்பொன் பள்ளியான், ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி- தான் அறாதது ஓர் கொள்கையன்; காண்மினே!
|
1
|
மணம் நீங்காத விளக்கம் உடைய பொழில்களில் வண்டினங்களின் தேன் நீங்காத திருச்செம்பொன் பள்ளி இறைவன் , தசைவிட்டு நீங்காத ஒரு வெண்தலையில் பலியினைத் தான் ஏற்றலினின்றும் நீங்காத இயல்புடையவன் ; காண்பீர்களாக . | |
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு அன்பும் ஆயிடும் ஆயிழையீர்! இனிச் செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை நம் பொன்பள்ளி உள்க(வ்), வினை நாசமே.
|
2
|
எலும்பும் , ஆமையும் அணிந்து திரிதருகின்ற செம்பொன்பள்ளி இறைவனும் சிவலோகனுமாகிய பெருமானை அன்பு செய்யும் ஆராய்ந்த இழையை அணிந்த பெண்களே ! அப் பெருமானை நம் அழகிய மனக்கோயிலின்கண்ணே நினைந்தால் நம் வினைகள் நாசமாகும் . | |
வேறு கோலத்தர்; ஆண் அலர்; பெண் அலர்; கீறு கோவண ஐ துகில் ஆடையர்; தேறல் ஆவது ஒன்று அன்று, செம்பொன்பள்ளி ஆறு சூடிய அண்ணல் அவனையே.
|
3
|
வேறுகோலத்தோடு கூடியவரும் , ஆண் , பெண் அல்லாதவரும் , கிழித்த கோவணத்துகிலாடையுடையவரும் , செம்பொன் பள்ளியில் வீற்றிருந்து கங்கையாளைச் சடையிற் சூடிய அண்ணலாகிய அப்பெருமானைத் தெளிந்துகொள்ளுதல் யார்க்கும் எளிதாம் ஒன்றன்று . | |
அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து இருவராய், இடுவார் கடை தேடுவார், தெரு எலாம் உழல்வார்-செம்பொன்பள்ளியார்; ஒருவர் தாம் பலபேர் உளர்; காண்மினே!
|
4
|
அருவருப்புக்கொள்ளாது ஒரு வெண்டலையை ஏந்திவந்து தெருவெல்லாம் உழல்வார் செம்பொன் பள்ளி இறைவர் ; திருமாலும் பிரமனுமாகிய இருவரால் திருமுடி , திருவடிகளின் எல்லை தேடப்பட்ட அவ்வொருவர் பலபெயர்களும் கொண்டு திகழ்வர் ; காண்பீர்களாக . | |
பூ உலாம் சடைமேல் புனல் சூடினான், ஏவலால் எயில்மூன்றும் எரித்தவன்- தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்; மூவராய் முதல் ஆய் நின்ற மூர்த்தியே.
|
5
|
தேவர்கள் சென்று இறைஞ்சுகின்ற செம்பொன் பள்ளி இறைவர் கொன்றைப்பூப் பொருந்திய சடையில் கங்கையைச் சூடியவரும் , ஓரம்பினால் முப்புரம் எரித்தவரும் , மூவர்க்கும் முதலாய் நின்ற மூர்த்தியும் ஆவர் . | |
| Go to top |
சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக் கலவர் ஆவதன் காரணம் என்கொலோ- திலக நீள் முடியார், செம்பொன்பள்ளியார், குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே.?
|
6
|
பெருமைக்குரிய வில்லால் மூன்றெயில்களை எய்த கூத்தரும் , பொட்டணிந்தவரும் , நீண்ட சடாமுடி உடையவருமாகிய செம்பொன்பள்ளி இறைவர் கங்கையைச் சூடியவராய் , பாம்பும் குளிர்பிறையும் கலந்தவராய் ஆவதன் காரணம் என்னையோ ?. | |
கை கொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர், மை கொள் கண்டத்தர் ஆகி இருசுடர் செய்யமேனி வெண் நீற்றர்-செம்பொன்பள்ளி ஐயர்; கையது, ஓர் ஐந்தலைநாகமே.
|
7
|
கையிற்கொண்ட சூலம் உடையவரும் , கட்டு வாங்கத்தை உடையவரும் , திருநீலகண்டரும் ஆகி இருசுடர்களைப் போன்று சிவந்த திருமேனியும் அதிற்பூசிய வெண்ணீற்றினருமாகிய செம்பொன்பள்ளித் தலைவர் கையின்கண் உள்ளது ஓர் ஐந்தலை நாகமாகும் . | |
வெங் கண் நாகம் வெரு உற ஆர்த்தவர், பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர், செங்கண் மால்விடையார்-செம்பொன்பள்ளியார்; அங்கண் ஆய் அடைந்தார் வினை தீர்ப்பரே.
|
8
|
வெவ்விய கண்ணையுடைய நாகத்தினை அஞ்சும்படி ஆர்த்துக்கட்டியவரும் , பசுமையான கண்ணையுடைய ஆனையின் பச்சைத்தோலைப் போர்த்தவரும் , செங்கண்ணையுடைய திருமாலைத் தமக்கு விடையாக உடையவரும் ஆகிய செம்பொன் பள்ளி இறைவர் தம்மை அடைக்கலமாக அடைந்தவர்களின் வினைகளைத் தீர்ப்பர் . | |
நன்றி நாரணன், நான்முகன், என்று இவர் நின்ற நீள் முடியோடு அடி காண்பு உற்றுச் சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான், நின்ற சூழலில் நீள் எரி ஆகியே.
|
9
|
செம்பொன்பள்ளி இறைவர் நன்மை மிக்க நாரணனும் , பிரமனும் ஆகிய இருவரும் நிலைபெற்ற திருமுடியையும் திருவடியையும் காணத்தொடங்கிச் சென்றும் காண்டலரியவராய் நின்ற அச்சூழ்நிலையில் நீண்டு அழலுருவாயினர் . | |
திரியும் மும்மதில் செங் கணை ஒன்றினால் எரிய எய்து, அனல் ஓட்டி, இலங்கைக் கோன் நெரிய ஊன்றியிட்டார்-செம்பொன்பள்ளியார்; அரிய வானம் அவர் அருள்செய்வரே.
|
10
|
செம்பொன்பள்ளி இறைவர் . திரிகின்ற மும்மதில்களைச் செங்கணை ஒன்றினால் எரியுமாறு எய்து அனலினால் ஓட்டி , இராவணன் நெரியுமாறு தம் திருவிரல் ஒன்றால் ஊன்றியவர் ; தம்மை யடைந்த அன்பர்க்கு அரிதாகிய வீட்டுலக இன்பத்தை அப்பெருமான் அருள்வர் . | |
| Go to top |