சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.030   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பராய்துறை - திருக்குறுந்தொகை அருள்தரு பசும்பொன்மயிலம்மை உடனுறை அருள்மிகு திருப்பராய்த்துறைநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=YohZYGl7318   Add audio link Add Audio

கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;-
பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத்
திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.

1
நீர் பரந்துவருகின்ற காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பராய்த்துறையில் விரும்பி எழுந்தருளியிருக்கும் அருட் செல்வர் , தம்மடியடைந்த அன்பர்கட்குப் பக்குவகாலம் வருந்துணையும் மறைந்துநின்று அருள்வர் : பின் அக்காலம் வாய்த்தவழி , அவர்வினைகளைச் சுருக்கிக் கெடுக்குமாற்றில் வல்லவர் ; செஞ்சடையிற் கங்கையை உடையார் , ( காலத்தில் வந்தடைந்தவர் வினைகளை மறையும்படிச் செய்பவர் ; விரிந்த கங்கையைத் தம் செஞ்சடையில் சுருக்குமாற்றிலும் வல்லவர் என்றும் இணைக்கலாம் .)

மூடினார், களியானையின் ஈர் உரி;
பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்;
சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.

2
தென்பராய்த்துறையுறையும் அருட்செல்வர் , செருக்குடைய யானையின் பச்சைத் தோலினால் போர்த்தித் தம் திருமேனியை மூடியவர் ; வேதங்கள் நான்கினோடு , அங்கங்கள் ஆறினையும் பாடியவர் ; மிக்க பெருமையை உடையவர் ; அப் பெருமானைத் தேடிக்கொண்டு சென்று அடியேன் காண்பேன் .

பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்;
நட்டம் ஆடுவர், நள் இருள் ஏமமும்;
சிட்டனார்-தென் பராய்த்துறைச் செல்வனார்;
இட்டம் ஆய் இருப்பாரை அறிவரே.

3
தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் பட்டமணிந்த நெற்றியினை உடையவர் ; பாலனைய நிலவு சொரியும் மதிக்கீற்றினை உடையவர் ; நள்ளிருளில் உலகிற்கு இன்பம் செய்யும் பொருட்டு நடனம் ஆடுபவர் ; உயர்வுடையவர் ; தம்மிடம் விருப்பமாயிருக்கும் அடியார்களைத் தாம் நன்கு அறியும் இயல்பினர் ஆவர் .

முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர்,
என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்-
தென்பராய்த்துறை மேவிய செல்வனார்;
அன்பராய் இருப்பாரை அறிவரே.

4
தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் , அறியாமையொடு கூடிய சில சொற்களைப் பலர் முன்னிலையிலும் பேசுவார் . எலும்புகள் பலவற்றைப் பூண்டு திரிவார் . தம்மீது அன்பராய் இருப்பாரை நன்கு அறியும் இயல்பினர் .

போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்
தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள்,
வாதை தீர்க்க! என்று ஏத்தி, பராய்த்துறைச்
சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே!

5
உலகில் உள்ளவர்களே ! தென்பராய்த்துறையில் உறைகின்ற ஒளி வடிவான பெருமானை மகரந்தத் தொடும் கூடிய போதுகளைக்கொண்டு புனைந்து தாதவிழும் சடையுடைய அச்சங்கரன் திருவடிகளில் துயரங்களைத் தீர்த்தருள்க என்று பரவித் தொழு தெழுந்து உய்வீர்களாக .
Go to top

நல்ல நால்மறை ஓதிய நம்பனை,
பல் இல் வெண்தலையில் பலி கொள்வனை,
தில்லையான், தென்பராய்த்துறைச் செல்வனை,
வல்லை ஆய் வணங்கித் தொழு, வாய்மையே!

6
நெஞ்சே ! தென்பராய்த்துறையில் உறைகின்ற அருட்செல்வரும் , நல்லனவாகிய நான்கு மறைகளை ஓதிய நம்பரும் , பல இல்லங்களிலும் வெள்ளியதலையிற் பலிகொள்ளும் இயல்பினரும் , தில்லைத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய பெருமானை விரைந்து வணங்கி மெய்ம்மையாகத் தொழுவாயாக !

நெருப்பினால் குவித்தால் ஒக்கும், நீள்சடை;
பருப்பதம் மதயானை உரித்தவன்,
திருப் பராய்த்துறையார், திருமார்பின் நூல்
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே.

7
நெருப்பினைக் குவித்துவைத்தாலொத்த நீண்ட சடை உடையவரும் , மலையினையொத்த மதயானையினை உரித்துப் போர்த்தவரும் ஆகிய திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமார்பிற் புரள்கின்ற முந்நூல் , மலையினை அரித்துக் கொண்டு இழிகின்ற அருவிப்புனலைப் போன்றுள்ளது .

எட்ட இட்ட இடு மணல் எக்கர்மேல்
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல்,
விட்டு, நம் வினை உள்ளன வீடுமே.

8
வானை எட்டுமாறு இட்ட மணலிடு குன்றின் மேல் நுண்ணிய நீர்த்துளிகள் பாய்கின்ற பராய்த்துறையில் உறைகின்ற உயர்ந்த இறைவன் சேவடிகளிற் சென்று அடையும் வல்லமை உடையீராயின் , நம்வினைகளாய் உள்ளவை நம்மைவிட்டு நீங்கிக் கெடும் .

நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை;
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும், வாள்மதி;
திருப் பராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்பராய் இருப்பாரை அறிவரே.

9
நெருப்பு அராவி நிமிர்ந்ததனையொத்த நீண்ட சடையையும் , தந்தத்தை அராவி வளைத்ததுபோன்ற பிறைமதியையும் உடையராய்த் திருப்பராய்த்துறையில் விரும்பியெழுந்தருளி இருக்கும் அருட்செல்வர் தம்மிடம் விருப்பமாக உள்ளவர்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவர் .

தொண்டு பாடியும், தூ மலர் தூவியும்,
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும்,
பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே.

10
திருப்பராய்த்துறைத் தலத்து எழுந்தருளியிருப்பவரும் , பாண்டரங்கக் கூத்துடையவரும் ஆகிய இறைவர்க் குற்ற தொண்டுகளைப்பற்றிப் பாடியும் , அப்பெருமான் இணையடிகளில் இண்டைமாலை சாத்தியும் , தூமலர்கள் தூவியும் , கண்டும் , உள்ளத்திற் கொண்டும் அடியேன் உய்ந்து போவன் .
Go to top

அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை,
பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்!
பொருக்க, நும்வினை போய் அறும்; காண்மினே!

11
இராவணனது ஆற்றலை அழித்த அழகனும் , நீர் பரக்கின்ற பொன்னி மன்னுகின்ற பராய்த்துறையில் இருக்கை பொருந்திய ஈசனுமாகிய பெருமானை ஏத்துவீர்களாக ! நும்வினைகள் விரைந்து போய்த் தொலையும் ; காண்பீர்களாக .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பராய்துறை
1.135   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீறு சேர்வது ஒர் மேனியர்,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
5.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group