கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;- பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத் திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.
|
1
|
நீர் பரந்துவருகின்ற காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பராய்த்துறையில் விரும்பி எழுந்தருளியிருக்கும் அருட் செல்வர் , தம்மடியடைந்த அன்பர்கட்குப் பக்குவகாலம் வருந்துணையும் மறைந்துநின்று அருள்வர் : பின் அக்காலம் வாய்த்தவழி , அவர்வினைகளைச் சுருக்கிக் கெடுக்குமாற்றில் வல்லவர் ; செஞ்சடையிற் கங்கையை உடையார் , ( காலத்தில் வந்தடைந்தவர் வினைகளை மறையும்படிச் செய்பவர் ; விரிந்த கங்கையைத் தம் செஞ்சடையில் சுருக்குமாற்றிலும் வல்லவர் என்றும் இணைக்கலாம் .) | |
மூடினார், களியானையின் ஈர் உரி; பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்; சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத் தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.
|
2
|
தென்பராய்த்துறையுறையும் அருட்செல்வர் , செருக்குடைய யானையின் பச்சைத் தோலினால் போர்த்தித் தம் திருமேனியை மூடியவர் ; வேதங்கள் நான்கினோடு , அங்கங்கள் ஆறினையும் பாடியவர் ; மிக்க பெருமையை உடையவர் ; அப் பெருமானைத் தேடிக்கொண்டு சென்று அடியேன் காண்பேன் . | |
பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்; நட்டம் ஆடுவர், நள் இருள் ஏமமும்; சிட்டனார்-தென் பராய்த்துறைச் செல்வனார்; இட்டம் ஆய் இருப்பாரை அறிவரே.
|
3
|
தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் பட்டமணிந்த நெற்றியினை உடையவர் ; பாலனைய நிலவு சொரியும் மதிக்கீற்றினை உடையவர் ; நள்ளிருளில் உலகிற்கு இன்பம் செய்யும் பொருட்டு நடனம் ஆடுபவர் ; உயர்வுடையவர் ; தம்மிடம் விருப்பமாயிருக்கும் அடியார்களைத் தாம் நன்கு அறியும் இயல்பினர் ஆவர் . | |
முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர், என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்- தென்பராய்த்துறை மேவிய செல்வனார்; அன்பராய் இருப்பாரை அறிவரே.
|
4
|
தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் , அறியாமையொடு கூடிய சில சொற்களைப் பலர் முன்னிலையிலும் பேசுவார் . எலும்புகள் பலவற்றைப் பூண்டு திரிவார் . தம்மீது அன்பராய் இருப்பாரை நன்கு அறியும் இயல்பினர் . | |
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன் தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள், வாதை தீர்க்க! என்று ஏத்தி, பராய்த்துறைச் சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே!
|
5
|
உலகில் உள்ளவர்களே ! தென்பராய்த்துறையில் உறைகின்ற ஒளி வடிவான பெருமானை மகரந்தத் தொடும் கூடிய போதுகளைக்கொண்டு புனைந்து தாதவிழும் சடையுடைய அச்சங்கரன் திருவடிகளில் துயரங்களைத் தீர்த்தருள்க என்று பரவித் தொழு தெழுந்து உய்வீர்களாக . | |
| Go to top |
நல்ல நால்மறை ஓதிய நம்பனை, பல் இல் வெண்தலையில் பலி கொள்வனை, தில்லையான், தென்பராய்த்துறைச் செல்வனை, வல்லை ஆய் வணங்கித் தொழு, வாய்மையே!
|
6
|
நெஞ்சே ! தென்பராய்த்துறையில் உறைகின்ற அருட்செல்வரும் , நல்லனவாகிய நான்கு மறைகளை ஓதிய நம்பரும் , பல இல்லங்களிலும் வெள்ளியதலையிற் பலிகொள்ளும் இயல்பினரும் , தில்லைத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய பெருமானை விரைந்து வணங்கி மெய்ம்மையாகத் தொழுவாயாக ! | |
நெருப்பினால் குவித்தால் ஒக்கும், நீள்சடை; பருப்பதம் மதயானை உரித்தவன், திருப் பராய்த்துறையார், திருமார்பின் நூல் பொருப்பு அராவி இழி புனல் போன்றதே.
|
7
|
நெருப்பினைக் குவித்துவைத்தாலொத்த நீண்ட சடை உடையவரும் , மலையினையொத்த மதயானையினை உரித்துப் போர்த்தவரும் ஆகிய திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமார்பிற் புரள்கின்ற முந்நூல் , மலையினை அரித்துக் கொண்டு இழிகின்ற அருவிப்புனலைப் போன்றுள்ளது . | |
எட்ட இட்ட இடு மணல் எக்கர்மேல் பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறைச் சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல், விட்டு, நம் வினை உள்ளன வீடுமே.
|
8
|
வானை எட்டுமாறு இட்ட மணலிடு குன்றின் மேல் நுண்ணிய நீர்த்துளிகள் பாய்கின்ற பராய்த்துறையில் உறைகின்ற உயர்ந்த இறைவன் சேவடிகளிற் சென்று அடையும் வல்லமை உடையீராயின் , நம்வினைகளாய் உள்ளவை நம்மைவிட்டு நீங்கிக் கெடும் . | |
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை; மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும், வாள்மதி; திருப் பராய்த்துறை மேவிய செல்வனார் விருப்பராய் இருப்பாரை அறிவரே.
|
9
|
நெருப்பு அராவி நிமிர்ந்ததனையொத்த நீண்ட சடையையும் , தந்தத்தை அராவி வளைத்ததுபோன்ற பிறைமதியையும் உடையராய்த் திருப்பராய்த்துறையில் விரும்பியெழுந்தருளி இருக்கும் அருட்செல்வர் தம்மிடம் விருப்பமாக உள்ளவர்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவர் . | |
தொண்டு பாடியும், தூ மலர் தூவியும், இண்டை கட்டி இணை அடி ஏத்தியும், பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே.
|
10
|
திருப்பராய்த்துறைத் தலத்து எழுந்தருளியிருப்பவரும் , பாண்டரங்கக் கூத்துடையவரும் ஆகிய இறைவர்க் குற்ற தொண்டுகளைப்பற்றிப் பாடியும் , அப்பெருமான் இணையடிகளில் இண்டைமாலை சாத்தியும் , தூமலர்கள் தூவியும் , கண்டும் , உள்ளத்திற் கொண்டும் அடியேன் உய்ந்து போவன் . | |
| Go to top |
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை, பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை இருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்! பொருக்க, நும்வினை போய் அறும்; காண்மினே!
|
11
|
இராவணனது ஆற்றலை அழித்த அழகனும் , நீர் பரக்கின்ற பொன்னி மன்னுகின்ற பராய்த்துறையில் இருக்கை பொருந்திய ஈசனுமாகிய பெருமானை ஏத்துவீர்களாக ! நும்வினைகள் விரைந்து போய்த் தொலையும் ; காண்பீர்களாக . | |